“மறக்குமா நெஞ்சம்” – திரைப்பட விமர்சனம்!

128

சென்னை:

ஃபிலியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் & குவியம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் உருவாகி இருக்கும் படம் “மறக்குமா நெஞ்சம்” இபடத்தில் ரக்‌ஷன். மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா, நட்டாலியா, விஷ்வத் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.  ராகோ.யோகேந்திரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

நாம் பள்ளியில் படிக்கும் போது பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும்.  அதுபோல கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்திருக்கும் மாணவ, மாணவிகள் பற்றிய கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் “மறக்குமா நெஞ்சம்”

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ரக்சன் மற்றும் அவரது நண்பர்கள் தீனா, ராகுல், முத்தழகன், மெலினா, ஸ்வேதா வேணுகோபால்,  போன்றவர்களுடன் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் போது மிகவும் நெருக்கமாகவும், ஒரு நல்ல நட்புடன் பழகி ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தன்னுடன் கூடவே  படிக்கும் கதாநாயகி மெலினாவை யாருக்கும் தெரியாமல் ஒருதலையாக காதலிக்கிறார் ரக்சன்.  ஆனால் அந்த காதலை கதாநாயகி மெலினாவிடம்  சொல்ல முடியாமல் தயங்குகிறார். அவரது நண்பர்கள் தீனா, ராகுல்  இருவரும் மெலினாவிடம்  உன் காதலை சொல்லி விடு என்று பல முறை வற்புத்துகிறார்கள். ஆனால் பள்ளிப் இறுதி படிப்பை முடிக்கும்போதும் தன்னுடைய காதலைப் பற்றி மலினாவிடம் சொல்ல முடியாமல் தனது ஊருக்கு சென்று விடுகிறார் ரக்சன்.

இந்த சூழ்நிலையில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி அதற்கு முதலாளியாக செயல்படுகிறார் ரக்சன்.  . ஆனால் தனது பள்ளி நண்பர்களான தீனா, ராகுல் ஆகியோரிடம் தங்களது பள்ளியில் படிக்கும்போது ஏற்பட்ட   காதலை பற்றியும், மலினாவை மறக்க முடியாமல் தவிப்பது பற்றியும், சொல்லி  வேதனைப்படுகிறார். தற்போதும் மலினா மீது அதே காதல் உணர்வுடன் இருப்பதையும் சொல்லி வருத்தப்படுகிறார்.  இந்த சூழ்நிலையில் தனது பள்ளி காதலி மலினாவை எப்போதாவது சந்தித்து விடுவோமா என்ற ஏக்கத்துடன் இருக்கும் ரக்சனுக்கு அதற்கான அரிய வாய்ப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு  நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதாவது ரக்சன் 2008 ஆம் ஆண்டு படிக்கும்போது பிளஸ் டூ தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதால் அந்தத் தேர்வை ரத்து செய்து,  மீண்டும் அதே பள்ளியில் எழுதுவதற்கு உத்தரவு வருகிறது

அதனால் 2008 ஆம் ஆண்டு படித்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவரும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும், அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் எந்த பணிக்கும் செல்ல முடியும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் பழைய நண்பர்கள் அனைவரும் அந்த பள்ளியில் தேர்வு எழுத வருகிறார்கள் அப்போது ரக்ஷனின் காதலியான மலினாவும் அங்கு வருகிறார். நீண்ட காலம் மெலினாவை பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்த ரக்ஷனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா?  என்பதுதான் “மறக்குமா நெஞ்சம்” படத்தின் மீதி கதை.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப்படத்தில் கதாநாயகன் துல்கர் சல்மானின் நண்பராக வெள்ளித் திரையில் அறிமுகமான ரக்‌சன், முதல் முறையாக இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பள்ளி பருவம், இளைஞராக ஒரு நிறுவனம் ஒன்றின் முதலாளி  பருவம் இரண்டிலும் தனது மாறுபட்ட நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்கிறார்.பள்ளியில் படிக்கும்போது வரும் காதல், பயம்,  நாணம் என அனைத்துவிதமான உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரக்சன்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மலினாவுக்கு இப்படத்தில் அதிகம் வேலை இல்லை என்றாலும், பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார், அவருக்கு கொடுத்த வேலையை மிக துல்லியமாகவும், அழகாகவும் செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.

பள்ளி பருவ நகைச்சுவைக் காட்சிகளை மிக இயல்பாக செய்து படம் கலகலப்பாக நகர்வதற்கு பக்கபலமாக தீனாவின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரமாக தெரிந்தாலும், படம் முடியும் தருணத்தில்  பாராட்டும்படியான குணச்சித்திர நடிகராக மனதை நெருட வைக்கும் பிராங் ஸ்டார் ராகுலின் கதாபாத்திரம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், கடைசி கல்சுரல் காட்சியில் ஒரு டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார். அவரது நடிப்பு அபாரம்.

பள்ளி மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் ஸ்வேதா, முத்தழகன், மெல்வின் டெனிஸ், அருண் குரியன், அஷிகா காதர், விஷ்வாத், நட்டாலியா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பங்களிப்பை செய்து இருக்கிறார்கள்.

பி.டி மாஸ்டர் கார்த்திகேயனாக முனீஷ்காந்தும், கணக்கு ஆசிரியை ஜெனிஃபராக அகல்யாவும் நடித்திருக்கிறார்கள். இந்த காதல் ஜோடி குறைவான காட்சிகளே வந்தாலும், மனதை நெகிழ வைக்கிறார்கள்.

கன்னியாகுமரியின் இயற்கை  எழிலை காட்சிப்படுத்தி இருக்கும் கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு அழகு என்றால், இசையமைப்பாளர் சச்சின் வாரியாரின் பாடலிசையும், பின்னணி இசையும் மிகவும் சிறப்பு.

பள்ளி பருவத்தில் ஏற்படும் சில நிகழ்வுகளை கதையில் சொல்லியிருக்கும் இயக்குனர் ராகோ.யோகேந்திரன். ஒவ்வொரு பார்வையாளரையும் இப்படத்தினூடே அவர்களுடைய பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட காதலையும் இப்படத்தின் மூலம் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகளை கையாண்டிருப்பது படத்திற்கு பலம்.  இப்படத்திற்கு பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அருமையாக திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்ற இயக்குநர் ராகோ.யோகேந்திரனுக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் இளைஞர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.