சென்னை;
தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை என்ற ஊரில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து ‘கருடன்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் சமுத்திரகனி, ரேவதி சர்மா, மைம் கோபி ஆர்.வி. உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யன் ஜெயப்பிரகாஷ், பிரிங்கிடா சகா மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தை ‘எதிர்நீச்சல்’ ‘கொ’டி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,
கோம்பை என்ற ஊரில் சசிகுமாரும், உன்னி முகுந்தனும் சிறுவயதில் இருந்தே இணை பிரியாத நண்பர்களாக பழகி வருகின்றனர். எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து பேசிய பிறகுதான் அதற்கு உண்டான பணிகளை செய்வார்கள். இந்நிலையில் அங்கு சிறுவயதில் இருந்து அனாதையாக இருந்த சூரியை உன்னி முகுந்தன் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்து, சாப்பாடு போட்டு அவரை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார். சசிகுமாரும், உன்னி முகுந்தனும் எந்த வேலை சொன்னாலும் உடனே செய்து முடித்து விடுவார் சூரி. அதே சமயம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் உறவு பாராட்டுகிறார் சூரி.
இந்நிலையில் அந்த ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து தங்க நகைகளையும், நிலங்களையும் உன்னி முகுந்தனும், அவரது தாயார் வடிவுக்கரசியும் பராமரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள அந்த கோயிலுக்கும்சொந்தமான நிலத்தை அமைச்சரான ஆர்.வி. உதயகுமார் அபகரிக்க நினைக்கிறார். அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் தாய் வடிவுக்கரசி மூலம் வங்கி லாக்கர்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் அந்த கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று எண்ணத்தில் கோம்பை ஊரில் உள்ள மைம் கோபியுடன் இணைந்து எப்படியாவது அந்த நிலத்தை கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் அமைச்சர் ஆர்.வி. உதயகுமார். அந்த நிலத்தை அவர்களிடம் இருந்து அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் கைப்பற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘கருடன்’ படத்தின் மீதி கதை.
காமெடி நடிகராக வலம் வந்த சூரி ’விடுதலை’ படத்தின் மூலம் காமெடி நடிகரையும் தாண்டி அழுத்தமான நடிகராக உயரத்திற்கு சென்ற சூரி, மீண்டும் இப்படத்தின் மூலம் மேலும் உயரத்திற்கு சென்றிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் வெள்ளந்தி மனிதராகவும், முதலாளியின் வெறித்தனமான விசுவாசியாகவும் சூரி அதிரடி காட்டியிருக்கிறார். ஒரு ஆக்சன் ஹீரோவாகவே மாறி அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் எதிர்பார்க்காத அளவிற்கு துணிச்சலாக மோதி அசர வைக்கிறார். இன்றுள்ள முன்னணி ஹீரோக்கள் எவருக்கும் எள்ளளவும் குறையாத வகையில் ஆக்ரோஷத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் ஆதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், நட்புக்கு அடையாளமாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் மிக எதார்த்தமாக நடித்து அனைவரின் மனதையும் கவர்கிறார். அவரின் எதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்து அனைத்து ரசிகர்கள் மனதிலும் பதிந்துவிட்டார். பல படங்களில் நடித்த அனுபவம் அவருக்கு இருப்பதால், இதில் மிகவும் எளிதாக, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்.
கருணாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உன்னி முகுந்தன், மிகவும் அருமையாக இந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். நண்பன் சசிகுமாரை பகைத்து கொள்ளும் போதும், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் நிலையை உணரும் போதும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மிக அருமையாக அனைவரும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவில், தேனி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப் பகுதியின் குளுமையையும் மிக அழகாக படமாக்கி ரசிக்க வைத்து இருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.
மண், பெண், பொன் இவை மூன்றும்தான் இப்படத்தின் கதையோட்டத்திற்க்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.
நல்ல கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி கமர்ஷியல் ஆக்ஷன் படமாகவும் கொடுத்து திரைப்பட ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகத்தில் அரசியல்வாதிகள் கோவில் நிலத்தை கொள்ளையடிக்க நினைக்கும் கதையை மிக சிறப்பாக திரைக்கதை அமைத்து அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை மையமாக வைத்து இந்த ‘கருடன்’ திரைப்படத்தை எந்தவித தொய்வு இல்லாமல் இயக்கியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில், இந்த ‘கருடன்’ படம் அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.