’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

திருமலை புரொடக்ஷன் சார்பில் கே.கருப்பசாமி தயாரித்திருக்கும் ‘ஒண்டிமுணியும் நல்லபாடனும்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம். இப்படத்தில் பரோட்டா முருகேசன்,கார்த்திகேசன் ,சித்ரா நடராஜன் ,முருகன், சேனாபதி, விஜயன், விகடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் சக சிறுவர்களுடன் விளையாடும்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விடுகிறான். அவனை மிகவும் சிரமப்பட்டு கிணற்றிலிருந்து தூக்கி மேலே கொண்டு வருகிறார்கள். தன் மகன் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டுபதறிப் போன, பரோட்டா முருகேசன் மகனைக் காப்பாற்ற காவல் தெய்வம் ஒண்டி முனியிடம் கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். அவரது மகன் சிறுவன் உயிர் பிழைக்கிறான்.அவரது வேண்டுதல் நிறைவேறியதும் ஒரு கிடாய் குட்டியை வாங்கி அன்போடு வளர்க்கிறார். ஒரு சில காலம் சென்றதும் கிடாயும், மகனும் வளர்ந்தாலும், கிடாயை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்ற வேண்டிய தருணம் வருகிறது. 

ஆனால் அந்தக் கோவில் இரண்டு பண்ணாடிகளின் சச்சரவால் எந்த வழிபாடும் செய்யாமல்  கிடக்கிறது. கோவில் நடை திறக்கப்பட்டு, ஆண்டு திருவிழா மீண்டும் துவங்கினால் தான், ஆட்டை காவல் தெய்வத்திற்கு பலி கொடுக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படும் பரோட்டா முருகேசன்
ஒவ்வொருவரையும் போய் சமரசப் படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அவர்களோ அவரிடம் வேலை வாங்கிக்கொண்டு அவரது உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு எதுவும் சொல்லாமல்  இழுத்தடிக்கிறார்கள். இதற்கிடையே திருமணம் செய்து கொண்டு சென்ற மகள் போதிய நகை போடாததால் மாமியார் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு தந்தை பரோட்டா முருகேசனிடம் வருகிறாள். மகன் விஜயன் காதலிக்காக இரு சக்கர வண்டி வாங்க ஆட்டை விற்க முடிவு செய்கிறார். குடும்பப் பிரச்சனைகள், ஊர் அரசியல், நம்பிக்கை துரோகங்கள் என பல சிக்கல்களுக்கு மத்தியில், பரோட்டா முருகேசன் தனது ஆட்டு கிடாயை காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு பலி கொடுத்தாரா? இல்லையா ? என்பதை அந்த கிராமத்து மண்ணின் வாழ்வியலாக யதார்த்தமாக சொல்லி இருக்கும் படம்தான் ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.

பல படங்களில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த பரோட்டா முருகேசன், இப்படத்தில் ஏழை விவசாயியாக உணர்ச்சிகரமாக காடு, மேடுகளில் வெறும் காலுடன் நடமாடி அழகாக எடுத்துச் சென்று நல்லபாடனாக அப்பாவித்தனம் கலந்த அந்த கிராமத்தில் நடக்கும் தார்மீக போராட்டத்தை சிரமமின்றி கையாண்டு மிகவும் கஷ்டப்பட்டு தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.

பெரிய பண்ணாடியாக நடித்திருக்கும் கார்த்திகேசன், சிறிய பண்ணாடியாக நடித்திருக்கும் முருகன் இருவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.  தங்களது கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து  தங்களது நடிப்பு மூலம் அற்புதமாக இப்படத்தில் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், காதலியாக கொங்கு தமிழ் பேசும் குமரியாக வித்யா சக்திவேல், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன், விகடன்,  என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் மிக அருமையாக நடித்து பாராட்டு பெறுகிறார்கள்.

நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார்.  இயக்குநரின் சிந்தனையை உணர்ந்து பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பெரும் பலமாக இருப்பது விமலின் ஒளிப்பதிவு என்று கூறலாம். மிகை ஒளி காட்டாமல் இயற்கை ஒளியில் கிராமத்து வாழ்வியலையும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம். ஒரு கிராமத்தில் நடக்கும் எளிய கதையை அந்த மண்ணில் வாழும் மக்களின் உணர்வுகளையும்,  வாழ்க்கை முறைகளையும், மக்கள் மனநிலையையும் ஒரு இயக்குனரின் படைப்புகள் மூலம்தான்வெளிப்படுத்த முடியும் என்பதை நிஜமாக்கும் விதமாக இந்தப்படத்தைக் கொடுத்து நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’  அனைவர் மனதையும் கவரும் ஒரு உன்னதமான படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.

 

 

 

"Ondi Muniyum Nalla Paadanum" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment