’லாந்தர்’ திரைப்பட விமர்சனம்!

134

சென்னை:

விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘லாந்தர்’.  இப்படத்தை சஜிசலீம் எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கோவையில் உள்ள சாய்பாபா காலனி காவல் நிலையத்தில், காவல்துறை உதவி ஆணையராக இருக்கிறார் நாயகன் விதார்த். நேர்மையும், மனிதநேயமும் ஒருங்கே அமைந்த அவர் தமிழகத்தில் உலுக்கி கொண்டிருக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டுபிடித்து, அவர்களை அடித்து உதைத்து கைது செய்து லாக்-அப்பில் அடைக்கிறார். தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் கதையைப் போல இந்த படத்தில் முதல் காட்சி அமைந்து இருப்பதை பார்க்கும்போது உண்மையில் நடந்த சம்பவம் போல காட்சியை எடுத்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவை நகருக்கு வெளியே, புறநகரில், ஒதுக்குப்புறமான தனி இடத்தில் உள்ள வீடு ஒன்றில் விதார்த் தன் மனைவி ஸ்வேதா டோரத்தியுடன் வசித்து வருகிறார். விதார்த்தின் மனைவிக்கு இருட்டு என்றாலும் அதிக அளவில் வெடி சத்தம் கேட்டாலும் சட்டென்று பயந்து  மயங்கிவிடும் நோயினால் பாதிப்படைந்ததால் வெளியில் எங்கு சென்றாலும் தன் மனைவியை காண வீட்டிற்க்கு வந்து விடுவார் விதார்த். இந்த சூழ்நிலையில்கோவை நகர சாலைகளில்,  அதுவும் இரவு வேளையில், அடையாளம் தெரியாதவாறு மழைக்கோட்டு அணிந்து தன்னை மறைத்துக்கொண்ட ஒரு மர்ம நபர், ஒரு கையில் கனமான இரும்புத்தடியை வைத்துக் கொண்டு ஒரு காலை இழுத்து இழுத்து நடந்து செல்கிறார். அவர் தன் பார்வையில் படும் மனிதர்களையெல்லாம் தன் கையில் இருக்கும் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்குகிறார். இந்த தாக்குதலில் ஒரு சிலர் உயிரிழக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. அந்த முகம் தெரியாத நபரை தேடி செல்லும் காவல்துறையில் உள்ள காவலர்கள் சிலர் அந்த மர்ம மனிதனால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் காவலர்கள் தாக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அந்த முகம் தெரியாத மர்ம நபரை பிடிப்பதற்காக கதாநாயகன் விதார்த், நேரடியாக களத்தில் இறங்குகிறார்.  அந்த சைக்கோ கொலையாளியை தேடிச் சென்ற விதார்த் அந்த கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா?  அவருடைய பின்னணியில் நடந்த விவரங்களை கண்டுபிடித்தாரா? என்பதுதான் ‘லாந்தர்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக, காவல் துறை உதவி ஆணையர் அரவிந்தாக விதார்த் நடித்திருக்கிறார். கம்பீரம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு சர்வகாலமும் செயற்கையாக நெஞ்சை திமிர்த்தித் திரியும் காவல்துறை அதிகாரி போல் இல்லாமல், மனிதத்தன்மையோடு மிகவும் இயல்பான தோற்றத்தில் சிறப்பாக தன் நடிப்பு திறமையை காட்டியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என படத்தில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஞான சவும்தார் ஒளிப்பதிவு மூலம் இப்படத்திற்கு  பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு தேவையான அளவிற்க்கு கைகொடுத்திருக்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் ஆக்சன், செண்டிமெண்ட் என்று எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தடித்து அசர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை வேலை வாங்கி, படத்தை தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்று படத்தை இயக்கியிருக்கிறார் ஷாஜி சலீம்.

மொத்தத்தில், ‘லாந்தர்’ வெளிச்சம் தரும் படம்தான்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.