’கருப்பு’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

சூர்யா, திரிஷா, ஆர்ஜே. பாலாஜி , இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா , ஷிவதா,ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான் மற்ரும் பலர் நடித்துள்ள படம்தான் “கருப்பு”

இப்படத்தை ஆர். ஜே. பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கேரளாவில் இருந்து தன்னுடைய மகளின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் இந்திரன்ஸ் தன்னிடம் இருக்கும் 60 பவுன் நகைகளை விற்று அந்த பணத்தில் தன் மகளின் ஆபரேஷனை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகளுடன் வருகிறார்.  அப்போது அவர் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்று இறங்கும் சூழ்நிலையில் சென்னை பேசின்பிரிட்ஜ்  ஸ்டேஷன் அருகிலேயே தன் மகளுடன் இறங்கி விடுகிறார்.  அவர் தன் மகளுடன் நடந்து சென்ற போது இரண்டு திருடர்கள் அவர்களிடமிருந்து நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த இந்திரன்ஸ் தன் மகனை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று நகை பறிபோன விஷயத்தை குறித்து புகார் கொடுக்கிறார்.  காவல்துறை அதிகாரி இரண்டு நாட்களில் அந்த குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் இருந்த 60  பவுன் நகைகளையை மீட்கிறார்.  ஆனால் திருடு போன நகை 45 பவுன் தான் கிடைத்தது என்று நகையை பறிகொடுத்த இந்திரன்ஸ்ஸிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். அப்போது இந்த நகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் உங்கள் மகளும் நீதிமன்றத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

அதனால் இந்திரன்ஸும் அவரது மகளும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜியிடம் முறையிட்டு அந்த 60 பவுன் நகைகளையும் மீட்டுக் கொடுக்க வற்புறுத்துகின்றனர். ஆனால் ஆர் ஜே பாலாஜி தனது கூட்டாளி வழக்கறிஞர்களை இணைத்துக் கொண்டு இவரது நகைகளை மீட்க காலம் தாழ்த்தி பலவித செலவுகளை செய்ய வைத்து தில்லு முல்லு செய்கிறார்.  அந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் காவல்துறையினர் அனைவரும் பல வித ஊழல்களில்  ஈடுபட்டு  ஏழை மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்த சூழலில் இந்திரன்ஸ் அந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோயில் சென்று மிளகாய் அரைத்து அவருக்கு படைத்து வேண்டுதல் வைக்கிறார்.

அந்த வேண்டுதல் காரணமாக கடவுள் கருப்பு உருவத்தில் வழக்கறிஞர் சரவணன் என்ற பெயரில் சூர்யா அந்த நீதிமன்றத்துக்கு வருகிறார். அங்கு நடக்கும் கட்டப்பஞ்சாயத்து,  அடாவடிகள் உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி, தன்னை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது.. என்று ஆணவத்துடன் செயல்படுகிறார். அப்போது சூர்யாவிடம்  “கடவுளின் சக்தியை பயன்படுத்தாமல் ஒரு சாதாரண மனிதனாக இந்த நீதிமன்றத்தில் வழக்காடி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று சவால் விடுகிறார்.  கருப்புசாமியின் தெய்வ சக்தி மூலம் ஆர்.ஜே.பாலாஜியின் சவாலை ஏற்றுக் கொண்டு நீதித்துறையின் அவலநிலையை மாற்றி சூர்யா செய்த அதிரடிகள் என்ன? என்பதுதான் “கருப்பு”படத்தின் மீதிக் கதை.

கருப்பசாமி கடவுளாக வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் வருகிறார் சூர்யா. ‘ஜெய்பீம்’ படத்தில் நீதிக்காக போராடும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, அதே நீதித்துறையில் நடக்கும் அநீதிகளையும், அநீதி இழைப்பவர்களையும் அழிக்கும் கருப்புசாமியாக ஆக்ரோஷமாக நடித்து இருக்கிறார். தனது கையில் அரிவாள் ஏந்தி ஆவேசமாக நடனமாடும் காட்சியில் தியேட்டர் களில் ஆண்களை கூட சாமியாட வைத்து விடுகின்ற அளவிற்கு அசத்தி ரசிக்க வைக்கிறார்.

ஒரு நயவஞ்சக வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஆர்.ஜே.பாலாஜி மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இதுவரையில் நகைச்சுவை, சமூக கருத்து என்று நம்மை வியாக வைத்தவர், இப்படத்தில்  முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

திரிஷா மற்றொரு வழக்கறிஞராக ப்ரீத்தி கதாபாத்திரத்தில் வருகிறார்.இப்படத்தில் சில காட்சிகளை நகர்த்துவதற்கும், கருப்பணசாமிக்கு உதவி செய்வதற்காகவும் இந்தப் படத்தில் திரிஷாவின் பணி சிறப்பாக அமைந்து இருக்கிறது.

நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.மற்றும் சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான், வேல ராமமூர்த்தி ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தில் மலையாள நடிகரான இந்திரன் தேசிய விருது பெற்ற ஒரு கலைஞர். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய எளிமையான உருவத் தோற்றம் குணச்சித்திர நடிகருக்கு ஏற்றவாறு இருக்கிறது. தன்னுடைய மகள் இறந்த செய்தியைக் கேட்டவுடன் அப்படியே நிலை தடுமாறி தன் கையில் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு அவர் பேசிக்கொண்டே நடக்கின்ற  காட்சியில் நம் மனதை கலங்க வைத்து விட்டார் இந்திரன்ஸ்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு நீதிமன்ற காட்சிகளையெல்லாம் ஒரே மாதிரியாகப் பதிவு செய்து தன் பணியை கவனமாக செய்திருக்கிறார்.  கருப்பு வரும் காட்சிகள் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைத்து திரையரங்குகளை அதிர வைத்து இருக்கிறார்.

சாய் அபயங்கரின் இசையில் ஒலித்த பாடல்கள் என்ன மாதிரியான வரிகள் என்பது புரியாமல் சத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். .பின்னணி இசை நமது காதை பிளக்கிரது.

இப்படத்தை ஆர் ஜே பாலாஜி  ‘மூக்குத்தி அம்மன்’  பாணியில் கடவுள்,  சென்டிமென்ட், அதிரடி, ஆக்ஷன்  வைத்து இயக்கி  இருக்கிறார். ஒரு சட்டப் போராட்டத்துக்கான கதையாக இருந்தாலும் ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடும் கதையாக இருந்தாலும் அதில் கருப்பசாமி என்கிற தெய்வ சக்தியை இணைத்து பக்திப் படமாகவும் இல்லாமல், சமூக நீதி சொல்லும் படமாக அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘கருப்பு’ உருவாகியுள்ளது.

மொத்தத்தில், ‘கருப்பு’  ஒரு பொழுது போக்கு அம்சம் உள்ள படம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

 

 

"Karuppu" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment