சென்னை:
பாரி இளவழகன்.அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “ஜமா” இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர்பாரி இளவழகன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
‘ஜமா’ என்றால் அதற்கு அர்த்தம் என்ன என்று பலருக்கு கேள்வி எழலாம்.. தெருக்கூத்து கலைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ கோவில் திருவிழா நடக்கும் தெருக்களில் நாடகம் நடத்தும் தெருக் கூத்து கலைஞர்கள் கொண்ட குழு தான் ஜமா. திருவண்ணாமலை அருகில் உள்ள ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை என்று கூறப்படும் தெருக்கூத்தில் பதினாறு கலைஞர்களை வைத்து கொண்டு மகாபாரதம், வள்ளி திருமணம், அரிச்சந்திரா போன்ற காவியங்களை மையப்படுத்தி நடத்தும் தெருக்கூத்து ஜமாவை சேத்தன், அவரது தலைமையில் நடத்தி கொண்டிருக்கிறார்.
தெருக்கூத்தில் பெண் வேடம் கட்டும் பாரி இளவழகன், தந்தை வைத்திருந்த ஜமாவை தந்திரமாக தனதாக்கிக் கொண்ட சேத்தனிடமிருந்து எப்படியாவது அந்த ஜமாவை மீண்டும் தன் கைக்கு கொண்டு வந்து தானே ஜமா வாத்தியாராக தலைமை ஏற்க வேண்டும் என்று மனதிற்குள் வைராக்கியம் கொள்கிறார். இந்த சூழ்நிலையில் ஜமாவின் வாத்தியாரான சேத்தன், இளம் தெரு கூத்து கலைஞரான பாரி இளவழகன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் தொடர்ந்து பல இடையூறுகளை செய்து வருகிறார்.
தான் நேசிக்கும் தெருக்கூத்து கலைக்காக வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்து, பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபித்து காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் பாரி இளவழகன். இந்த சூழலில் அர்ஜுனன் வேடம் கேட்டு சேத்தனிடம் பாரி இளவழகன் முரண்டு செய்யும் போது அவரை வெளியே விரட்டியடிக்கிறார். சக கூத்து கலைஞர்களும் பாரி இளவழகனை வாத்தியாராக ஏற்க மறுத்து அவர் தொடங்க விருக்கும் ஜமாவில் சேர மறுக்கின்றனர். இதனால் மனம் வேதனையடைந்த பாரி இளவழகன் தனது நடிப்பு திறமையை நிரூபித்து மீண்டும் தனது தந்தையின் ஜமாவை கைப்பற்றினாரா?இல்லையா? என்பதுதான் “ஜமா’ படத்தின் மீதிக் கதை.
கதை, எழுதி இயக்கியிருக்கும் பாரி இளவழகனே கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கல்யாணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதன் தன்மையை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்ததன் மூலம் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் அழுத்தமாக பதிந்திருக்கிறார் பாரி இளவழகன். அந்த கதாபாத்திரமாகவே மாறி, மண் மணம் மாறாமல் நடித்திருப்பதும் அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் வாழ்ந்து இருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார். கோபக்கார தந்தையை எதிர்த்து நிற்கும் தைரியமாக பேசும் கதாபாத்திரத்தில் கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
தெருக்கூத்து ஜமாவின் தலைமை தாங்கி நடத்தி வரும் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், போட்டி போட்டு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சேத்தனுக்கு இந்த படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
பாரி இளவழகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிமேகலை, பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து போன்ற அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்கிறார்கள்.
கோபாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தெருக்கூத்துக்கலையை நேர்த்தியாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.அக்கலைஞர்களுக்குள் நடக்கும் மோதல் காட்சிகளை மிக சரியாகக் கையாண்டியிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைக்க இளையராஜாவை விட்டால் வேறு ஆளில்லை என்று எண்ணுமளவுக்கு இசையால் படத்தை உயர்த்தியிருக்கிறார்.பாடல்கள் அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இன்றைய சூழ்நிலையில் தெருக்கூத்தை முழுமையாக அமர்ந்து பார்க்கச் சொல்லி தற்போது உள்ள இளைஞர்களிடம் சொன்னால், அவர்கள் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்கள். அதே இளைஞர்களை ‘ஜமா’ படத்திற்கு கொண்டு சென்று அமர வைத்தால் கடைசி கட்டகாட்சிகள் முடிந்த பிறகு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவிப்பார்கள் அந்தளவிற்கு ‘ஜமா’ படத்தை உயிரும் உணர்வுமாக இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன். ஒரு உன்னதமான தெருக் கூத்து கதைக்களம் அதற்குள் நடக்கும் உள்ளரசியல் ஆகிய அம்சங்களை திரையில் சரியாகச் சொல்லி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். இந்த ‘ஜமா’ திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கொடுக்க வேண்டும்.
மொத்தத்தில், இந்த ‘ஜமா’ திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் :- 4/5.
RADHAPANDIAN.