’சிறை’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

விக்ரம் பிரபு ,எல். கே .அக்ஷய் குமார் ,அனிஷ்மா அனில் குமார், ஆனந்தா தம்பிராஜா,மூணாறு ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “சிறை” . திரைக்கதையை இயக்குநர் தமிழுடன் இணைந்து அமைத்துப் படத்தை  இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.

மூலக்கதை இயக்குநர் தமிழ்,.ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்,இசை : ஜஸ்டின் பிரபாகரன்,படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு: ராகவன் சஞ்சீவி
ஆடை வடிவமைப்பு: வர்ஷினி சங்கர்,நடன அமைப்பு: லீலாவதி குமார்,சண்டை அமைப்பு: பி.சி. ஸ்டண்ட்ஸ்,தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ். வெங்கட், நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: அருண் கே, மணிகண்டன்,செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஓருகொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் விசாரணைக் கைதி அப்துல் ரவூப் என்கிற எல். கே .அக்ஷய் குமாரை கதிரவன் என்கிற தலைமைக் காவலர் விக்ரம் பிரபு , உள்ளிட்ட காவலர் குழு வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு ஒரு பேருந்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர்.  உணவுக்காக பேருந்து ஓரிடத்தில் நிற்கும்போது உடல் உபாதை கழிக்க வேண்டும் என்று சொல்கிறான் அப்துல். ஆனால் அவன் தப்பித்து விடுவான் என்கிற எச்சரிக்கை உணர்வு இருந்தாலும் மனிதாபிமானத்துடன் அவனை கழிவறைக்குள் அனுமதிக்கிறார்கள். உடல் உபாதை கழித்து விட்டு வெளியே வந்தவனை காவலர்கள் பேருந்தில் ஏற்றுகிறார்கள். இதனிடையே ஒரு காவலர் சிறு நீர் கழிக்க சென்றபோது அங்குள்ள உள்ளூர்வாசிகள் மத்தியில் வாய் சண்டை ஏற்பட்டு அதுவே மோதலாக மாறிக் காவலரைக் தாக்குகிறார்கள்.

இதை அறிந்த தலைமைக் காவலரான  விக்ரம் பிரபு பதறி அங்கே ஓடி வந்து அவரை மீட்கிறார். பிறகு திரும்பி வந்து பார்க்கும்போது அதற்குள் அந்தப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுப் போய் விடுகிறது. விசாரணைக் கைதி அப்துல் அந்த பேருந்திலேயே சென்று விடுகிறார். காவலர்களின் துப்பாக்கியும் அந்த கைதியுடன் சென்று விடுகிறது. உடனே காவலர் குழு அந்த பேருந்தை துரத்தி சென்று நிறுத்திப் பார்த்தால் அந்த விசாரணைக் கைதி கையில் துப்பாக்கியுடன் தப்பி விடுகிறான். இந்த இக்கட்டான சூழலில் தலைமைக் காவலர் விக்ரம் பிரபு மற்றும் அவரது குழுவினர் அந்த விசாரணைக் கைதி எல். கே .அக்ஷய் குமாரை கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்த விசாரணைக் கைதியின் பின்னணி என்ன?  என்பதுதான் “சிறை” படத்தின் மீதிக் கதை.

‘டாணாக் காரன்’ படத்தில் பயிற்சிக் காவலராக நடித்த அதே விக்ரம் பிரபு தான் இப்படத்திலும் கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் காக்கி சட்டை அணிந்த காவலராக நடித்துள்ளார். தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். சினிமாத்தனமாக இல்லாமல் எதார்த்தமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைமைக் காவலராக  விக்ரம் பிரபு மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, சில காட்சிகளில் அவர் பேசவே இல்லை. அவர் தன் கண்கள் மூலமாகவே பேசுவதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

இப்படத்தில் அப்துல் ரவூப் என்ற கதாபாத்திரத்தில் கொலைக் குற்றம் செய்த கைதியாக வருகிற அறிமுக நடிகர் அக்ஷய் குமார் ஒரு புதுமுகம் என்று நம்ப முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே மாறி தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, கண் கலங்க வைத்து விடுகிறார்.

அப்துலின் காதலியாக கலையரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிஷ்மா அனில் குமார் துறுதுறுவென்ற தோற்றம் இருந்தாலும் அவருடைய அழகு, அழுகை ஆகியன ரசிகர்களை கவரக் கூடியதாக மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜா – குறைவான காட்சிகள் என்றாலும், கதாபாத்திரக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ்,  காதர் பாஷா என்கிற கதாபாத்திரத்தின் மூலம், முஸ்லிம் மக்களைப்பற்றி பேசும் வசனத்தினால் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் கதைக்களத்திற்கு ஏற்றவாறு கடுமையாக உழைத்து காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.

ஜஸ்டின் பிரபாகரன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.

‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார். அவர் தன் உண்மை வாழ்க்கையில் காவலராக இருந்தவர் என்பதால் அவர் அறிந்த உண்மை நிகழ்வைக் கதையாக்கி அனைவரது பாராட்டையும் பெறுகிறார்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, கதையின் கருவை தன் மனதில் பதிய வைத்து காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாக தெரிய வைத்து, மிக  எதார்த்தமாக ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன உணர்வுகளை தெளிவாக புரிய வைத்திருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.

மொத்தத்தில் ’சிறை’ ஓர் உணர்ச்சிகரமான உன்னதமான படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.

 

"SIRAI: MOVIE REVIEW NEWSFeatured
Comments (0)
Add Comment