சென்னை:
பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’ தமிழக தியேட்டகளில் இப்படம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொறுத்த்வரையில்,
தனது காதலியை கொன்றதற்காக சுமார் ஏழு வருடங்கள் நாசிக் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் பலரிடம் துபாயில் பணிபுரிந்து விட்டு மும்பைக்கு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் சிறையை விட்டு வெளியே வந்த நேரத்தில் மும்பையில் கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது. இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு ஓட்டலுக்கு சாப்பிட செல்கிறார் விஜய் சேதுபதி. . அப்போது அந்த ஓட்டலில் ஒருவர் விஜய் சேதுபதியிடம், “அந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் தன் மகளுடன் இருப்பதை பார்த்து நான் தான் அவளது கணவன். நான் அவசரமாக வெளியில் செல்ல இருப்பதால் நான் வரமாட்டேன் என்று கூறி அவளை வீட்டுக்கு செல்லுமாறு சொல்லுங்கள்’..என்று கேத்ரினாவை கைகாட்டி கூறிவிட்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறுகிறார். இந்த தகவலை கேத்ரினாவிடம் விஜய் சேதுபதி அமைதியாக சொல்ல அதை காதில் வாங்கிக் கொண்ட கேத்ரினா பரவாயில்லை நான் வீட்டுக்கு சென்று விடுகிறேன் என்கிறார்.
பிறகு வெளியே வரும் கேத்ரினா தனது மகளுடன் ஒரு தியேட்டரில் படம் பார்க்க செல்கிறார். அங்கு விஜய் சேதுபதியும் படம் பார்த்து கொண்டிருக்க கேத்ரினா அவரது அருகில் போய் அமருகிறார். அப்போது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் படம் பார்த்துக் கொண்டிருந்த கேத்ரினாவின் மகள் தூக்கத்தில் தன் தாய் மடியில் படுத்துக் கொண்டிருக்க, இதனால் படம் பார்க்க முடியாமல் கேத்ரினா தியேட்டரை விட்டு வெளியேறுகிறார். விஜய் சேதுபதியும் அவருடனே பின்னால் வெளியே வருகிறார். இச்சமயத்தில் அந்த குழந்தையை தூக்க முடியாமல் தவிக்கும் கேத்ரினாவிடம், இந்த குழந்தையை நான் தூக்கிக் கொள்ளவா என்று கேட்கிறார். . கேத்ரினாவும் இதை ஏற்றுக்கொள்ள அவரது மகளை தனது தோளில் போட்டுக் கொண்டு கேத்ரினா வீட்டை நோக்கி செல்கிறார் விஜய் சேதுபதி.. வீட்டிற்கு வந்ததும் தனக்கு உதவி செய்த விஜய் சேதுபதியை உள்ளே வருமாறு அழைக்கிறார்.
விஜய் சேதுபதியும் கேத்ரினாவின் வீட்டிற்கு சென்றதும் ‘மது அருந்துவீர்களா?’ என்று கேட்டுவிட்டு ஒரு கண்ணாடி டம்ளரில் விஸ்கியை போட்டு கொடுக்கிறார். போதை மயக்கத்தில் கேத்ரினாவின் வீட்டில் இருவரும் நடனமாடுகிறார்கள். பிறகு வெளியில் சென்று விட்டு வரலாமா? என்று கேத்ரினாவிடம் விஜய் சேதுபதி கேட்க அவரும் ஒப்புக்கொண்டு இருவரும் தனிமையில் வெளியே வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழா என்பதால் எங்கும் பரபரப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இவர்களும் கலந்து கொண்டு நடனமாட பிறகு கேத்ரினா வீட்டுக்கு வருகிறார்கள். விஜய் சேதுபதியும் கேத்தரினாவும் வீட்டிற்கு உள்ளே நுழையும்போது, வீடு திறந்து கிடக்கிறது. இதனால் பதற்றம் அடைந்த கேத்ரினா வீட்டிற்குள் சென்றபோது அங்கு அவளது கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார்.
கேத்ரினாவின் கணவர் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் விஜய் சேதுபதி. இதுகுறித்து,. காவல்துறைக்கு தகவல் சொல்ல நினைக்கும்போது விஜய் சேதுபதி, “நான் இங்கிருந்தால் உனக்குதான் ஆபத்து. ஏனென்றால் என் மனைவியை கொன்று விட்டு ஏழு வருடம் நாசிக் சிறையில் இருந்து விட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறேன் என்று கேத்ரினாவிடம் கூறுகிறார் விஜய் சேதுபதி. இதனால் கோபமடைந்த கேத்ரினா “மரியாதையாக என் வீட்டை விட்டு வெளியே போ…”என்று விரட்டுகிறார். அதன் பிறகு கேத்ரினா தன் மகளை அழைத்துக் கொண்டு கிறிஸ்மஸ் என்பதால் சர்ச்சுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு மயக்கம் ஏற்படுகிறது. அங்குள்ள ஒருவர் உதவி செய்ய முன் வருகிறார். கேத்ரினாவை அழைத்துக் கொண்டு அந்த நபர் தனது காரில் அவரது வீட்டிற்கு வந்ததும் அங்கு கேத்ரினாவின் கணவர் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.. உடனே அந்த நபர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கிறார். கேத்ரினாவின் கணவர் கொலை செய்யப்பட்டது எப்படி? அவரை கொலை செய்தது யார்? கொலை செய்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? என்பதுதான் “மெரி கிறிஸ்துமஸ்” படத்தின் மீதி கதை.
ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் ஆக்ஷன், அதிரடி இல்லாமல், தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். எந்த காரணத்தைக் கொண்டும் அதிகப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மிகவும் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது உடல் மொழி மூலமாகவே, உன்னதமாக பலவித உணர்வுகளை வெளிக்காட்டி மிக சிறப்பாக நடித்தியிருக்கிறார். இறுதிக்காட்சியில் விஜய்சேதுபதி காவல் நிலையத்தில் எடுக்கும் முடிவும் கேத்ரினாவுக்கு கையில் மோதிரம் மாட்டும்போதும் அந்தக் காட்சி கைத்தட்டல் பெறுகிறது.
ஒரு மகளுக்கு தாயாக நடுத்தர வயதுப்பெண்ணாக அதற்கேற்றவாறு தன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும் அனைவரும் ரசிக்கும்படி நடிப்பில் அசத்தி இருக்கிறார் கத்ரினா கைஃப். தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பிலும் எந்த குறையும் வைக்காமல், மிக சரியாக கையாண்டிருக்கிறார்.
கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் ஆகியோர் கதைக்கு ஏற்றவாறு தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு என்றாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை காட்சிகளை பல வித வண்ணத்தில் படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.
ப்ரீத்தம் இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை படத்திற்க்கு பலம் சேர்த்திருக்கிறது.
பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோரது எழுத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஶ்ரீ ராம் ராகவன், ரசிகர்கள் ரசிக்கும்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையைக் கொடுத்து இருக்கிறார். இப்படத்தில் நடித்த அனைவரையும் அதிகமாக வசனம் எதுவும் பேசவிடாமல், தங்கள் கண்கள் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க வைத்திருப்பதை பாராட்டியே தீர வேண்டும். காமெடி, ஆக்ஷன், அதிரடி சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் மிக சிறப்பாக இயக்கி இருக்கும் ஶ்ரீ ராம் ராகவனுக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.
மொத்தத்தில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ வித்தியாசமான அனைவரும் ரசிக்கும்படியான ஒரு உன்னதமான படம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.