சென்னை:
ராமராஜன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா, லக்க்ஷா சரண், லியோ சிவகுமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, கஜராஜ் மைம் கோபி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘சாமானியன்’ வி மதியழகன் தயாரிப்பில் ஆர் ராகேஷ் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு தனது நண்பர் எம் எஸ் பாஸ்கரை அழைத்துக் கொண்டு வருகிறார் ராமராஜன்.. அவர்கள் இருவரும் சென்னையில் வந்து இறங்கியவுடன் முஸ்லிம் நண்பரான ராதா ரவியின் வீட்டிற்கு செல்கின்றனர். ராதாரவி வீட்டில் தங்கி விட்டு பிறகு சென்னையில் உள்ள ஒரு பிரபல வங்கியில் 35 லட்ச ரூபாய் பணம் செலுத்துவதற்காக அங்கு செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே அந்த வங்கியில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க மூன்று இளைஞர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டத்தின்படி ஒருவர் வங்கியின் உள்ளே நுழைய, அங்கு ராமராஜன் பணம் செலுத்துவதற்காக உதவி மேலாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மிகுந்த மரியாதையுடன் கேட்கிறார்.
அந்த உதவி மேலாளரும் 35 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய வந்திருப்பதை அறிந்து தன்னுடைய மானேஜர் போஸ் வெங்கட்டிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். மானேஜர் அறையில் ராமராஜன் அங்கு தனது பெட்டியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெட்டியை திறக்கிறார் அந்த பெட்டியின் உள்ளே சக்தி வாய்ந்த ஆர் டி எக்ஸ் டைம் பாம் ஒன்றும், அதன்பிறகு கையில் துப்பாக்கி ஏந்தி அந்த மானேஜரை ராமராஜன் மிரட்டுகிறார். அந்த வங்கியில் உள்ள அனைவரையும் வெளியே வர செய்து வங்கிக்குள்ளயே துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு முனையில் அங்கிருப்பவர்களை சிறை வைக்கிறார். இந்த நிலையில் ராமராஜனின் நண்பர்களான எம் எஸ் பாஸ்கர் மானேஜர் வீட்டுக்குள் சென்று அங்குள்ள பெண்ணையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் துப்பாக்கி முனையில் பயமுறுத்துகிறார்.
அதேபோல் உதவி மேனேஜர் வீட்டில் ராதாரவி அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். மூன்றாவதாக, வங்கியின் மற்றொரு அதிகாரி வசித்து வரும் வீட்டை காலி செய்து, மதுரையில் உள்ள இளம் தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை அழைத்து வந்து குடி வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.எதற்காக ராமராஜன், எம் எஸ் பாஸ்கர், ராதாரவி இந்த மூவரும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதையும், இந்த மூவரும் வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க வந்து இருக்கிறார்களோ.. என்று நினைக்கும் போது கதை வேறு விதமாக செல்கிறது. இந்நிலையில் வங்கியில் வெடிகுண்டு வைக்க முயன்ற ராமராஜனையும் மற்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்களா? இல்லையா/ என்பதுதான் ‘சாமானியன்’ படத்தின் மீதி கதை.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களம் இறங்கியிருக்கும் ராமராஜன், கதாநாயகி, காதல், பாடல் என்று ஆடி பாடும் காட்சிகள் எதுவும் இல்லாமல், கமர்ஷியலாக அடிதடி சண்டைகள் அதிகமாக இல்லாமல், தற்போதைய வயதுக்கு ஏற்ற கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன்னிடம் உள்ள இயல்பான நடிப்பை சிறப்பாக காட்டி நடித்திருக்கிறார். இருப்பினும் நடிப்பின் மீது என்றும் ஆர்வம் குறையாமல் நடித்திருக்கும் அவரது முயற்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
கதாநாயகன் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி இருவரும் கதாநாயகன் ராமராஜனுக்கு மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருப்பதோடு, தங்களது அனுபவ நடிப்பை கொடுத்து திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக பயணித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் புதுமுக கதாநாயனாக அறிமுகமாகி இருக்கிறார் லியோ சிவகுமார், அவருக்கு ஜோடியாக நக்ஷா சரண் நடித்திருக்கிறார். இருவரும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு இறுக்கமான முடிச்சு போட்டு விடுகிறார்கள். காதல் அன்பு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்து அசத்தி இருக்கின்றனர். சொந்த வீடு என்ற கனவு நினைவான பிறகும், கடன் தொல்லையால் நிலைகுலைந்து போகும் இருவரது வாழ்க்கையைக் கண்டு ரசிகர்களை கண்கலங்க வைத்து விடுகிறது.
வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, போலீஸ் ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வன், கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்றவாறு தனது ஒளிப்பதிவு மூலம் சிறந்த முறையில் காட்சிகளை அமைத்து கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கிய ஒவ்வொருவரும் கஷ்டப்படும் கதைக் களம் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, கடன் என்ற பெயரில் பொதுமக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் வங்கிகளின் திருட்டுத்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் கே.கார்த்திக் குமார் எழுதியிருக்கும் கதையை மிக நேர்த்தியாகவும், மக்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷுக்கு பாராட்டுக்கள். வங்கிக் கடன் நடைமுறைகள் மக்களை எப்படியெல்லாம் வதைக்கின்றன என்பதையும் உள்ளும் புறமும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் உணர்வுப் பூர்வமாகச் சாமானிய மக்கள் புரிந்துக்கொள்ளும்படி மிக தெளிவாக சொல்லியிருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களை அளவாக கையாண்டு இந்த ‘சாமானியன்’ சாதாரணமானவன் இல்லை என்று காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘சாமானியன்’ படம் கடன் வாங்கி வீடு வாங்குபவர்களுக்கு ஒரு பாடம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.