‘இந்தியன் 2’ – திரைவிமர்சனம்!

154

சென்னை:

கமல்ஹாசன்,சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா,ஜெகன்,பிரியா பவானி ஷங்கர்,ரிஷிகாந்த், சமுத்திரகனி,பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மன் ஒளிப்பதிவில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான்  ‘இந்தியன் 2’ பிரம்மாண்டமான  படங்களை இயக்கி வெற்றி வாகை சூடி வலம் வந்து கொண்டிருக்கும் ஷங்கர்,  28 வருடங்களுக்கு பிறகு  ‘இந்தியன்-2’ படத்தையும் மிக பிரம்மாண்டத்தொடு ஒரு சிறந்த கதையமைப்புடன் எடுத்து நம்மை சிந்திக்கவும் அதோடு ரசிக்கவும் வைத்து இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

நமது நாட்டில் அரசு துறையில் நடக்கும் ஊழல் குற்றங்களையும், அதன் அவலங்களையும்  சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் ‘பிரேக்கிங் டாக்ஸ்’ என்ற யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளை தோலுரித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் இவர்கள் நடத்தும் ‘பிரேக்கிங் டாக்ஸ்’ யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவு செய்து அதன் மூலமாக சில அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றாலும், குற்றவாளிகள் ஊழல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்படாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறார் சித்தார்த்.  ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அவர்களுக்கு எதிராகவே திரும்புகிறது.  காவல்துறையினர் அவர்களையே கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

காதலி ரகுல் ப்ரீத் சிங்கின் முயற்சியினால் காவல் நிலையத்தில் இருந்து மனம் நொந்து போய் வெளியே வரும் சித்தார்த் ,,, தோல்வியில் முடிந்த தனது போராட்டத்தின் விரக்தியில் சமூக வலைதளங்கள் மூலம் சேனாபதி இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இந்த விஷயம்  தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா கமல்ஹாசனின் கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார். இவர் மீண்டும் இந்தியா வருவதால் ஊழல் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா கமல்ஹாசன், இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் குஜராத் கொல்கத்தா, பீகார் போன்ற பல்வேறு மாநிலங்களில் நடக்கும் அக்கிரமங்களையும் இந்தியன் தாத்தா கமலஹாசன் அதிர்ச்சி தரும் வகையில் அக்கிரமக்காரர்களை தீர்த்து கட்டுவது ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துகிறது.இதனால் அப்போது அவரைப் பிடிக்க முயன்று தோற்றுப் போன சிபிஐ அதிகாரி நெடுமுடி வேணுவின் மகன் பாபி சிம்ஹாவுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. இவரும் இப்போது சிபிஐ அதிகாரிதான். அப்பா இந்தியன் தாத்தா கமல்ஹாசனை பிடிக்காமல் விட்டதை மகன் பாபி சிம்ஹா அவரை  பிடிக்க ஆசைப்படுகிறார்.  சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா  இந்தியன் தாத்தா கமல்ஹாசனை காவல்துறையினருடன் சென்று கைது செய்தாரா? இல்லையா? என்பதுதான் ‘இந்தியன் 2’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கதை நாயகனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்துள்ளார். கமல்ஹாசன் முழு படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. மீண்டும் அவரை இந்தியன் தாத்தாவாக பார்க்கும் போது அதே ஆரவாரத்துடன்தான் மிகவும் சிறப்பாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து  நடித்துள்ளார். முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் வர்மகலையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள் மூலம் அனைத்து திரையரங்குகளில் கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வேறு வேறு கெட்டப்களில் வந்து அசத்தியுள்ளார்.

மற்றொரு கதாநாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். தனது யூடியூப் சேனல் மூலம் ஊழல்வாதிகளுக்கு எதிராக சில முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்தும் சித்தார்த் மிகவும் நேர்மையாக வாழ வேண்டும் என்று கருதுகிறார். ஒரு சுறுசுறுப்பான இளைஞராக, தவறு செய்தது தந்தையாக இருந்தாலுமே தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்   சித்தார்த் தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை இந்த ‘இந்தியன் ‘2 படத்தில் நிரூபித்து காட்டிள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்,  பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை அளவான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே…” பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற பாடல்களும் சுமார் ரகம்தான் என்றாலும் பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தன் ஒளிப்பதிவு மூலம் இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட கற்பனைக்கு ஏற்றவாறு காட்சிகளை சிறப்பாக அமைத்து  உயிர் கொடுத்து இருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகிய மூவர் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். அதனால் பேச்சு அதிகம் என்கிற காரணத்தினால் சில காட்சிகளில் நமக்கே போரடிக்கிறது. நமது நாட்டில் மக்களை ஏமாற்றி ஊழல் செய்பவர்களுக்கு எதிராக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இளைஞர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற கருத்தினை திரைக்கதையில் ஆழமாக பதிவு செய்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல கதையம்சம் கொண்டபடமாகவும் அதே நேரத்தில், பிரமாண்டத்தையும் காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார்..இறுதியில் சி பி ஐ யிடம் கைதாகும் கமல்ஹாசன் சாமர்த்தியமாக தப்பி செல்வதுபோல காட்சியுடன் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘இந்தியன் 2’  ஊழலை எதிர்க்கும் மக்கள் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.