ஆழி – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘ஆழி ‘ இப்படத்தை மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் சரத்குமார் பல போதை மருந்துகள் போன்ற திரை மறைவு வேலைகள் செய்யவராக இருக்கிறார். ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் அவர் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், தன்னுடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இதை யாரோ புகைப்படம் வீடியோ எடுத்து சரத்குமார் தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறார்கள். அதைப் பார்த்தவர் கொதித்து எழுகிறார் .எழுந்தவர் இந்திரஜித் ஜெகஜித்தை தனியே வரும்போது துரத்தி அடித்து மயக்கம் அடையச் செய்து கடத்திக்கொண்டு சென்றவர் நடுக்கடலில் பெரிய மீன்பிடிப்படகில் ஐஸ் அறையில் ஒளித்து வைக்கிறார். ஆழ்கடலில் வைத்து கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், சரத்குமாரிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் “ஆழி” படத்தின் மீதிக்கதை.

தந்தை கதாபாத்திரம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், அதில் முடிந்தவரை மாறுபட்ட முறையில் நீண்ட தலைமுடி தாடி ஆகியனவற்றை வைத்து தோற்றத்தை மாற்றிக் கொண்டு,  தன் நடிப்பை  வெளிக்காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு வில்லனைப் போலத் தோன்றினாலும், மகளின் மீதான பாசத்தை அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் அபாரம்.

அவரது மகளாக வரும் நடிகை தேவிகா சதீஷ்அளவாக வந்து இதமாக மனதில் அமர்கிறார். சரத்தின் மகளைக் காதலிக்கும் வாலிபனாக அருள் பாத்திரத்தில் வரும் நடிகர் இந்திரஜித் ஜெகஜித் புதுமுகம் போல் தோன்றாமல் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து உயிர் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் வரும் வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலரும் துணைபாத்திரங் களில்  சிறப்பாக நடித்துள்ளனர்.

‘லஜ்ஜாவதியே’ என்ற பாடலை மனதில் கொண்டு பாடல்களைக் கேட்டால் ஏமாற்றம் கொடுத்திருக்கிறார் ஜாஸி கிப்ட்.. வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும்,ரசூல் பூக்குட்டியின் ஒலிவடிவமைப்பும் கடலுக்குள் இருக்கும் ஒலிகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் நடக்கின்றன. உண்மையாகவே அங்குபோய் சிறப்பான முறையில் படப்பிடிப்பு நடத்திய உணர்வைக் கொடுத்திருக்கிறார்.

மாதவ் ராமதாசன் எழுதி இயக்கியிருக்கிறார். கௌரவம் பார்க்கும் ஒரு தந்தைக்கும், உயிர் பிழைக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் இடையே நடுக்கடலில் நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இறுதியில் தந்தை – மகள் இடையே இருக்கும் அன்பும், உறவும் பெரியது என்பதை வெளிக்காட்டும் அந்த ஒரு காட்சி மட்டும் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது. காதலும், மனிதாபிமானமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக இயக்குனர் மாதவ் ராமதாசன் சொல்லி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘ஆழி’  படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

 

"Aazhi' Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment