சென்னை:
ஜி வி பிரகாஷ், பாரதிராஜா, இவானா, தீனா மற்றும் பலர் நடிப்பில் பி வி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கள்வன்’.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,
சத்தியமங்கலம் அருகில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த மலைப்பகுதியில் வாழும் யானை, புலி, சிங்கம் போன்ற பல மிருகங்களும் அங்கு நடமாடி வருகின்றன. இந்த சூழலில் ஒரு நாள் அந்த மலைப்பகுதியில் வாழும் ஒருவரை காட்டு யானை ஒன்று கொன்று விடுகிறது. இதற்கு அரசாங்கம் 4 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்குகிறது.
இதில் கதாநாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷ் தனது நண்பன் தீனாவுடன் இணைந்து அந்த கிராமத்தில் உள்ள சில இடங்களில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து மாட்டிக் கொள்கிறார்கள்.. இந்த நிலையில் பக்கத்து கிராமத்து பெண்ணான இவானா வீட்டில் திருடச் சென்று அங்கு ஜிவி பிரகாஷும், தீனாவும் மாட்டிக் கொள்கின்றனர்.. இவானாவின் தந்தை காவல்துறையிடம் அவர்களை விட்டு விடும் படி சொல்கிறார். இந்த சூழ்நிலையில் இவானா தனது கல்லூரியில் இருந்து ஒரு முதியோர் இல்லத்தில் நர்ஸ் பணிக்காக செல்லும்போது அங்கு சென்று எப்படியாவது இவானாவை காதலிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் ஜிவி பிரகாஷ்.. ஆனால் ஜிவி பிரகாஷ் திருடன் என்பதால் அவரை வெறுக்கிறார் இவானா.
ஆனால் அந்த முதியோர் இல்லத்தில் வேலைக்காக செல்லும் ஜீவி பிரகாஷ் வயதான முதியவரான பாரதிராஜாவை சந்திக்கிறார். யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை, அந்த முதியோர் இல்லத்திலிருந்து தத்தெடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஜீவி பிரகாஷ்.. பாரதிராஜாவை தன்னது வீட்டிற்கு அழைத்து வந்து தன் நண்பன் தீனாவுடன் இணைந்து ஒரு பெரிய திட்டத்தை தீட்டி அங்குள்ள காட்டு யானை மூலம் அவரை சாகடிப்பதற்கு துணிகிறார். இறுதியில் பாரதிராஜாவை யானை மிதித்துக் கொன்றதா?இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
கெம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் தனது தோற்றத்தில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் வழக்கமாக தாடி, மீசையுடன் எதற்க்கும் மெனக்கெடாமல் கொங்கு தமிழ் பேசி நடித்ததில் அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். கதைக்கேற்றவாறு திருடன் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி சிறந்த முறையில் அசத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா, புன்னகை பூக்கும் அழகு முகத்தோடு ரசிகர்களை தன் வசமாக்கிக் கொண்டு அனைவரையும் கவர்கிறார். தனது இயல்பான நடிப்பு மூலம் கதைக்கு ஏற்றவாறு தன் கதாபாத்திரத்தை உணர்ந்து பயணிப்பவர் இறுதியில் ஒரு திருடனை திருமணம் செய்துக் கொண்டு வாழும் காட்சிகள் சூப்பர்.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தீனா, படம் முழுவதும் வலம் வருகிறார். அதிகமாக வசனங்களை பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்றாலும், தனது வழக்கமான பாணியின் மூலமாக சிரிக்க வைப்பவர், குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் காட்டி இருக்கிறார்.
ஒரு சர்க்கஸ் கம்பெனியின் முதலாளியாக வாழ்ந்து வயது முதிர்ந்த பிறகு தனக்கு யாரும் துணை இல்லாமல் ஏக்கமான மனநிலையோடு ஒரு முதியோர் இல்லத்தில் பரிதாபமாக அறிமுகமாகும் பாரதிராஜா, ஜி.வி.பிரகாஷின் தாத்தாவாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் செய்து பேரன்களை விரட்டிப்பது கலகலப்பாக இருந்தாலும், அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்லும்போது நம்மை கலங்க வைத்து விடுகிறார்.. அந்த ஊருக்குள் வந்து குழந்தையை பலி வாங்க நினைக்கும் புலியை பார்வையால் விரட்டுவது, மலையாளத்தில் பேசி யானையை அடிப்பணிய செய்வது என்று தன் கதாபாத்திரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.
ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள், வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். ரேவாவின் பின்னணி இசை கதைக்கு தகுந்தவாறு பலம் சேர்த்திருக்கிறது.
மலைப்பகுதியில் உள்ள ரம்மியமான பசுமை நிறைந்த காட்டில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை படமாக்கிய விதம் ஒளிப்பதிவாளராக பி.வி.சங்கர் மிக சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறார்..
காதல், காமெடி, வேதனை, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் அளவாக காட்சியமைத்து அனைத்து ரசிகர்களுக்குமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பி.வி.சங்கர் யானை சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் அதிகமாக கதையில் சேர்த்து இருக்கலாம்.திரைக்கதையில் ஒரு நல்ல விறுவிறுப்பை கொடுத்து இருக்கும் இயக்குனர் ஒரு சில இடங்களில் சிறிது கவனம் செலுத்தி இயக்கி இருக்கலாம்.
மொத்தத்தில், இந்த ‘கள்வன்’ அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.