‘சாத்தான்- தி டார்க்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம்தான் ‘சாத்தான் – தி டார்க்’. இப்படத்தில் எஃப்.ஜே (பிரடெரிக் ஜான்), ஆய்ரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஆங்கிலேயர்களான கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து அவர்களது பூர்வீக வரலாறு சொல்லப்படுகிறது. பிறகு 1800-ஆம் ஆண்டுகள் என்று தொடங்கி ஏறக்குறைய சமகாலம் வரை வந்து நிற்கிறது இப்படத்தின் கதை. அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த போது தங்களது கிறிஸ்துவ மதத்தை மட்டும் அல்ல சாத்தான் பற்றிய நம்பிக்கைகளையும் பரப்பினார்கள் என்கிறது கதை. 1900-களில் அஸ்தினாபுரம் என்ற அந்த கிராமத்தில் நடந்த ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு இப்போதுவரையிலும் அந்த ஊர் மக்களை பாடாய்ப் படுத்துகிறது. அதனால் பிற ஊர்களில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அங்கு இறைவழிபாட்டை விட எதிர்மறைத் தெய்வமான சாத்தானையே வழிபட்டார்கள். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நடந்த ஒரு தவறான மாந்திரீக சடங்கினால் அந்த ஊருக்கு ஒரு கொடூர சாபம் கிடைத்திருக்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைப்பதோடு, சாத்தானுக்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் நரபலி கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான சூழலில் அந்த கிராமத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த கிராமத்தில் நடக்கும் சம்பவத்திற்கு மோன பத்ரேவின் குடும்பம் தான் காரணம் என்று எண்ணுகின்றனர் கிராமத்தில் உள்ள மக்கள்..  கணவன் இல்லாமல் தன்னுடைய இரண்டு மகள்களை வளர்த்து வரும் மோனா பத்ரேவின்  மகளான ஐரா பள்ளியில் படித்து வருகிறார். இன்னொரு சின்ன பெண்ணும் பள்ளியில் படித்து வருகிறார்.

மோன பத்ரா திடீர் திடீரென்று மன நலம் குன்றியவர் போல நடந்து கொள்வார். அவரின் உடம்பிற்குள் யாரோ புகுந்து ஆட்டிப் படைப்பது போல் நடந்து கொள்வார். தனது கையினை தானே வெட்டிக் கொள்வதும், தனது கண்களை தானே பிடிங்கி எறிவதுமாக நடந்து கொள்கிறார். ஐராவின் அம்மா மோன பத்ரே ஏதோ பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணரும் நாயகன் எஃப்.ஜே அவரை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டுக்கு செல்கிறார், அங்கு கொடூரமான கறுத்த உருவம் ஒன்றை பார்க்கிறார். அந்த உருவத்தை பார்த்த பிறகு அவரிடத்திலும் பல விசித்திரமான உணர்வுகள் ஏற்பட, தொடர்ந்து அந்த  ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அப்போது இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அதற்கு பின்பு என்ன நடந்தது? மோன பத்ரா குணமாகி வந்தாரா? தொடரும் மரணங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையும் கதாநாயகனும் என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதுதான் ‘சாத்தான் – தி டார்க்’. படத்தின் மீதிக் கதை.

இந்தப்படத்தில் நாயகன் பள்ளிமாணவர்.நாயகியும் பள்ளி மாணவிதான்.மாணவராக எஃப் ஜேவும் மாணவியாக ஐராவும் நடித்திருக்கிறார்கள்.  கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா, ஆபத்தான அம்மாவிடம் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும் காட்சிகளில் ரசிகர்களை பதற வைத்து விடுகிறார்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே. அவர்  தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது, திடீரென்று கோபப்படுவதும், ஆத்திரப்படுவதும், கத்துவதுமாக.. மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்து நம்மையும் பயமுறுத்தி விடுகிறார்.

கணவனின் இறப்பை தாங்க முடியாமல் சாத்தானை வழிபடும் பெண்ணாக மாறும் சாந்தினி தமிழரசன், தனது நாவையே அறுத்துக்கொள்ளும் காட்சியில் மிரட்டலான மற்றும் அதிரவைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாந்தினியின் காதல் கதையும் சோகமான அவருடைய முடிவும் அவரது அழகான நடிப்பைக் காட்டி இருக்கின்றன.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், ஊர் மக்கள் என பலர் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, கதைக்களமும் அதில் வருகிற ஒரு வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி விடுகிறார்.

இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம்.அதை உணர்ந்து இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணா.

எழுத்து மற்றும் இயக்கத்தை கவனித்துள்ள மணிகண்டன் ராமலிங்கம், கதை சொல்லும் விதத்தில் புதுமையையும் பயத்தையும் மர்ம உணர்வுகளுடன் கடவுள் நம்பிக்கைக்கும் சாத்தான் வழிபாட்டிற்கும் இடையிலான மோதலை மத மோதலாக மாற்றாமல், அமானுஷ்யத் திரில்லராக கதையை உருவாக்கி மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்கிற முக்கியமான கேள்விக்கான விடை அடுத்தபாகத்தில் என்று சொல்லிவிட்டார். அந்தவிடையும் சாந்தினி தமிழரசனின் கதாபாத்திரமும், இரண்டாம் பாகத்தில் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சாத்தான் – தி டார்க்’ திகில்பட பிரியர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

'Satan – The Dark' Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment