“பார்க்கிங்” – திரைப்பட விமர்சனம்!

138

சென்னை:

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்,எஸ்.பாஸ்கர், ராமா ராஜேந்தர், பிராத்தனா நாதன்,இளங்கோ மற்றும் பலர் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சாம் .சி.எஸ்.இசையில் சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ் தயாரிப்பில் உருவாகி தற்போது வெளி வந்திருக்கும் படம் “பார்க்கிங்”

இப்படத்தின் கதையைப் பொறுத்த்வரையில்,

அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் மகளோடு பத்து வருடங்களாக ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார். இந்நிலையில் இந்துஜாவை  காதல் திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் கல்யாண்,  தனது கர்ப்பிணி மனைவியுடன் எம் எஸ் பாஸ்கர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடி வருகிறார். அங்கு குடிபுகுந்த ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவுக்காக புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார். அந்தக் காரை அவரது வீட்டில் கீழே இருக்கும் ஒரு சிறிய இடத்தில் நிறுத்தி வைக்கிறார்.  இதனால் அங்கு ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த எம் எஸ் பாஸ்கர் போதுமான இடம் இல்லாமல்  தடுமாறுகிறார். இந்த சூழ்நிலையில்  ஹரிஷ் கல்யாணத்துக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது.

அந்தக் காரை நிறுத்தி வைப்பதால்  இருவருக்கும் மோதல் ஏற்பட்டு அது யுகோவாக மாறி,  உடனே எம் எஸ் பாஸ்கர் சொந்தமாக ஒரு காரை வாங்குகிறார். இருவருக்கும் தங்களது காரை அந்த சிறிய இடத்தில் நிறுத்துவதற்கு முடியாமல் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் இருவரது குடும்பமும் பாதிக்கப்பட்டு,  அது பெரிய மோதலாக உருவெடுத்து ஹரிஷ் கல்யாணத்துக்கு பலவிதத்தில் தொந்தரவு கொடுக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். இதனால் வேதனையடைந்த ஹரிஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் பணி புரியும் அலுவலகத்தில் அனைவர் மத்தியிலும்  பாடம் புகட்ட வேண்டும் என்று லஞ்ச ஊழல் புகார் கொடுத்து அவரை மாட்ட வைத்து விடுகிறார். இதனால் கோபமடைந்த எம் எஸ் பாஸ்கர் ஹரிஷ் கல்யாணை பழி  வாங்க நினைக்கிறார். இறுதியில் எம்.எஸ். பாஸ்கர் ஹரிஷ் கல்யாணை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதுதான் “பார்க்கிங்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், ஈஸ்வர் என்ற ஐ.டி.துறை இளைஞராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக தனது உடல் மொழி மற்றும் தன் உணர்வுகளை ஆக்ரோஷமான கோபத்துடன்  அனுபவ நடிப்பாற்றலால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை நடித்துள்ள படங்களில் ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் சிறந்த முறையில் அனைவரும் பாராட்டுகின்ற விதத்தில் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியே தீர வேண்டும் என்று இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் வெற்றி பெற்றிருக்கிறார். தன்னால் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

பேரூராட்சி அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி இளம்பரிதி என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். படம் முழுவதும் இளம்பரிதி என்ற அரசு அதிகாரியாக வில்லத்தனமான ஈகோவாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.  ஈகோ யுத்தத்தில் எந்த எல்லைக்கும் போய் ஒருகை பார்க்கும் ஆக்ரோஷம் என அனைத்து உணர்வுகளையும் மிக சிறப்பாக  வெளிப்படுத்தி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதைசரியாக தேர்வு செய்து கையாளும்  எம்.எஸ்.பாஸ்கர், நகைச்சுவை உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல்  இந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதிகம் மெனக்கெட்டு நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

கதாநாயகனின் காதல் மனைவி ஆதிகாவாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கர்ப்பிணி கோலத்தில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நேர்த்தியான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி செல்வியாக வரும் ரமா, மகள் அபர்ணாவாக வரும் பிரார்த்தனா, வீட்டிற்கு சொந்தக்காரராக வரும் இளவரசு, எல்.ஐ.சி. ஏஜெண்டாக வரும் சுரேஷ் மற்றும் இஸ்திரி கடைக்காரராக வருபவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு  தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி, ஒரு முக்கிய சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்ட கதையை மிக இயல்பாகவும், சிறப்பாகவும் படமாக்கியிருப்பதை பாராட்டலாம். சாம் சி.எஸ் இசையை அனைவரும் ரசிக்கும்படி அமைத்திருந்தாலும், சில இடங்களில் வேகமில்லாமல் இருப்பது பலவீனமாக இருக்கிறது.

இன்று சென்னை நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிற பெரும்பாலான குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு உண்மையான சம்பவத்தை நேரில் பார்த்து இப்படத்தின் கதையை  எழுதி இருப்பது போல தெரிகிறது.  எதுவாக இருந்தாலும், விட்டுக் கொடுத்து போகும் தன்மை அனைவரிடமும் ஈகோ பார்க்காமல் அனுசரித்துப் போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்துவிடும் என்ற நல்ல கருத்தை சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும்படி இயக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

‘பார்க்கிங்’ – படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.