சென்னை:
தமிழ் திரைப்பட உலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 25 வது திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’. மற்றும் இப்படத்தில் நந்திதா, ஸ்வேதா, தான்யா ஹோப், சுரேஷ் சக்ரவர்த்தி, டார்லிங் மதன், ஜீவா சுப்பிரமணியன், பத்மன், விலங்கு கிச்சா ரவி, தாசரதி, தயாளன், மது நாகராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஷெரீஃப்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
சென்னை மாதவரத்தில் உள்ள பல இடங்களில் கைகள், கால்கள், உடற்பகுதி ஆகியவை வெட்டப்பட்டு எரிந்த நிலையில் மூன்று அட்டைப்பெட்டியில் அவைகள் வைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.. இதில் ஒரு அட்டைப்பெட்டி காவல் நிலையம் அருகே கிடக்கிறது.. இந்த கொலைகளை செய்த கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக களத்தில் இறங்குகிறார்கள். அப்போது காவல் நிலையத்தில் குற்ற செயல் செய்பவர்கள் பற்றி கிரைம் ஸ்டோரி எழுதுபவரும் குற்றவாளிகளின் இறந்த பிணங்களின் உருவங்களை ஸ்கெட்ச் போட்டு ஓவியம் வரைபவருமான கதாநாயகன் வைபவ், இந்த காவல்துறையினருக்கும், இந்த விசாரணைக்கும் உதவியாக இருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் பத்மன் இந்த கொடூர செயல்களை செய்து வரும் கொலைகாரனை கண்டுபிடிக்க பல விதத்தில் முயற்சி செய்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார். சிதைந்து போன கால்கள் கைகள் உடலையும் வரைந்து கொடுக்கும்போது அவை எல்லாம் வேறு வேறு நபர்களுக்கு சொந்தமானது என்று வைபவ் மூலம் தெரிய வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் பத்மன் திடீரென்று காணாமல் போகிறார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் பத்மனுக்கு பதிலாக இந்த கொலைகளைப் பற்றி விசாரிக்க தான்யா ஹோப் நியமிக்கப்படுகிறார். அவருக்கு துணையாக இருந்து வைபவ் இந்த கொலைகளுக்கான பின்னணிகள் பற்றியும் கொலையாளியை பற்றியும் கண்டுபிடிக்க இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள்.. காவல்துறை அதிகாரியான தான்யா ஹோப்பும், வைபவும் இணைந்து செயல்படும்போது அடுத்தடுத்து சில அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் பயப்படாமல் இருவரும் இணைந்து அந்த கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் மீதி கதை.
தனது 25வது படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியுள்ளார் வைபவ். பல படங்களில் காமெடி கலந்த மாதிரி நடித்து வந்த வைபவ் இப்படத்தில் எமோஷன்ஸ் காட்சிகளில் ஒரு விதமான அப்பாவித்தனமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். தனது முக தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் புதிதாக இருக்கிறார். எப்போதும் ஜாலியாக நடிக்கும் இவர் ஆக்ஷன் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் கதாநாயகி தான்யா ஹோப் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்குடன் இருக்கும் இவர் ஒவ்வொரு காட்சிகளையும் உணர்ந்து மிக சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
பத்துவயதுப் பெண் குழந்தைக்கு தாயாக நடித்து இருக்கும் நந்திதாஸ்வேதா, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். இறந்த மகளின் உடலைப்பார்த்து அவர் கதறி அழும் காட்சியில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் வரும் தாசரதி அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து இறந்த பிரேதங்களை உறவு கொள்ளும் கதாபாத்திரத்தில் மிகவும் கொடூரமாக மிக மிரட்டலாக நடித்திருக்கிறார்.
வைபவ்வின் காதலியாக வரும் சரஸ்மேனனுக்குக் காட்சிகள் குறைவென்றாலும் கண்களுக்கு நிறைவாக இருக்கிறார். சிறுமி பிரணதி, டார்லிங் மதன், சுரேஷ் சக்ரவர்த்தி,கிச்சா ரவி,ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் நன்றாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கி, ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது. பின்னணி இசை க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருக்கிறது.
நமது நாட்டில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டி ஒரு உண்மையான சம்பவத்தை புதிய கோணத்தில் கதை கருவையும் காட்சியையும் அமைத்து அதிர வைத்திருக்கிறார் இயக்குனர் ஷெரீப். இப்படத்தின் கதை, திரைக்கதையில் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த இடத்திலும், எந்த விதத்திலும் படத்திற்கு பாதிப்பு வராமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், இந்த “ரணம் அறம் தவறேல்” படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.