ஜீவி பிரகாஷ் குமார், கயாடு லோகர், டி எம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகார்ஜன், சுனிதா ஸ்ரேஸ்தா நடித்துள்ள படம்தான் “இம்மார்ட்டல்”. இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நாகரிகம் எட்டிப் பார்க்காத காலத்தில் இனம் புரியாத மொழி பேசிக் கொண்டிருக்கிற அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு பழங்குடி கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யமான, மர்மங்கள் நிறைந்த இடத்தில் பத்தரா என்கிற ஒரு பெண்ணுக்குப் பிரசவம் ஏற்படுகிறது. அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி மனிதக் குழந்தைக்கு பதிலாக மர்மமான ஒரு விலங்கு போன்ற உயிரினம் பிறந்ததைக் கண்டு அந்த குழந்தையை எங்கேயாவது போட்டு விட்டு வந்து விடு.. என்று சொல்கிறார். இப்படித்தான் இப்படத்தின் கதை தொடங்குகிறது.
லொள்ளு சபா மாறன் நடத்தும் ஒரு பிரிண்டிங் அச்சகத்தில் நாயகன் ஜீவி பிரகாஷ் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார். ஜீவி பிரகாஷ் குடியிருக்கும் வீட்டை அதன் வீட்டுக்காரர் காலி செய்யச் சொன்னதால் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது ஜீவி பிரகாஷிற்கு அவரது செல்போனில் அழைப்பு வருகிறது. அந்த போனில் ஒரு பெண் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நவீன வசதி கொண்ட ஒரு பிளாட்டில் உள்ள அறையைப் பகிர்ந்து கொண்டு தன்னுடன் தங்கிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண் கூறுகிறார். அதன்படி அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் ஜீ.வி.பிரகாஷ் வசதியான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுடன், அந்த வீட்டின் உரிமையாளரான நாயகி கயாடு லோஹரின் அழகையும், கவர்ச்சியையும் கண்டு அங்கேயே தங்கி கொள்ள ஒப்புக் கொள்கிறார்.
மிகுந்த அழகு கொண்ட அந்தப் பெண் மீது ஜீவி பிரகாஷுக்கு காதல் ஏற்படுகிறது.அவரும் தனது உடல் அழகைக் காட்டி நெருங்கி வருகிறார். .இருவரும் நெருங்கும் நேரத்தில் திடீரென்று ஒரு வயதான ஆண் ஒருவர் வெளிப்படுகிறார். அந்த வீட்டில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று யோசிக்கும் ஜீவி பிரகாஷ்..யார் அவர் என்று கேட்கும்போது தனது தாத்தா என்று கூறுகிறார் கயாடு லோஹர். ஆரம்பத்தில் காதல் இன்பத்தில் மயங்கினாலும், ஒரு கட்டத்தில்அந்த வீட்டின் மர்மங்களும் அமானுஷ்ய நிகழ்வுகளும் ஜீவி பிரகாஷை அச்சுறுத்தத் தொடங்குகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவி பிரகாஷ் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். கயாடு லோஹர் சாதாரண பெண் அல்ல, மாறாக ஆயிரம் ஆண்டுகளாக மனித ரத்தத்தைக் குடித்து வாழும் ஒரு ரத்தக் காட்டேரி என்பதை உணர்கிறார் ஜீவி பிரகாஷ். இதனால் திடுக்கிட்டு உறைந்து போகும் ஜி.வி.பிரகாஷ் அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் “இம்மார்ட்டல்” படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் ஒரு நடுத்தர வர்க்கத்து வாலிபனாக நடித்து இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சாதாரண இளைஞராக வரும் அவர், பின்னர் எதிர்பாராத மற்றும் அச்சமூட்டும் சம்பவங்களை சந்திக்கும்போது வெளிப்படுத்தும் குழப்பம், பயம் மற்றும் பதற்றம் ஆகியவை கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கயாடுலோஹர் தனது அழகான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவரும் இவர், இதில் அமானுஷ்ய சக்தி கொண்டவராக நடிப்பில் அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அழகால் மயக்கி, இரண்டாம் பாதியில் வில்லியாக உருவெடுத்து தனதுது பேசும் விழிகளிலும் மற்றும் கண் அசைவுகளிலும் அனைவரையும் மிரட்டுகிறார்.
டி.எம்.கார்த்திக்,லொள்ளுசபா மாறன்,ஆதித்யா கதிர்,அர்சு மகாராஜ்,பேமா சாம்சோ,சுனிதா ஷ்ரேஷ்டா ஆகிய நடிகர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்து இப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், இப்படத்தின் காட்சிகளின் தன்மைக்கேற்றவாறு வண்ணமயமான ஒளியமைப்பு செய்து, கயாடுலோஹரின் அழகு முகத்தையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் சரியான முறையில் கையாண்டிருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் அதிக சத்தம் இல்லாமல் தனது முயற்சிகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
திரில்லர் மற்றும் மர்மம் கலந்த கதை,திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மாரியப்பன் சின்னா.தமிழ்த் திரையுலகில் ஹாரர், திகில் நிறைந்த பல படங்கள் வந்தாலும் லாஜிக் மீறல்களைத் தாண்டி வழக்கத்திற்கு மாறான ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்து தனது முதல் முயற்சியிலேயே கவனம் ஈர்த்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘இம்மார்ட்டல்’ திகில், ஹாரர் பட ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.