சென்னை:
எஸ்.பி. சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா, மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘அஞ்சாமை’.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இந்தியாவில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி இறுதி தேர்வு எழுதி முடித்தவுடன் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தேர்வான நீட் என்ற தேர்வை கண்டிப்பாக எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தற்போது மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றால் அது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது. மருத்துவ படிப்பு படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்கள் அந்த இரண்டு எழுத்து நீட் என்று சொல்லுக்கு பயந்து பலர் அந்த தேர்வு எழுதாமல் மற்ற பொறியியல் கல்லூரியில் சேருகின்றனர். இந்த நீட் தேர்வை எழுதினாலும் பல மாணவ மாணவிகள் அந்த தேர்வில் தோல்வியடைந்து அதனால் தற்கொலை செய்து கொண்டவர்கள்தான் அதிகம்.
மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை எழுத முயலும் மாணவ மாணவிகள் மத்தியில் நடக்கும் பிரச்சனைகளையும், அதன் வலிகளையும் மையமாக வைத்து ‘அஞ்சாமை’ என்ற படத்தின் மூலம் பல முக்கியமான விஷயங்களை சொல்லி, இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்து புரிய வைத்து இருக்கிறார் இயக்குனர் எஸ் பி சுப்புராமன்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் என்னும் கிராமத்தில் கதாநாயகன் விதார்த் தனது மனைவி வாணி போஜன் மற்றும் தன் மகள், மகன் கிருத்திக் மோகனுடன் தனது நிலத்தில் பூக்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது மகன் பள்ளி இறுதி தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவது மாணவனாக தேர்ச்சி பெற்று அனைவரது பாராட்டையும் பெறுகிறார். மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்த விதார்த்தின் மகன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகிறது..
மருத்துவப் படிப்பிற்காக புதிதாக நுழைவுத் தேர்வு நீட் எழுத வேண்டிய கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், தன் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்து நீட் தேர்வு மையத்தில் தன் மகனை படிக்க வைக்கிறார் விதார்த். நீட் தேர்வுக்கான மையம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யும் கிருத்திக்கிற்கு ஜெய்பூரில் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்படுகிறது. வேறு வழி இல்லாமல் விதார்த் தன் மகனை அழைத்துக் கொண்டு ரயிலில் ஜெய்ப்பூர் செல்கிறார். அங்கு தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வு எழுதுவதற்குள் விதார்த் மன உளைச்சலுக்கு ஆளாகி இறக்கிறார். தனது தந்தையின் இறப்புக்கு நீதி கேட்கும் மாணவனுக்கு, வழக்கறிஞர் ரஹ்மான் துணையாக நின்று, சட்ட ரீதியாக நீட் தேர்வு மைய அதிகார்கள் மீது வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் போராடி ரஹ்மான் ஜெயித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘அஞ்சாமை’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் விதார்த் ஏழை விவசாயியாகவும், குடும்பத் தலைவனாக பாசமுள்ள தந்தையாகவும் உண்மையிலேயே சர்க்கார் என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தன் மகனின் மருத்துவர் கனவை நனவாக்கப் போராடும் ஒரு உன்னதமான தந்தையாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் விதார்த். அவர் ஜெய்ப்பூரில் நடுரோட்டில் நடக்க முடியாமல் கண்கள் சொருகி இறக்கும் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கே வாணிபோஜனுக்கு ஒரு தனி சல்யூட் வைக்கலாம்.அந்த கதாபாத்திரத்திற்க்கு உயிர் கொடுத்து படத்துக்குப் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார். தனது கணவன் இறந்த நேரத்தில் கண்கலங்கும் காட்சியில் கதாநாயகி வாணி போஜனின் நடிப்பு அபாரம்.
ரகுமான் காவல்துறை அதிகாரியாக மிக நடித்திருந்தாலும், விதார்த் மற்றும் மகனுக்காக உதவி செய்த காரணத்தால் காவல்துறை அதிகாரி பணியை துறந்து வழக்கறிஞராக அவதாரம் எடுக்கும் நல் உள்ளம் கொண்டவராக நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்.
விதார்த் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரித்திக் மோகன் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் ஒளிப்பதிவின் மூலம் கிராமத்து காட்சிகளையும், ஜெய்ப்பூர் உள்ள ரோடு காட்சிகளையும் மிகுந்த கவனம் செலுத்தி படமாக்கியிருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து கவனம் ஈர்க்கிறது.
நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்காமல் இருப்பதை, புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன், உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் இலட்சணங்களையும் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். நீட் தேர்வினால் ஏற்படும் அவலங்களை சுட்டிக் காட்டி எடுத்து இருக்கும் இயக்குனர் பல உண்மைகளை மக்களுக்கு புரியும்படி சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘அஞ்சாமை’ படம் நீட் தேர்வுக்கு முழுக்கு போட வைக்கும் ஒரு உன்னதமான படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.