“குய்கோ” – திரைப்பட விமர்சனம்!

137

சென்னை:

நடிகர் விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு ஆகியோர் நடித்திருக்கும் படம் “குய்கோ’  இப்படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைக்க: ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த யோகி பாபு தனது கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரை ஒரு பெண் காதலிக்கிறார். யோகி பாபுவின் காதல் விஷயத்தை தெரிந்துக் கொண்ட அந்தப் பெண்ணின் அண்ணன், அவரை அடித்து விட, சவூதி அரேபிய நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்று விடுகிறார் யோகி பாபு. இந்நிலையில் கிராமத்தில் வாழும் யோகிபாபுவின் தாயார் இறந்துவிடுகிறார்.

இதனால் யோகிபாபு அவரின் ஊர்க்காரரான இளவரசுவிடம் தான் சவூதி அரேபிய நாட்டிலிருந்து வரும் வரையில் தன் அம்மாவை பத்திரமாக பிரீசர் பாக்ஸில் வைக்கச் சொல்லி பணம் அனுப்புகிறார். ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக சென்னைக்கு செல்ல வேண்டிய கதாநாயகன் விதார்த், சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக  பிரீசர் பாக்ஸுடன் அந்த கிராமத்திற்கு செல்கிறார். சவூதி அரேபியாவில் இருந்து கிராமத்துக்கு வரும் யோகி பாபு, உயிருடன் இருக்கும் போது தனது தாயை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே  என்ற வேதனையில், அவருடைய இறுதி சடங்கை திருவிழா போல் நடத்துவதோடு, தன் தாயின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்ஸை பெரும் தொகை கொடுத்து வாங்கி, அதை தன் தாயை நினைத்து  வணங்குகிறார்.

பிரீசர் பாக்ஸை எடுத்து சென்ற விதார்த் எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதால், அந்த கிராமத்திலேயே  தங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்படி கதாநாயகன் விதார்த் அந்த ஊரில் தங்க, யோகி பாபு தனது தாயின் உருவத்தில் கடவுளாக கும்பிடும் பிரீசர் பாக்ஸ் திடீரென காணாமல் போய் விடுகிறது. யார் அந்த பிரீசர் பாக்ஸை திருடினார்கள் திருடு போன பிரீசர் பாக்ஸ் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? விதார்த்தின் சிக்கல் தீர்ந்ததா? என்பதுதான் “குய்கோ” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் விதார்த், எப்போதும் போல் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அனைவரையும் கவரும் வகையில் மிகவும் அருமையாக எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். சென்னைக்கு போக வேண்டிய சூழலில், 1500 ரூபாய்க்காக பிரிசர் பாக்ஸுடன் வந்து சிக்கலில் சிக்கிக்கொள்ளும் விதார்த், அந்த கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கதாநாயகி ஸ்ரீ பிரியங்கா காதலில் விழ வைக்கும் காட்சிகளில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

யோகி பாபு நடிப்பில் தனக்கு காமெடிதான் வரும் என்று நினைப்பவர்கள் மத்தியில் நான் ஒரு சிறந்த நடிகன் என்று நிரூபித்து இருக்கிறார். தனது ஒவ்வொரு காட்சிகளிலும் யதார்த்தமான  நடிப்பை வெளிப்படுத்தி டைமிங் காமெடி மூலம் திரையரங்கை அதிர வைத்துவிட்டார். சேகர்-பாபு மற்றும் வடிவேலு பெயரை சொல்லி வசனம் பேசும்போது தியேட்டரே கைத்தட்டல் . செண்டிமெண்ட் காட்சிகளில் மனதை நெகிழ கூடிய உணர்வுப்பூர்வமாக காட்சிகளில் நடித்தாலும், அடுத்த நிமிடமே தனது நகைச்சுவை வசனம் மூலம் சிரிக்க வைத்து விடுகிறார்.

இளவரசுவின் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம், அவருடைய கதாபாத்திரமும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

கதாநாயகன் விதார்த்துக்கு ஜோடியாக ஸ்ரீபிரியங்கா, யோகி பாபுக்கு ஜோடியாக துர்கா என இரண்டு கதாநாயகிகளும் தங்களுக்கான பணியை மிக சிறப்பாக செய்து, திரைப்படம் சுவாரஸ்யமாக நகர அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சிகளின் உணர்வுகளையும், கதையின் தன்மையை புரிந்து அதற்கேற்பப் படம் பிடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆண்டனி தாசனின் இசையில் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கிறது. ஒரு இந்தி பாடலை உல்டா செய்து இசை அமைத்து இருப்பதை ரசிக்கலாம்.

இயக்குனர் அருள் எழிலன் முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து விட்டார்.ஒரு இயக்குனருக்கு தேவையான எல்லா ரசனைகளையும் மிக அழகாக வெளிப்படுத்தி காட்சிபடுத்தியுள்ளார். கந்துவட்டிக்காரர் நடைமுறை, பிரீசர்பாக்ஸ் திருட்டு உட்பட எல்லாவற்றிற்குள்ளும்  நகைச்சுவையோடு மனிதநேயப்பார்வையுடன் இயக்குநர் தனித்திறமையுடன் செயல்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது..

மொத்தத்தில் “குய்கோ” திரைப்படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டேதான் வெளியே வருவார்கள்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.