’கல்கி 2898 கி.பி’ திரைப்பட விமர்சனம்!

182

சென்னை:

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், விஜய் தேவர் கொண்டா, ராமகோபால் வர்மா, ராஜ் மௌலி, துல்கர் சல்மான், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி பிரம்மானந்தம், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘கல்கி 2898கி.பி.  இப்படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இக்கதையில், அஸ்வத்தாமனுக்கு சாபம் விடுக்கிறார் கிருஷ்ணர். இந்த சாபம் நீங்க வேண்டும் என்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்தாமனுக்கு அழிவில்லை என்றும் கூறி விடுகிறார். மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையைதான் முற்றிலும் மாறுபட்ட முறையில்   திரைப்படமாக  உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது. சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் உருவாக்கிய சாம்ராஜ்யமாக வானுயர்ந்த நிலையில் அமைந்து நிற்கிறது “காம்ப்ளக்ஸ்”. அங்கு தீயவர்கள் உலகை ஆக்கிரமிக்கிறார்கள். நாட்டிலுள்ள எல்லா வளத்தையும் அவர்கள் உறிஞ்சி எடுத்து தங்கள் கட்டுப்பாட்டில்  உள்ள காம்ப்ளக்ஸில் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாடிற்க்குள் வைத்து இஷ்டத்திற்க்கு அனுபவிக்கிறார்கள்.  காம்ப்ளஸுக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்த காம்பிளக்ஸ் எனற உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கதாநாயகன் பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து கொண்டு காம்பிளக்ஸ் என்ற உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறார். இதற்காக கதாநாயகன் பிரபாஸ் எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார். மேலும், காம்ப்ளக்ஸை சேர்ந்தவர்கள் செயற்கை முறையில் பெண்கள் கருவுறுவதற்காக பல பெண்களை சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள். காம்பிளக்ஸ் என்ற உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தெய்வீகம் பொருந்திய ஒரு பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவின் சீரம் தான் தன்னை மேலும் பலமாக்கும் என்று நினைக்கும் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி அலைகிறார். அவர் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் கமல்ஹாசன் குழுவினர் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் கமல்ஹாசன் குழுவிடமிருந்து கதாநாயகி தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.  தீபிகா படுகோனேவின் கருவில், கடவுள் பிறக்கப்போகிறார் என அமிதாப்பச்சன் தனது ஞானத்தால் தெரிந்து கொள்ள, அவரைக் காப்பாற்ற குகையில் இருந்து வெளியே வருகிறார்.  உலகை விடியலுக்கு அழைத்துச் செல்வதற்காக கமல்ஹாசன் குழுவினருக்கு எதிராக ஷோபனா, பசுபதி என ஒரு தனியாக போராளிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். யாராலும் எதிர்த்து சண்டையிடவே முடியாத அமிதாப்பை எதிர்த்து சண்டையிடும் தைரியமும், திடகாத்திரமும் பெற்ற ஒரே நபர் பிரபாஸாக இருக்க, அப்போது கமலஹாசனின் கமாண்டர் சஸ்வதா சாட்டர்ஜி, தீபிகா படுகோனேவை மீட்டு வர பிரபாஸை அனுப்புகிறார். இதன் விளைவாக அமிதாப்பும் பிரபாஸும் நடத்தும் மோதலின் முடிவு என்ன? தீபிகா படுகோனேவின் கருவில் உள்ள சீரத்தை  எடுக்க விடாமல் அமிதாப் தடுத்தாரா?  என்பதுதான் ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் பிரபாஸ் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் படம் முழுவதும் ஆக்கிரமித்து இருப்பவர் அமிதாப் பச்சன்தான். ஒரு அடியாள் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பதால் அது பெரிதாக கருதப்படுகிறது.  வழக்கம் போல் அவரது மாஸ் கமர்சியல், சண்டைக் காட்சிகள் உள்ள நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள். இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படும்படி வைத்துள்ளார்கள்.

கமல்ஹாசன் சூப்பர் பவராக வரும்  அவரது கெட்டப்பே பிரமிப்பாக இருக்கிறது. படத்தின் மெயின் வில்லன் இவர்தான் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தாலும் இவரது முகதோற்றம் அனைவரையும் கவரும். இவரது கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில்தான் பெரிதளவில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டே காட்சிகளில் மட்டும்தான் கமல் வந்தாலும் இரண்டாவது பாகத்தில் அவருக்கு நிறைய வேலை இருப்பது புரிகிறது.

கதாநாயகியாக வரும் தீபிகா படுகோனே அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் தன் நடிப்பில் அனைவரையும் கவனிக்க வைத்து இருக்கிறார்.

ஒரு காட்சியில் வந்து பிரபாஸை காதலித்து விட்டு போகும் திஷா பதானி, ஷம்பலாவின் காவல் மாதாவாக வரும் ஷோபனா, வீரன் என்ற வேடத்தில் பசுபதி மற்றும் காம்ப்ளக்ஸ் கமாண்டர் சாஸ்வதா சாட்டர்ஜி ஆகியோருடன், இந்திய இயக்குனர்களான ராம்கோபால் வர்மா, ராஜமவுலி, அனுதீப், நடிகை மிர்ணாள் தாகூர், விஜய் தேவரகொன்டா, துல்கர் சல்மான் என்று படம் முழுவதும் நட்சத்திர பட்டாளம் நிறைந்து இருக்கிறது.

செர்பியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிக் தனது ஒளிப்பதிவு மூலம் மிகப்பெரிய அளவில் அனைவரும் ரசிக்கும்படி காட்சிகளை எடுத்து அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறது.

மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்‌ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். இடைவேளை வரை படத்தோடு நம்மை இணைத்துக் கொள்ள முடியாமல் அனிமேஷன் காட்சிகளாக நகர்ந்து கொண்டிருக்க, பின் பாதிப் படம் பரபரப்புடன் நகர்ந்து அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும் ஆவலுடன் படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர். வெறுமனே நவீன கதையைச் சொன்னால் அது ஒட்டாமல் போய்விடும் என நினைத்து மகாபாரதக் கதையின் சில முக்கிய அம்சங்களை புகுத்தி அதை நீட்சியாகச் சொல்ல முயன்றிருக்கிறார். இருந்தாலும் இந்தக் கதையை சரியாகப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் மகாபாரதக் கதை தெரிந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில், – இந்த ‘கல்கி 2898 கி.பி’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் :- 3/5.

RADHAPANDIAN.