துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா.சி, நரேன் மணி, ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் மற்றும் பலர் நடித்திருக்கும் இணைய தொடர் “எக்ஸாம்”.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த இணைய தொடரில் பல உண்மையான நிகழ்வுகளை புகுத்தி பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கி இருக்கிறார்.. பிரபல திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகக் கொண்ட இந்த வெப்தொடர் ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் தற்போது வெற்றி பெற்று ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இந்த இணைய தொடரின் கதையைப் பொருத்தவரையில்,
கிராமப்புறத்தில் வாத்து மேய்த்துப் பிழைக்கும் ஓர் ஏழைத்தாயின் மகள் துஷாரா விஜயன். ஏழைப் பெண்ணான துஷாரா விஜயன் எப்படியாவது படித்து அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். வறுமையில் வாழும் ஒவ்வொரு தாயின் லட்சியம் கனவு தன் மகளை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்பி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தனது தாயின் லட்சியத்திற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் துஷாரா விஜயன் இரவு பகலாகப் படித்து போட்டித் தேர்வு எழுதச் செல்கிறார். அங்கு மிக சிறப்பாக தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த துஷாரா விஜயனுக்கு தாசில்தாரின் மகளான அதிதி பாலன், எவ்வித சிரமமும் இல்லாமல், முறைகேடாக, மோசடியாக, குறுக்கு வழியில் தேர்வு எழுதி, அரசுப்பணியை அடைய எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்.
இதைக் கண்டு அதிச்சியடைந்த துஷாரா விஜயன் தொலைபெசியில் பேசிய அந்த நபர் யார் என்று அதிதி பாலனிடம் கேட்க இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனைக் கண்டு அந்த தேர்வு மையத்தில் இருந்த போலீசார் சண்டையை தடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். தாசில்தாரின் மகளான அதிதி பாலனை விடுவித்துவிட்டு, ஏழைப்பெண்ணான துஷாரா விஜயன் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவிடுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். தன் மகளை நன்றாக படிக்க வைத்து ஐ.பி.எஸ். அதிகாரியாக்க முடியவில்லையே என்ற ஏக்கம், மகளை பார்க்க முடியாமல் தவித்து அவமானம் மற்றும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு துஷாரா விஜயன் இருக்கும் சிறை வாசலிலேயே மரணமடைகிறார்.
சிறிது காலத்துக்குப்பின் சிறையிலிருந்து வெளியே வருகிறார் துஷாரா விஜயன். இந்த சூழலில் போலீஸ் டி.எஸ்.பி. பதவியில் இருக்கும் அதிதி பாலன், தன் பணி மாறுதல் காரணமாக, மலைப்பிரதேசத்தில் இருக்கும் புதிய இடத்திற்குச் செல்லும்போது, துஷாரா விஜயனால் கடத்தப்பட்டு, ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல தானே டிஎஸ்பி. அதிதி பாலன் என பலரையும் நம்ப வைத்துச் சில செயல்பாடுகளைச் செய்து,அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்த முயற்சியில் துஷாரா விஜயன். வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ‘எக்ஸாம்’ இணைய தொடரின் மீதிக் கதை.
கதாநாயகியாக, வாத்து மேய்த்துப் பிழைக்கும் ஏழைத்தாயின் மகள் ஜான்சியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இரவு பகலாக கஷ்டப்பட்டு படித்தும், உழைத்தும் பலனின்றி போகும் ஏழை மாணவ, மாணவிகளின் துயரத்தையும், விரக்தியையும், நம் கண்முன் கொண்டு வந்து காட்டி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
இரண்டாவது கதாநாயகியாக, தாசில்தாரின் மகளாகவும், அதிதி பாலன் டிஎஸ்பி மரமல்லியாகவும் ஒரு போலீஸ் அதிகாரியாக மற்றும் கடத்தப்பட்டுத் தவிக்கும் பெண்ணாக தனது பங்களிப்பை மிக சரியாகச் செய்துள்ளார்.
சிறை அதிகாரி ஜெயச்சந்திரனாக வரும் அப்பாஸ், சரண்யாவாக வரும் வசுந்தரா, குமரேசனாக வரும் நரேன் மணி, மற்றும் ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதா பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ்ஸின் இசை, அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு, தினேஷ் சுப்பராயனின் ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இத்தொடரின் தரத்துக்கும்,வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கின்றன.
இத்தொடரை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஏ.சற்குணம். அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிகழும் மோசடிகளையும், அவற்றின் பின்னணியையும் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லி காட்சிபடுத்தியிருக்கிறார். இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கிறது? யார் மூலம் நடக்கிறது? என்பதை மிக நுணுக்கமாக ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராகக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர், தற்போது நமது இந்தியாவில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் நடந்த ஊழல்களையும், தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்து தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை பாழான விஷயம் அனைத்து பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘எக்ஸாம்’ என்ற இந்த இணைய தொடர் அதனை மையமாக வைத்து எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், ‘எக்ஸாம்’ இணையத்தொடர் தத்ரூபமாக உருவான தொடர் என்பதால் அனைவரும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3.5/5.