‘வெப்பம் குளிர் மழை’-திரைப்பட விமர்சனம்!

162

சென்னை:

புதுமுகங்கள் திரவ், இஸ்மத் பானு இவர்களுடன்  ரமா, எம் எஸ் பாஸ்கர், மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் அபிபுல்லா , விஜயலட்சுமி ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘வெப்பம் குளிர் மழை’ இப்படத்தை கதை எழுதி இயக்கி இருக்கிறார்: பாஸ்கல் வேதமுத்து.

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

பல கிராமங்களில் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கர்ப்பம் ஆகாத பெண்ணுக்கு அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ‘மலடி என்று பட்டம் சூட்டி விடுவார்கள். அந்த கிராமத்தில் மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் கதாநாயகன் திரவுக்கும், கதாநாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கதாநாயகன் திரவ் குழந்தை பெற லாயக்கு இல்லாதவன் என்று தூற்றுகிறார்கள். இந்த சூழலில் வீட்டில் உள்ள மாமியார் எப்போது பார்த்தாலும் தன் மருமகளை மலடி என்று தூற்றுகிறார். இதனால் வேதனையடைந்த திரவ்-இஸ்மத் தம்பதிகள், தங்கள் உடலில் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதிக்க மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

அதன்படி இருவரையும் மருத்துவர் பரிசோதித்ததில் திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.  இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்னால் மிகுந்த வேதனைப்படுவார் என்று நினைத்த இஸ்மத், அவரிடம் எதையும் சொல்லாமல் குழந்தையின்மை பிரச்சனையால் தனது கணவர் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிரடியாக ஒரு முடிவு எடுக்கிறார். இதனால் கதாநாயகி இஸ்மத் எடுத்த அதிரடி முடிவால் அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே தம்பதி இருவருக்கும்  இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதுதான் ‘வெப்பம் குளிர் மழை’படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் திரவ், புதுமுகம் என்றாலும் முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். தான் செய்த தவறை நினைத்து கதறி அழுவது, மனைவி தனக்கு தெரியாமல் செய்த காரியத்தால் தன் மனைவியிடம் பேசாமல் தவிப்பது, என்று அனைத்து உணர்வுகளையும் தனது ஆழமான நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக சிறந்த  முறையில் நடித்திருக்கிறார். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக நடித்து பெத்தபெருமாள் என்ற கதாபாத்திரமாகவே இப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

ஒரு கிராமத்து பெண் எப்படி இருப்பாளோ அதேபோல் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த  கதாநாயகி இஸ்மத் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது இயல்பான நடிப்பு மூலம் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார். அவருடைய நடிப்பு மட்டும் இன்றி, வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனது ஒவ்வொரு அசைவுகளின் தன்மையை உணர்ந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்தி விட்டார். இந்த படத்திற்க்குப் பிறகு அவருக்கு பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெரியவர் அங்குள்ள திண்ணையில் அமர்ந்து வருகிறவர், போகிறவர்களை அழைத்து நையாண்டி பேசும் கிராமத்து தாத்தாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தோற்றத்தில் வேறுபடுத்திக் காட்டினாலும் அது அவருடைய கதாபாத்திரத்திற்க்கும் பேசும் கருத்துகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகன் திரவ்வின் அம்மாவாக நடித்திருக்கிறார் ரமா. கொடுமைக்கார மாமியாராகத் திறமையாக  நடித்திருக்கிறார்.ஒருகட்டத்தில் மருமகளுக்கு ஆதரவாக மாறுகிற காட்சியில் அனைவரையும் கவர்கிறார்.  மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, கருப்பு போன்ற மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை நன்றாக புரிந்துக் கொண்டு  சரியாக செய்திருக்கிறார்கள்.

பிரித்விராஜேந்திரனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகுகளைக் காட்சிப்படுத்த முனைந்திருக்கிறது. கூடவே கிராமத்து மனிதர்களையும் இயல்பு மாறாமல் படம் பிடித்து அசத்தி இருக்கிறார்.

சங்கர் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக இசையை கொண்டு செல்கிறார்.

பாஸ்கல் வேதமுத்து தன் உறவினர் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துதான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். குழந்தையின்மை கருத்தை கொண்டு மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து, அதற்கான அறிவியல் தீர்வு இருந்தாலும், அதை இன்னமும் கிராமத்தில் வாழ்பவர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற அவரது ஆர்வம் பல தம்பதிகளின் வாழ்வில் புது ஒளியை ஏற்றி வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு மாறுபட்ட கதையை கையில் எடுத்து அதை திறம்பட  இயக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில், இந்த ‘வெப்பம் குளிர் மழை’ படம் புதிதாக திருமணம் செய்துக் கொண்டவர்களுக்கு ஒரு பாடம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN>