‘ஜே. பேபி’ – திரைப்பட விமர்சனம்!

177

CHENNAI:

இந்திய ராணுவ வீரரான சேகர் நாராயணன், வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ’ஜே. பேபி’ திரைப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.. அதில் சில கற்பனைகள் கலந்து, சுரேஷ் மாரி இயக்கியுள்ள இப்படத்தினை, ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ சார்பில், பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இதில், ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சதீதா ராய், மாயா ஸ்ரீ  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இப்படத்தின் கதாநாயகி ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என ஐந்து பிள்ளைகள். தன் கணவர் இறந்த பின்னர் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி, அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி  சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் அண்ணன் தம்பிக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் சச்சரவு ஏற்பட அவர்கள் இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.  ஊர்வசிக்கு வயதான காரணத்தால் அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவது, அடிக்கடி எதாவது ஒரு வில்லங்கம் செய்து மாட்டிக் கொள்வது என புத்தி தடுமாறி இருக்கிறார்.

இதனால் அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுகிறது. என்ன செய்வதென்று புரியாமல் விழித்த ஊர்வசியின் பிள்ளைகள்   அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர்‌. இந்நிலையில் ஒரு நாள் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை போலவே அனைவரிடமும் அன்பு செலுத்தும் கதாநாயகி ஊர்வசி, திடீரென்று காணாமல் போய் விடுகிறார்.  இந்த சூழ்நிலையில் இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் இருவரையும் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர்  தொலைபெசி மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையத்துக்கு வரச் சொல்கிறார். அங்கு காணாமல் போன ஊர்வசி கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் தெரிய வருகிறது.

இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் இருவருக்கும் காவல்துறை ஆய்வாளர் காணாமல் போன தாய் இருக்கும் இடத்தை சொல்லி அங்கு சென்று தாய் ஊர்வசியை அழைத்து வர சொல்கிறார்.  ஆனால் அண்ணன் மாறன் மற்றும் தம்பி தினேஷ் இருவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் பேசிக் கொள்ளாமல் இருப்பதால், மொழி தெரியாத ஊரான  கொல்கத்தாவிற்கு சென்றார்களா?  தனது தாய் ஊர்வசியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘ஜே. பேபி’ படத்தின் மீதிக் கதை.

பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்து சிறந்த நடிகை  என்பதை நிரூபித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். உடல் மொழி, மன மொழி,   பேச்சு வழக்கு போன்றவற்றை  மாற்றி  நடித்து அசத்தி விட்டார். இப்படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி அவர்களுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை இப்படத்தின் மூலம்  அடையாளப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பி மீது ஏற்பட்ட பகையை அவர் வெளிப்படுத்தும் விதமாகட்டும், தனது வழக்கமான காமெடி வசனங்கள் மூலம் அவ்வபோது சிரிப்பதாகட்டும் அனைத்தையும் அளவாக செய்து அற்புதமாக நடித்திருக்கிறார்..

இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தொப்பை வயிறுடன் இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். தன் குடும்பத்துடன் சேர முடியாமல் தவிப்பவர் தனது மன வலியை வெளிப்படுத்தும் காட்சியில் அண்ணன் மாறனை மட்டும் அல்ல ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறார்.

ஊர்வசியின் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மெலடி டார்கஸ், மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாட்சாயிணி, தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, லொள்ளு சபா மாறனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவரும் நடுத்தர குடும்பத்து பெண்களை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் இயல்பாக தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள்.

அதைவிட ஆச்சரியம் விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் எந்தவிதமான முன் அனுபவம் இல்லாமல்  ராணுவ வீரரான சேகர் நாராயணன் மிக சிறப்பாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிரவன் பாலு மிகவும் மிரட்டலான நடிப்பை கொடுத்து அசத்திருக்கிறார்.

டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையும் இக்கதைக்கு தேவையானதை செய்துள்ளது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவின் தெருக்களை அப்படியே தத்ரூபமாக காட்டியுள்ளதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

இயக்குனர் சுரேஷ் மாரியின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தில் நடந்த தனது பெரியம்மாவின் கதையை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அவர் அந்த சம்பவத்தை உயிரோட்டம் மிக்க காட்சிகளோடு, உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்து அனைத்து ரசிகர்களையும்  கண்கலங்க வைத்துவிடுகிறார். எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த  இயக்குநராக வலம் வருவார் என்பதில் துளி கூட ஐயமில்லை. இது மாதிரியான தாய் மகன், மகள் உறவுகளை வைத்து படம் வெளி வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. இப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் மாரிக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், இந்த ’ஜே.பேபி’ படத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.