சென்னை:
சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய பிரசாத் ராமரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”. இப்படத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ், மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முதல் முறையாக பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் குமாரே இப்படத்தினை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
மதுரை நகரை மையப்படுத்தி இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்கள். கதாநாயகன் செந்தூர் பாண்டி, தன்னுடன் எந்த ஒரு பெண் பழகினாலும், அந்த பெண்களை தன் காதல் வலையில் சிக்க வைத்து, அனைத்து பெண்களையும், படுக்கையில் வீழ்த்தும், திறமையும், சாதுர்யமும் படைத்த ஒரு பெண் பித்தனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தன் முகநூலில் பெண்களுடன் சிரித்து பேசி அவர்களை தன்வசப்படுத்தி ஜாலியாக சுற்றி திரியும் செந்தூர் பாண்டிக்கு. முகநூல் மூலமாக பழகிக் கொண்டிருக்கும் தோழி பிரீத்தியை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைக்கிறார்.
இந்நிலையில் பிரீத்தியின் பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிவிட்டு எப்படியாவது உல்லாசமாக இருந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வழக்கம்போல் தனது காம விளையாட்டினை நிகழ்த்த மதுரையிலிருந்து மயிலாடுதுறைக்கு நண்பனுடன் செல்கிறார். அங்கு நட்பாக பழகும் பிரீத்தியை அழைத்துக் கொண்டு செந்தூர் பாண்டி பூம்புகார் செல்கிறார். பூம்புகாரில் பிரீத்தியிடம் தவறாக நடக்க முயன்ற செந்தூர் பாண்டி, தன் காம வலையில் பிரீத்தியை வீழ்த்தினாரா? தான் நினைத்தது நடந்ததா? என்பதுதான் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் செந்தூர் பாண்டி மதுரை மண்ணின் உடல் மொழியையும், அங்கு பேசும் தமிழ் மொழியையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என நினைத்தால், தொய்வு ஏற்படுகின்ற மாதிரி, சுமாரான நடிப்பினையே கொடுத்துள்ளார்.
ப்ரீத்தி கரண் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார். பல காட்சிகளில் அளவாகவும் நடித்திருக்கிறார். அசாதாரண சூழ்நிலையை அவர் கையாண்டு நடித்து இருப்பதை பாராட்டலாம்.
செந்தூர் பாண்டியின் நண்பர்களாக வரும் சுரேஷ் மதியழகன், ஆங்காங்கே யதார்த்தமாக அடிக்கும் காமெடிகள் நன்றாகவே இருந்தாலும், டபுள் மீனிங் வசனங்களை சரமாரியாக பேசி அல்லாட விடுகின்றனர்.
மேலும் பூர்ணா ரவி, தமிழ் செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா தங்களுக்கு கொடுத்த பணியை ஏற்று சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு கதைக்கு தகுந்தவாறு பக்கபலமாக பயணித்திருக்கிறது. பிரதீப் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கேற்ற பயணமாக உறுதுணையாக நின்றிருக்கிறது.
கிராமத்து இளைஞர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்கால கடந்த கால நினைவுகளை பல இடங்களில் நினைவிற்கு கொண்டு வந்தாலும், மனம்போன போக்கில் சுற்றும் 2k கிட்ஸ்களின் அவலத்தை பட மாக்கியிருக்கும் இயக்குனர் பிரசாத் ராமர், இன்னும் கூட சில அறிவுரைகளை சொல்லி இருக்கலாம்.அதோடு க்ளைமாக்ஸ் காட்சியில் எதையும் சொல்ல முடியாமல் படத்தை முடித்துள்ளார்.
மொத்தத்தில், ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான்.
ரேட்டிங்- 2.5/5.
RADHAPANDIAN.