‘பைரி’ – திரைப்பட விமர்சனம்!

134

சென்னை:

டி கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் வி.துரைராஜ் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் ‘பைரி’ இப்படத்தில்  புதுமுகம் சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “பைரி” படத்திற்கு
ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு செய்ய,  அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்திருந்தாலும் ‘சேவல் சண்டை, ஆட்டுக்கடா சண்டை, ஜல்லிக்கட்டு’ போன்ற பல விலங்குகளை வைத்து படங்களை பல தயாரிப்பாளர்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து யாரும் படம் எடுத்ததில்லை. மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘புறா விடு தூது’ என்ற பெயரில் தனது நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு புறாவை தூதுவராக அனுப்பி வைப்பார்கள். இந்த புறா பந்தயம் என்பது வடசென்னையில் மிகவும் பிரபலமானது. இதனால் பல சண்டைகள், குத்து, வெட்டு போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து ‘பைரி பாகம் 1’ படத்தை ஜான் கிளாடி என்ற இயக்குனர் மிகவும் அற்புதமாக இந்த கதையை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தின் துவக்கத்தில் வில்லுப்பாட்டு ஒன்று பாடப்படுகிறது. அந்த பாடலுக்குள்ளேயே படத்தின் கதையும் ஆரம்பமாகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அருகுவிளை என்ற ஊரில் நடக்கும் புறா பந்தயம் சம்பந்தப்பட்ட ஒரு உன்னதமான கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. அந்த ஊரில் பல வீடுகளில் புறாக்களை வளர்ப்பது சகஜம். ஆனால் அந்த புறாக்களை பந்தயத்திற்கு விடுவது காலம் காலமாக அங்கு நடந்து வருகிறது. இந்தப் புறா பந்தயத்தை அந்த ஊரில் உள்ளவர்கள் ஒரு வீர விளையாட்டாக கருதுகிறார்கள். கதாநாயகன் சையதுமஜித்  மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து புறாவை வளர்த்து, அந்தப் புறாக்களை பந்தயத்தில் அனுப்பி வெற்றி பெறுவது தங்களது வாழ்வாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் புறா வளர்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டி அதனை பந்தயம் நடத்துவதில் கில்லாடியாக இருக்கிறார் கதாநாயகன் சையது மஜித்.

அந்த ஊரில் மிகப் பெரிய தாதாவாக வலம் வந்து கொண்டிருக்கும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் புறாக்களை வானில் பறக்க வைத்து பல வித சிறப்பு பயிற்சிகள் அளித்து வெற்றி பெற செய்வதை பெரிய கவுரவமாக நினைக்கிறார் சையது மஜித். ஏற்கனவே புறா பந்தயத்தால் பாதிக்கப்பட்ட சையது மஜித்தின் அப்பா, சித்தப்பா, தாத்தா என அவரது குடும்ப முன்னோர்கள் எல்லோருமே புறா வளர்ப்பில், புறா பந்தயத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டதைக் கண்டு வெறுப்பில் இருக்கும்  சையது மஜித்தின் அம்மா விஜி சேகர், தன் மகன் புறா பக்கம் பார்வையைத் திருப்பாமல், நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறார்,

அதற்காக, பொறியியல் கல்லூரியில் சையது மஜித்தை சேர்த்து விடுகிறார். கல்லூரி முடிக்கும் போது  சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்து, அவற்றை ‘அரியர்ஸ்’ ஆக சுமந்துகொண்டு கல்லூரியை விட்டு வெளியே வருகிறார். அந்த ‘அரியர்ஸ்’ஸை எழுதி முடிக்கும் வரை வீட்டில் புறா வளர்த்துக் கொள்ள தன் அம்மாவிடம் அனுமதியை வாங்கிக் கொள்கிறார் சையது மஜித். புறா வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடையவரான சையதுமஜித், இதனால் அவ்வப்போது பக்கத்து வீட்டு வாலிபர்களுடன் மோதல் ஏற்பட்டு சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். இதனால் எதிர் தரப்பினரிடம் பகையை வளர்த்துக் கொள்கிறார். அருகுவிளை பகுதியில் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம், அங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

