சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா, குலப்பள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “பாராசக்தி’
இப்படத்தை சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
1964 -65 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் தமிழ்நாடு கடந்து வந்த மொழிப் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகிற படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. நம் தமிழக வரலாற்றின் சில பக்கங்களைப் பின்னணியாக கொண்டு, ஒரு இனத்தின் அடையாளம், உரிமை, தியாகம், கண்ணீர், போராட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்றவாறு கதையமைத்து இந்த ‘பராசக்தி’ படம் உருவாகி இருக்கிறது.
இந்தியாவில் இந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு பிறமொழி பேசும் வட மாநிலங்களில் மக்களின் விருப்பத்திற்கும் ஜனநாயக உரிமைக்கும் எதிராகத் இந்தி மொழியை திணித்தது போல, தமிழ்நாட்டிலும் வேற்று மொழியான இந்தியை திணிக்க முயன்றபோது அரசியல் தலைவர்களும், மாணவர்களும் பொங்கி எழுகிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் புறநானூற்றுப் படை என்கிற இயக்கத்தை அனைத்து மாணவர்களும் இணைந்து தொடங்குகிறார்கள். இந்தி மொழிக்கு எதிராக உருவான அந்த இயக்கம் மக்கள் மத்தியில் புரட்சியாக வளர்ந்து, அதில் துடிப்பு மிக்க மாணவரான சிவகார்த்திகேயன் தலைமையில் ரயில் எரிப்பு போராட்டம் நடத்துகிறது.
அப்போது அந்த புறநானூற்றுப் படை இயக்கத்தை சேர்ந்த மாணவர்களை ஒடுக்கவும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் போலீஸ் அதிகாரி ரவி மோகன் வருகிறார். இந்த சூழலில் மத்திய அரசின் எம்.பி.யின் மகள் ஸ்ரீலீலாவும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொள்கிறார். தெலுங்கு மொழிப் பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழி உரிமையின் வலியை புரிந்து கொண்டு இந்த போராட்டத்திற்கு துணை நிற்கிறார். இந்தி திணிப்பை மத்திய அரசு கையில் எடுக்கும் போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் போராட்டக் களத்தில் குதிக்கின்றனர். அப்போது அந்தப் போராட்டத்தை அடக்க போலீஸ் அதிகாரி ரவி மோகன் துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார். இறுதியில் இந்தி மொழிக்கு எதிராக உருவான போராட்டத்தில் மாணவர்கள் வென்றார்களா? போலீஸ் அதிகாரி ரவி மோகன் புறநானூற்றுப் படை இயக்கத்தை ஒழித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘பராசக்தி” படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் மாணவர் தலைவர் செழியனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் .இது சிவகார்த்திகேயனின் 25 வது படம் என்பதால் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒரு முதிர்ச்சியான நடிப்பை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி மிரட்டி இருக்கிறார். சண்டை காட்சிக்காக கடுமையாக சிரமப்பட்டு உழைத்து நடித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தி திணிப்பால் தனக்கு வர வேண்டிய வேலை கிடைக்காமல் போனதும் மீண்டும் இந்தி மொழி எதிர்ப்புக்கு பொங்கி எழும்போது, தியேட்டரை அதிர வைக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக எதிர் வீட்டுக் காதலியாக வரும் ஸ்ரீலீலா இப்படத்தில் ரத்ன மாலா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். தெலுங்கு மொழி பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழியுரிமையின் தன்மையைப் புரிந்து கொண்டு இவர்களுக்கு ஆதரவு கொடுப்பவராக அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படத்தில் திரு நாடன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஜெயம் ரவி, இதுவரை இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு போலீஸ் அதிகாரியாக, எத்தனை உயிர் போனாலும் சரி, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நம் மனதை பதைக்க வைக்கின்றது.
சிவகார்த்திகேயன் தம்பியாக சின்னத்துரை பாத்திரத்தில் வரும் அதர்வா முரளி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு துள்ளலான, துடிப்பு மிக்க இளைஞனாக, தன் உயிரை கொடுத்தாவது தமிழைக் காக்க வேண்டும் என்ற அவரது கதாபாத்திர முடிவு படத்திற்கு உணர்ச்சிகரமானதாக இருக்கிறது.
ராணா டகுபதி, சேத்தன், காளி வெங்கட் போன்ற இப்படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் காட்சிகளை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு வரலாற்றுத் தன்மையோடும் ஒரு திரைப்படத்திற்கான காட்சித் திருப்பங்களோடும் காட்சிகளை தனது சிறந்த ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்து படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனை பாராட்டியே தீர வேண்டும்.
தனது நூறாவது படமாக இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் படத்தின் கால நிலைக்கு ஏற்றவாறு பாடல்களையும், பின்னணி இசையில் அந்தக் காலகட்டத்தை நினைவில் நிறுத்துகின்ற அளவிற்கு அந்த வரலாற்று இசையையும் அமைத்து இருப்பது ரசிக்க வைக்கிறது.
இப்படத்தின் கதை, சென்னை, மதுரை, திருச்சி,கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி. டெல்லி என்று பல இடங்களுக்குத் நம்மை அழைத்து செல்கிறது. இந்தி திணிப்புக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை கையெழுத்து இயக்கம் மூலம் பிரதம மந்திரி முன்னிலையில் நிரூபிக்க முயற்சி செய்யும் காட்சிகளையும், ஒரு வரலாற்றுத் தன்மையோடும் ஒரு முழு திரைப்படத்தின் உணர்வுகளை பல திருப்பங்களோடு இயக்கி இருக்கும் சுதா கொங்கரா, இன்றைய இளம் தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இந்த வரலாற்று பதிவை ஒரு சான்றாக புரிந்துக் கொள்ள இந்த கதையை அழகாக உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்.
மொத்தத்தில் ‘பராசக்தி’ என்ற இப்படம் மொழி போராட்டத்தை ஆழமாகச் சொல்கிறது.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.