ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்தான் ‘மை லார்ட் ‘ இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தற்போது தமிழ்நாட்டில் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் அந்த நோயாளிக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக கிட்னி திருடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இந்த கிட்னி திருட்டை மையமாக வைத்து இயக்குனர் ராஜமுருகன், ஒரு மனிதநேய கொள்கையை மையமாகக் கொண்டு அதன் கதையை ரசிகர்கள் ரசிக்கின்ற வகையில் ‘மை லார்டு’ படத்தை இயக்கியிருக்கிறார்.
கோவில்பட்டி என்ற ஊரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் சசிகுமார் தனது சிறிய வயதில் இருந்து வள்ளலாரின் பெயரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்கிறார். அந்த அனாதை ஆசிரமத்தின் நடத்திக் கொண்டிருந்த பெரியவர் தனது மகளான சைத்ராவை அவர் இறக்கும் தருணத்தில் சசிகுமாரிடம் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் சைத்ராவை திருமணம் செய்து கொள்ள அந்த அனாதை விடுதி உள்ள வார்டன் வற்புறுத்துகிறார். பல பேரைப் பார்த்தும் அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத சூழலில், சசிகுமாரை திருமணம் செய்யவே விரும்புகிறார். இருவருமே வாலிப வயதில் இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த சமயத்தில் தனது மனைவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதால் மருத்துவ சிகிச்சைக்காக கந்துவட்டிக்காரரிடம் பணத்தை வாங்கி தன் மனைவி சைத்ராவுக்கு ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை செய்ய முற்படுகிறார். ஆனால் ஒவ்வொரு மருத்துவமனையாக மாற்றி மாற்றி சைத்ராவை அழைத்துச் செல்ல.. இதற்காக வட்டிக் கடைக்காரனிடம் திரும்பத் திரும்ப கடன் வாங்குகிறார். இதனால் கடன் தொகை அதிகமாகி அவதிப்படும்போது, சசிகுமாருக்கு கடன் வாங்கிக் கொடுத்த புரோக்கர் இந்தக் கடனிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரே வழி… உன் சிறுநீரகத்தை விற்றுவிடு “என்கிறார்.
இந்த சூழலில் மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. அவரது இரத்தப் பிரிவு மிகவும் அரிதானது என்பதால், எங்கும் அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைக்காததால் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேடும்போது, இருவர் அதற்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அடுத்து கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமாரும் தான். அதனால் சசிகுமாரின் சிறுநீரகங்கள் மத்திய அமைச்சர் ஆஷா சரத்துக்குத் தேவைப்படுவதால் அவரது செயலாளர் அவர்களிடம் மனம் உருக பேசி இருவரையும் மருத்துவ சிகிச்சை நடக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.அங்கே போனால் சசிக்குமாரின் மனைவி சைத்ராவின் சிறுநீரகம் திருடப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இறுதியில் சசிகுமார் ஆஷா சரத்துக்கு சிறுநீரகம் கொடுத்தாரா? இல்லயா? என்பதுதான் ‘மை லார்ட்” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் சசிகுமார்.தீப்பெட்டித் தொழிலாளி கதாபாத்திரதிற்க்கு அலட்டிக் கொள்ளாத தனது நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரமாகவே பொருந்தி வாழ்ந்து இருக்கிறார் அவரது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பு வழக்கம்போல் ரசிகர்களை கவர்கிறது. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடுவது அசத்தல்.
துறுதுறுவென்ற தோற்றம் படபட பேச்சு என்று கிராமத்து தைரியசாலி பெண்ணாக சசிகுமாரின் மனைவியாக சுசிலாவாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார் தனது தத்ரூபமான நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், ஆணவம் அதிகாரம் போன்ற செருக்கையும் திமிரையும் முகத்தில் காட்டி அழகாக நடித்துள்ளார்.
மக்கள் குத்து எனும் பத்திரிக்கையில் நியாயத்திற்குப் போராடும் எதற்கும் விலை போகாத நடுநிலையான பத்திரிகையாளர் நா. கதிர்வேலனாக வருகிறார் குரு சோமசுந்தரம்.
புரோக்கராக நடித்திருக்கும் அருள் எழிலன்,சமுதாய அவலங்களின் மொத்த உருவமாகத் தோன்றியிருக்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்குரைஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், கந்துவட்டிக்காரராக வரும் வசுமித்ர ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இந்தக் கதைக்களத்தை உணர்ந்து எளிய மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையை ரசிகர்கள் ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், ஜோக்கர்’ ‘குக்கூ’ போன்ற அழுத்தமான படைப்புகளைக் கொடுத்த அவர் இப்படத்தில் அதிகார வர்க்கத்தின் சுரண்டல்களையும், பல அமைப்புகளின் சீர்கேடுகளையும் சிறுநீரக திருட்டுச் சதிகளை முறியடித்துத் தன் அடையாளத்தை இப்படத்தின் மூலம் காட்டி வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மை லார்ட்’ படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.