அதேசமயம், சில பல கொலைகளை செய்து அந்த ஊரில் மிகப் பெரிய தாதாவாக வலம் வந்து கொண்டிருக்கும் வில்லனான வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்தி வருகிறார். வினோ லாரன்ஸுடன் போட்டி போட அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்கிறார் சையதுமஜித். இந்த சூழலில் ஊரில் புறா பந்தயம் நடத்துவதற்கு நாள் குறிக்கப்படுகிறது. தனது பணபலத்தைப் பயன்படுத்தி, பந்தயத்தில் தனது புறா வெற்றி பெற்றதாக நடுவரை முறைகேடாக அறிவிக்க வைக்கிறார் வினு லாரன்ஸ். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான்  ‘பைரி பாகம்1’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் ராஜலிங்கமாக நடித்திருக்கும் சையத் மஜித், அந்த கதாபாத்திரமாகவே மாறி  வாழ்ந்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவராக இருந்து தன் தோளில் சுமந்து நடிப்பில் மிரட்டி இருக்கிறார். போட்டியாளர்களுடன் சண்டை போடும்போதும் தனது அம்மாவிடம்  கோபத்தில் திட்டும்போதும் சிறந்த முறையில் நடித்திருக்கிறார்.  இது முதல் படம் என்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், ஒரு தனித்துவமான அம்மாவாக தன் மகனை எப்படி திருத்துவது என்பது புரியாமல் அவர் தவிக்கும் தவிப்பை தன் முகத்தில் காட்டி மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாகர்கோவிலில் பேசும் தமிழ் மொழியை அளவாகவும், அப்பகுதியில் இருப்பவர் போல் மிகக் கச்சிதமாக பேசி அசத்தியிருக்கிறார் விஜிசேகர்.

வில்லன் சுயம்புவாக வினுலாரன்ஸ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி சிறப்பாக நடித்திருக்கிறார். கிராமிய வில்லத்தனத்தை தனது பார்வையிலும், உடல்மொழியிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

ரமேஷ் பண்ணையாராக நடித்திருக்கும் ரமேஷ் ஆறுமுகம், தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற ஒரு பண்ணையார் இருந்தால் கண்டிப்பாக அந்த ஊரில் எந்தவித சண்டையும் சச்சரவும் நடக்காது என்பது போல,  அனுபவம் வாய்ந்த நடிகர் போல, தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளவாகக் கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் அமல் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஜான் கிளாடி மிகவும் இயல்பாக நடித்து பாராட்டு பெருகிறார்.

அமலின் மாற்றுத் திறனாளி அப்பாவாக நடித்திருக்கும் ராஜன், இறுதிக்கட்ட காட்சியில் மனிதம் தொடர்பான வசனம் பேசி, அனைவரது  இதயங்களில் இடம் பிடித்து விடுகிறார்.

கதாநாயகியாக  வரும் மேக்னா எலன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக அழகாக நடித்து அனைவரையும் கவனத்தையும் பெறுகிறார். கதாநாயகனின் மாமன் மகளாக நடித்திருக்கும் சரண்யா அளவோடு நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அந்த ஊர் பெண்ணாக மாறி, பேச்சு மொழி என இரண்டையும் மிகச் சிறப்பாக பேசி அசத்தியிருக்கிறார்.

அருண்ராஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. பின்னணி இசையால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

கதைக்களமான நாகர்கோயிலின் இயற்கை அழகை ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் கண்களுக்கு குளிச்சியை கொடுக்கிறது. அத்தோடு அம்மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

தமிழ்ச் சினிமா உலகில் இதுவரையில் யாரும் கண்டிராத புறா பந்தயத்தை மையமாக வைத்து திரையில் தீட்டிய முதல் இயக்குநர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி. புறா பந்தயத்தை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கிராபிக்ஸ் உதவியோடு புறா பந்தயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதை படமாக்கிய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது காட்சியமைப்பு, கதைக்களம், வசனங்கள், நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடிக்கு தொடர்ந்து படங்கள் இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பாகமும் வரும் என்று சொல்வதற்காக இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சியை பார்த்தவுடன் எதிர்ப்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘பைரி’ படத்தை பார்க்கும் ரசிகர்கள் கைத்தட்டி ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.