36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவம்பர் 28 அன்று ரீரிலீஸாகும் ‘அஞ்சான்’ – இயக்குநர் லிங்குசாமி விளக்கம்!

CHENNAI:

தென்னிந்திய திரையுலகில் கடந்த ஆண்டுகளில் வெளியான பல சூப்பர்ஹிட் படங்கள் 4K டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டு வரும் நிலையில், 2014 ஆம் ஆண்டு என். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் தற்போது 4K வடிவில் மறு படத்தொகுப்புடன் நவம்பர் 28 அன்று தமிழகமெங்கும் ரீரிலீஸாகிறது.

சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் செய்திருந்தனர். திருப்பதி பிரதர்ஸ் என். சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்த படம் இது.

இப்படம் ஏன் ரீரிலீஸ் செய்யப்படுகிறது? ஏன் மறு எடிட்டிங் செய்யப்பட்டது? என்பதற்கு பதிலளிக்கும் வகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லிங்குசாமி பல முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.

“ரசிகர்களை ஏமாற்றுவதற்காக படம் எடுக்கவில்லை; சில நேரங்களில் நாமே ஏமாந்துவிடுகிறோம்” — லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, அவர் கூறியதாவது:

“அஞ்சான் படம் முதலில் 2 மணி 36 நிமிடங்களாக இருந்தது. தற்போது 36 நிமிடங்கள் குறைத்துள்ளோம். நீள குறைப்பு மட்டுமே படத்தை மேம்படுத்தும் என்று சொல்லவில்லை. ஆனால் காட்சிகளை மீண்டும் பார்த்தபோது இத்தகைய மாற்றம் தேவையானது என்று தோன்றியது.

11 வருடங்களுக்கு முன்பு இந்த படமே மிக அதிகமான ட்ரோல்களை சந்தித்தது. ஆனால் உண்மையில் படத்தை ரசித்தவர்கள் பின்னர் பார்த்தபோது ‘ஏன் இப்படத்தை அப்போது இவ்வளவு விமர்சித்தார்கள்?’ என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

நான் இதை உலகை புரட்டும் படமாக சொல்லவில்லை. சூர்யாவை ரசிகர்கள் விரும்பும் வகையில் காண்பிக்கும் எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருந்தன. திருப்பதி பிரதர்ஸ் பின்னணியில் இருந்ததால் பெரிய பட்ஜெட்டில் மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் 120 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிந்தது.

ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்தால், சிலருக்கு கோபமும் பொறாமையும் உருவாகும். அப்போது எங்களை தாக்கியவர்கள் இன்று எல்லா படங்களையும் தாக்குகிறார்கள். எனக்கு இனி பயமே இல்லை. 11 வருடங்களுக்கு முன்னால் திட்டியதைவிட இப்போது அதிகமாகத் திட்டப் போவதில்லை.

நான் செய்த சில தவறுகளும் உண்டு. அதை ஏற்கிறேன். ரசிகர்களை ஏமாற்றுவதற்காக எந்த படத்தையும் எடுக்கவில்லை. ஆனால் சில சமயம் நாமே ஏமாந்துவிடுகிறோம்.*

“அஞ்சான் குறித்து அப்போது நான் சொன்ன சில வார்த்தைகளையே தவறாக மாற்றிப் பரப்பினர்”

“அஞ்சான் வெளியான சமயத்தில் நான் ஒரு பேட்டியில் சொன்ன கருத்துகளை சிலர் திரித்து பரப்பினர். அதை யார் செய்தார்கள் எனக்குத் தெரியும். நான் கிராமத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன். வெற்றி பெற்றபோது தன்னம்பிக்கை இருந்தது. அதில் தவறில்லை.

இப்போது ‘தோல்வியை மறைக்க ரீரிலீஸ் செய்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள். இது யாருக்கும் சவால் விடுவதற்கோ, தோல்வி பயத்திற்கோ ரீரிலீஸ் செய்யப்படவில்லை. இதை நான் உண்மையாக விரும்பி எடுத்த படம்.

மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களுக்கே நெகட்டிவ் கருத்துக்கள் வரும். அப்படியிருக்க நாம் அதில் இருந்து விடுபட முடியாது. ரன், சண்டக்கோழி போன்ற எல்லா படங்களும் போல ஒவ்வொரு படமும் வெற்றிபெற முடியாது.

அஞ்சான் வெளியான போது கிடைத்த விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மனதில் கொண்டு தான் இந்த புதிய 4K, ரீ-எடிட் செய்யப்பட்ட வடிவை உருவாக்கியுள்ளோம்.*

“இந்த ரீ-எடிட் படத்தில் எந்த நடிகரின் கேரக்டர்களையும் நோக்கமுடன் நீக்கவில்லை”

“கதையின் ஓட்டத்திற்காகவே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓடிடிக்கு ஏற்கனவே படம் விற்றிருந்தாலும், அவர்கள் விரும்பினால் இந்த 4K ரீ-எடிட் வெர்ஷனையும் ஒளிபரப்பலாம்.

சிவகுமார் சரும் குடும்பத்தாரும் வந்து பார்த்தார்கள். சூர்யா தற்போது ஊட்டியில் படப்பிடிப்பில் இருப்பதால் விரைவில் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன்.”

புதிய படம் பிப்ரவரியில்

“தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்துக்குப் பிறகு மகாபாரதம் படத்தைத் திட்டமிட்டிருந்தேன். தயாரிப்பு அம்சங்கள் காரணமாக அது தாமதமானது. தற்போது பிப்ரவரி மாதத்தில் புதிய படத்தை துவங்குகிறேன். இதில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்.”

இவ்வாறு இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் ரீரிலீஸ் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்தார்.

Director Lingusamy newsFeatured
Comments (0)
Add Comment