“மிஸ்டர் எக்ஸ்” என்ற இப்படத்தில் ஆர்யா, சரத்குமார், கௌதம் ராம் கார்த்திக் ,மஞ்சு வாரியர் அனேகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயபிரகாஷ் காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். .இப்படத்தை மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையை[ப் பொருத்தவரையில்,
பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் மூலக்கூறு வாய்ந்த யுரேனியத்தை நந்தா தேவி மலைப் பகுதியில் இருக்கும் ரகசிய அணு ஆயுதக் கிடங்குக்கு கொண்டு வந்தபோது திடீரென்று ஏற்பட்ட பனிச் சரிவில் அது தொலைந்து போகிறது. இந்த விஷயத்தை பகிரங்கமாக சொல்ல முடியாத நிலையில் இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா, இதை கண்காணிப்பதற்காகவும், மீட்பதற்காகவும் பரமேஷ்வர் பிரதாப் (சரத்குமார்) என்ற அதிகாரியை நியமிக்கிறது. இதற்காகவே சரத்குமார் தன் குடும்பத்தைப் பிரிந்து போலி பெயர் அடையாளத்தோடு பல நாடுகளுக்கு இந்த அணு ஆயுத மூலப்பொருளை இடம் மாற்றிப் பாதுகாப்பதிலேயே வாழ்ந்து வருகிறார். ஆனால், ரஷ்ய ராணுவம் இந்த அணு ஆயுத மூலப் பொருளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றிவிட்டது. ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய அந்த மூலப் பொருளை தேடிப் போன சரத்குமாரையும் ரஷ்ய ராணுவம் கைது செய்து விடுகிறது.
அதை நமது எதிரி நாடாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்கிறது.பாகிஸ்தானுக்கு இந்த மூலப் பொருள் கிடைத்தால் அவர்கள் இதை வைத்து அணு ஆயுதம் தயாரித்து விடுவார்கள் என்பதால் .இந்தத் திட்டத்தை முறியடிக்கவும் சரத்குமாரையும் அந்த மூலப்பொருளையும் இந்தியாவுக்குக் கொண்டு வரவும் ரா அதிகாரி மஞ்சு வாரியர் மற்றும் அவர்களது குழு முயற்சி செய்கிறது. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், மஞ்சு வாரியரை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புத் துறை ஈடுபடுகிறது. அப்போது அங்கிருந்து தப்பிக்கும் மஞ்சு வாரியர், மற்றொரு உளவாளியான ஆர்யா மூலம் மீண்டும் அந்த பணியில் ஈடுபட்டு சரத்குமாரை காப்பாற்றி, ஆணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடக்கிறது. இதற்காக 20 நாடுகளின் தலைவர்கள் மாமல்லபுரம் வருகிறார்கள். இந்த நேரத்தில் அந்த அணு ஆயுத மூலப்பொருளை வைத்து வெளி நாட்டிலிருந்து வந்திருப்பவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்த தகவல் எப்படியோ மஞ்சு வாரியாருக்கு தெரிய வருகிறது.இதனால் மொத்த உளவுத் துறையுமே அந்த மூலப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதில் அவர்கள் அந்த மூலப்பொருளை வைத்து மேற்கொள்ள இருந்த மிகப்பெரிய சதிவேலை முறியடிக்கப்பட்டதா? இல்லையா? என்பதுதான்“மிஸ்டர் எக்ஸ்” என்ற இந்தப் படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் கதாநாயகன் ஆர்யா ‘கௌதம்’ என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். கட்டுமஸ்தான உடலுடன் தனது புஜ வலிமை காட்டி ஆக்சன் காட்சிகளில் தன்னை திறமையான உளவாளியாக அசத்துகிறார். அவரது நடிப்பு வழக்கம் போல ஒரேவிதமான முகபாவனையுடன் உணர்ச்சிகளை படம் முழுவதும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கௌதம் கார்த்திக் தனது வழக்கமான கதாபாத்திரத்திலிருந்து சற்று புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும், ஆனால், அவருக்கு தேவையான காட்சியமைப்பு எதுவும் இல்லை.
நடிகர் சரத்குமார் தான் மிஸ்டர் எக்ஸ். அவர் பரமேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆங்கிலப் படத்தில் வரும் ஆக்சன் ஹீரோவை நினைவூட்டினாலும் நாட்டுப்பற்றைக் கட்டிக் காப்பாற்றுபவராக நடித்து அனைவரது பரிதாபத்தையும் பெற்றுக் கொள்கிறார்.
ரா அமைப்பு உயர் அதிகாரியாக இந்திரா வர்மா என்ற கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியருக்கு சவாலான வேடம்தான் என்றாலும் அதில் அவர் ஈடு கொடுத்து ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ரெய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் வழக்கம் போல தங்களது இருப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.
பின்னணி இசையில் இந்தப் படத்துக்கு கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். எதிர்பார்த்த அளவுக்கு எந்தவொரு தனித்துவமான பணியையும் தனது இசையின் மூலம் அவர் பணி செய்யவில்லை.
ஒளிப்பதிவாளர் அருள்வின்சென்டின் உழைப்பால் ஆங்கிலப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் நம் மனதை கவர்கிறார்.
நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் பல முக்கியமான காட்சிகளை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த். உலக குற்றவாளியின் பின்னணி என்னவென்று கதையில் பலவித கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஆங்கிலப் படங்களின் மோகத்தால் உருவானதாகவே இருக்கிறது. உளவுஅமைப்புகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி உலக நாடுகளுக்கிடையேயான அணுஆயுதப் போட்டிகள், அணுஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடிய பெருந்தீமைகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி இருந்தாலும் ஒரு இயக்குனராக மனு ஆனந்த் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தைத் திரைக்கதையில் காட்டியிருந்தால், ‘மிஸ்டர்.எக்ஸ்’ ஒரு வெற்றிப் படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘மிஸ்டர்.எக்ஸ்’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.