‘காந்தி டாக்ஸ்’ – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைத்ரி, சித்தார்த் ஜாதவ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘காந்தி டாக்ஸ்’. இப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி இருக்கிறார். இதில் எந்த வசனங்களும் இல்லாமல் மனித வாழ்க்கையின் வலியை, நம்பிக்கையை, நேர்மையை பேச முயலும் ஒரு ஊமைப் படமாக இயக்கி இருக்கும் இயக்குனரின் முயற்சியை பாராட்ட வேண்டும்.

1987 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அமலா,பிரதாப் போத்தன் போன்ற பலர் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் ‘பேசும் படம்’. ஆனல் அப்படத்தின் சிறப்பு என்னவென்றால் அதில் நடித்த யாரும் வசனங்கள் பேசாமல் முகபாவனை, உடல் மொழி, சைகைகள் மூலம் பேசும் காட்சிகளை புகுத்தி இயக்கி இருந்தார் சிங்கீதம் சீனிவாசராவ். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற ஊமைப்படம் ‘காந்தி டாக்ஸ்’ என்ற பெயரில் வெளி வந்திருக்கும்,

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மும்பையில் அடுக்குமாடிகளை கட்டி விற்கும் தொழில் அதிபராக அரவிந்த்சாமி திகழ்ந்து வருகிறார். அதே சமயத்தில் மும்பையில் ஏழைகளின் குடியிருக்கும் பகுதியில் வாழும் விஜய் சேதுபதிக்கு எந்த வேலையும் கிடைக்காததால் உண்ண உணவின்றி தவிக்கிறார். ஒருநாள் அவர் வேலை தேடி செல்லும் போது அங்குள்ள மேனேஜர் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு வேறு ஒருவருக்கு வேலையை கொடுக்கிறார்.  எங்கு சென்றாலும் லஞ்சம் என்பதால் வேதனையில்  இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் பெரிய பணக்காரராக விளங்கும் அரவிந்த்சாமியின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயன்று 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு தெரியாமல் திருடி வருகிறார்.

இந்த சூழலில் அரவிந்த்சாமிக்கு தெரிந்த ஒரு  சிலரின் சதியால் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.  அதனால் மன வேதனையடைந்த அவர் தன் பங்களாவை கொளுத்தி விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிடுகிறார்.  இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி தன் காதலி சொன்ன புத்திமதிகளை கேட்டு தான் திருடிய 50 ஆயிரம் பணத்தை அரவிந்த்சாமியிடம் கொடுக்க வருகிறார். அப்போது விஜய் சேதுபதி திருடிய பணத்தை  அரவிந்த்சாமி  வாங்கினாரா? இல்லையா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் மீதி கதை.

கதாநாயகன், வில்லன் போன்ற எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறும் விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் பேசாமலே நடிக்க வேண்டும் என்கிற சவாலை ஏற்றுக் கொண்டு முகபாவனைகள், உடல் அசைவுகள் மற்றும் சைகைகள் மூலம் எதார்த்தமாக நடிப்பில் அசத்திருக்கிறார்.

பணக்கார கோடீஸ்வரரான அரவிந்தசாமி தொழிலில் நஷ்டம் அடைந்து வேதனைப்படும்போது, தனது நடிப்பை செவ்வனே செய்து வரவேற்புப் பெறுகிறார்.

கவர்ச்சி கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கும் அதிதி ராவ் இந்த படத்தில், விஜய் சேதுபதியின் காதலியாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் மிக சிறப்பக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

சித்தார்த் ஜாவ் கதாபாத்திரம், மௌனமாக பேசாமல் ரசிகர்களை சிரிக்க வைத்து செல்கிறார்.

பணக்கார வாழ்க்கையை வெளிப்படுத்தும் அரவிந்த் சாமியின் வீட்டையும், வசதி இல்லாத ஏழையின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியின் வீட்டையும் இயற்கையாக காட்டிய,  கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன.

இப்படத்தில் வசனங்கள் இல்லை என்று நினைக்க முடியாத வண்ணம், அந்தக் கால இசையை படம் முழுவதும் இழையோடச் செய்து வித்தியாசமாக பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் அமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

கிஷோர் பாண்டுரங் பலேகர் எழுதி இயக்கியிருக்கிறார்.  ஜாதி அரசியல், பழிக்கு பழி, துப்பாக்கி, கத்தி கலாச்சாரம் எதுவும் இல்லாமல் ஒரு உன்னதமான கதையை தேர்வு செய்து, மற்ற படங்கள் மத்தியில் இப்படத்தின் காட்சிகளினூடே நாட்டின் அவலங்களைப் பற்றி அனைவரையும் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.. எந்த வசனங்களும் இல்லாமல் மும்பையில் உள்ள சூழல்களையும், உணர்வுகளையும் சிறந்த முறையில் வெளிக்காட்டி அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘காந்தி டாக்ஸ்’  ஊமைப் படமாக இருந்தாலும் மக்களிடம் பேசும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

 

"Gandhi Talks" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment