’திரெளபதி 2’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ரிச்சர்டு ரிஷி , நட்டி, வேல ராமமூர்த்தி, ரக்ஷனா இந்துசூடன், ஒய் ஜி மகேந்திரன், தினேஷ் லம்பா, சிராங் ஜானி, பரணி, தேவயானி சர்மா, கணேஷ் கவுரங் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “திரௌபதி-2”. இப்படத்தை மோகன் ஜி. இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

14-ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டு, தென்னிந்தியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை மையமாக கொண்டு, அப்போதுள்ள அரசியல் – சமுதாய சம்பவங்களை வல்லாள மகாராஜா மற்றும் அவர் கீழ் ஒரு சிறு பகுதியை ஆட்சிபுரிந்த கடவராயர்கள் பற்றியும், அவர்கள் முஸ்லிம்களின் படையெடுப்பை எதிர்த்து போரிட்டதை பற்றியும்  யாருக்குமே தெரியாத ஒரு முக்கிய  வரலாற்றை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மோகன்.ஜி,

விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற ஊரில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என அறிவிக்கப்படுகிறது.  இதனை அந்த ஊர் மக்கள் எதிர்க்கும்போது நாயகன் ரிச்சர்டு ரிஷி  அதற்கு எதிராக குரல் கொடுத்து அந்த நிலம் குறித்து ஊர் மக்களுடன் இணைந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றனர்.  இந்த சமயத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு இளம் பெண்களின் தந்தை ஊடக செய்தியை கண்டதும், அந்த ஊரில் உள்ள ஒரு பழமையான கோயிலை புதுப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தனது மகள்களை அந்த ஊருக்கு அனுப்புகிறார்.  அப்போது அவர்களுக்கு வழிகாட்டியாக வரும் இளைஞர் ரிச்சர்ட் ரிஷியுடன் அந்த பழமையான கோவில் உள்ளே சென்றதும்  இரண்டு பெண்களில் ஒருவரான ரக்ஷனா இந்துசூடன் உடலில்  அமானுஷ்ய சக்தி புகுந்து தூய தமிழில் பேசுகிறார். அப்போது இப்படத்தின் கதை 14ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. அந்த நிலத்தையும் மக்களையும் சுல்தானிய ஆட்சியிலிருந்து காப்பாற்றிய வீர சிம்ம கடவ ராயரின் வீர வரலாறு சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலைப் பகுதியை சேர்ந்த வீர சிம்ம கடவராயர் ரிச்சர்ட் ரிஷி,  ஹோய்சாலப் பேரரசர் வீர வல்லாள மகாராஜா நட்டியின் கருட படையில் இணைந்து பணியாற்றுகிறார். இந்த சூழ்நிலையில்  மதுரை சுல்தானாக விளங்கும் தினேஷ் லம்பா மற்றும் டெல்லியில் முகலாய அரசின் சுல்தான் துக்ளக் சிராக் ஜானி  இருவரும் இணைந்து வல்லாள மகாராஜா நட்டியை தீர்த்து கட்டி அல்லது மதம் மாற்றி
தங்களது அடிமை ராஜ்யமாக மாற்ற திட்டமிடுகிறார்கள். தனது ராஜ்யத்தை தென்னிந்தியா வரை விரிவாக்க எண்ணி,  சுல்தானிய ஆட்சியாளர்கள் காட்டு மிராண்டித்தனமான, பெண்களை காம இச்சைக்கு பயன்படுத்துபவர்களாகவும், நாடு முழுவதும் உள்ள இந்துக்களை, இஸ்லாமியத்துக்கு மதம் மாற வற்புறுத்தி கொடுமையும் செய்து வருகின்றனர். மதம் மாற மறுக்கும் அத்தனை இந்துக்களையும் கொல்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த வல்லாள மகாராஜா நட்டி அவர்களை எதிர்த்து போரிடும்போது கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

மகாராஜாவையும், கருட படை வீரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வருந்தும் வீரசிம்ம கடவராயர் ரிச்சர்ட் ரிஷி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது, மகாராஜா அவர் முன் தோன்றி சில பொறுப்புகளை கொடுக்கிறார். மகாராஜாவின் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம கடவராயர் ரிச்சர்ட் ரிஷி, ஹோய்சால மன்னனை நோக்கி செல்லும் போது, அவரது மனைவி திரௌபதி தேவி ரக்ஷனா இந்துசூடன்,  ஒரு சூழ்ச்சிக்கார அரசவை அதிகாரியின் சதிவலையில் சிக்கி, தன் கணவர் ரிச்சர்ட் ரிஷியை, தவறாக நினைத்து அவரை விட்டு பிரிகிறார். இறுதியில் சதிவலையில் சிக்கிய திரெளபதி தேவி ரக்ஷனா இந்துசூடனின் நிலை என்ன ஆனது?  முஸ்லிம் மன்னர்களுக்கு எதிராக வீரசிம்ம கடவராயர் ரிச்சர்ட் ரிஷி எடுக்கும் வீரதீர முடிவுகள் என்ன? என்பதுதான்  “திரௌபதி-2” படத்தின் மீதிக் கதை.

வீரசிம்ம கடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கடுமையாக உழைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. அவரது  நடிப்பு, சண்டைக் காட்சிகள், அரசரிடம் உள்ள விசுவாசம், தோற்றம் மற்றும் உடல் மொழி என  நம் மனதை     நெகிழ வைக்கின்றன.

வீரவல்லாள மகாராஜா  கதாபாத்திரத்தில் நட்டி நடித்திருக்கிறார். முதன்முறையாக நட்டியை அரசர் வேடத்தில் பார்க்க முடிகிறது. 80 வயதை கடந்த ஒரு அரசராக இருந்தாலும் ராஜ கம்பீரம் மட்டும் மாறவில்லை என்பதை அவரது வேகமான நடை மற்றும் தெளிவான வசன உச்சரிப்பு மூலம் தனது சிறப்பான நடிப்பில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நட்டி.

திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடன் அழகும், வசீகர தோற்றமும் மிகுந்தவராக படம் பார்ப்பவர்களின் மனதை ஆக்கிரமிக்கின்ற அளவிற்கு  மிக சிறந்த முறையில் வீரமிக்க பெண்ணாக, தன் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் மிக நேர்த்தியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

டெல்லி சுல்தானாக நடித்திருக்கும் சிராக் ஜானி,மதுரை தம்பானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார்கள்.

முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருணோதயன் லஷ்மணன் ஆகியோர் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பிலிம் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவில் வரலாற்றுக் காலகட்டத்தை மிக தெளிவாக அழகாகக் காட்சிகளைக் கண் முன் காணமுடிகிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

இந்த மண்ணின் மைந்தர்கள் எத்தனையோ போராட்டங்களையும், வலிகளையும் கடந்துதான் நம் நாட்டை காப்பாற்றி இருக்கிறார்கள் என்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதைக் களத்தை தேர்வு செய்து,  முகலாயர்கள் இந்துக்கள் மீது நடத்திய கொடூரங்களை விவரிக்க முயன்றிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, இந்த படத்தில் மதரீதியாக சில கருத்துக்களை கூறியிருந்தாலும் அது வரலாற்று பின்னணியில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை உணர வைத்து இருக்கிறார். .பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய கருத்துக்கள் இருந்தாலும் அனைத்து ரசிகர்களையும் கவரக் கூடிய விதத்தில் இப்படத்தை இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் ’திரெளபதி 2’ ஒரு வரலாற்று சான்று.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.

 

 

 

 

"Draupathi 2" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment