தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை அணிவித்து நேரில் வாழ்த்திய பாடகர் வேல்முருகன்!

சென்னை:

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்று, தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தற்போது திரையுலகினரிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.

மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெற்றிருக்கும் இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு, பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி. பிரகாஷ்குமாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் சிறப்பம்சமாக, புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காசு மாலையை ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அணிவித்து தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். மேலும், சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித பிரசாதத்தையும் வழங்கி, அவர் தொடர்ந்து பல உயரங்களை எட்ட வேண்டும் என்று மனமார வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் என்ஆர். ரகுநந்தன்  உடனிருந்தார். மூவரும் இசை, திரையுலக அனுபவங்கள் மற்றும் தேசிய விருது குறித்து மகிழ்ச்சியுடன் கலந்துரையாடிய தருணம் அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தேசிய விருது என்பது ஒரு கலைஞரின் திறமைக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நிலையில், ஜி.வி. பிரகாஷ்குமார் மூன்றாவது முறையாக இந்த பெருமையைப் பெற்றிருப்பது தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்துள்ளது. அவரது இந்த வெற்றியை சக கலைஞர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

வேல்முருகனின் இந்த மரியாதை செலுத்தும் நிகழ்வு, கலைஞர்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

FeaturedG.V. Prakash Kumar NEWS.
Comments (0)
Add Comment