“அந்தகன்” திரைப்பட விமர்சனம்!

143

சென்னை:

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம்  ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’.

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தி திரைப்பட உலகில் அக்டோபர் 2018ஆம் ஆண்டு வெளியாகி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து தற்போது வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பியானோ வாசிப்பதில் வல்லவரான பிரசாந்த், கண் பார்வையற்ற இளைஞனாக இருந்தாலும் பெரிய பியானோ கலைஞனாக புகழ் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். அவர் லண்டனுக்கு சென்று பியானோ வாசிக்க வேண்டும் என மிகப் பெரிய லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ரோட்டில் நடந்து செல்லும்போது சிறிய விபத்தில் சிக்கிக் கொள்ள அங்கு பிரியா ஆனந்த்,  பிரசாந்திற்கு உதவி செய்ய இருவருடைய பழக்கம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் பார்வையற்றவராக உலாவரும் அவரைக் கண்டு பிரியா ஆனந்த் அன்பு கொள்வதுடன்  காதலியாக கூடவே இருந்து பல உதவிகள் செய்கிறார். அதற்காக பியானோ வகுப்பு எடுத்து பணம் சேர்க்கும் பிரசாந்திற்கு, மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி கொடுக்கிறார் பிரியா ஆனந்த்.

இந்த சூழ்நிலையில் இவர் பணி புரியும் மதுபான கூடத்திற்கு அடிக்கடி வரும்  நடிகர் காத்திக்கின் நட்பு பியானோ வாசிக்கும் பிரசாந்திற்கு கிடைக்கிறது,  பிரசாந்தின் பியானோ இசையில் மயங்கிய கார்த்திக்,  அவருடைய மனைவி சிம்ரனின் திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய சிறு இசை நிகழ்ச்சி நடத்த பிராசாந்தை வீட்டிற்கு அழைக்கிறார். பிரசாந்த் அங்கு சென்றதும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அவர் கண் முன் நடக்கிறது.  அங்கு கார்த்திக் இறந்து கிடக்க,,,,,ஏற்கனவே கள்ள உறவில் இருக்கும் காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியுடன் சிம்ரனும், இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார், பார்வையற்றவராக இருக்கும் பிரசாந்த் கண் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு பலவித  சிக்கல்கள் ஏற்படுகிறது?, அந்த சிக்கல்களிலிருந்து  பிரசாந்த் தப்பித்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதுதான் “அந்தகன்” படத்தின் மீதிக் கதை.

ஒரு சிறிய  இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக இப்படத்தில் நடித்திருக்கும் பிரசாந்த் அதே துள்ளளோடும், அதே இளமையோடும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருப்பவர் சிறு சிறு அசைவுகளை கூட தன் நடிப்பு திறமையால் மிக நுணுக்கமாக செய்திருக்கிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக இயல்பாக நடிப்பில் எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து காட்சிகளிலும் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சிமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன். ஒவ்வொரு திருப்பத்திலும், வசீகரத்துடன் மிரட்டி, ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, முழுக்க முழுக்க வில்லியாகவே மாறி, மிகப் பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பிரசாந்தின் மீது  கார் ஏற்றி கொல்ல. சிம்ரன்  முயலும் காட்சி  நம்மை பயமுறுத்த வைக்கிறது.

அழகு தேவதை பிரியா ஆனந்த் மிகக் குறைவான காட்சிகளில் வந்தாலும்  இப்படத்தில் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அழகாக நடித்து நேர்த்தியுடன் பதிவு செய்துள்ளார்.

நடிகராகவே நடித்திருக்கும் கார்த்திக் வரும் காட்சிகளும் அவருடைய பழைய படக்காட்சிகளும் மிகச் சரியாக அமைந்து படத்தைக் கலகலப்பாக்குகின்றன.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு திரைக்கதையில் முக்கியமான இடம் கொடுத்து இருப்பதால் அதற்குத் தகுந்தவாறு உழைத்திருக்கிறார். சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

மறைந்த நடிகர் மனோபாலா, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக  பதிவு செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில், பாடல்கள் நம் காதுகளுக்கு  இதமாக அமைந்து இருக்கின்றன..பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு ஏற்றவாறு  பலம் சேர்த்திருக்கிறார்.

ரவி யாதவ் தனது  ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகவும் கலர்புல்லாக பிரமாண்டமாகவும் படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.  ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மிக அழகாக காட்டியிருப்பவர் ஒரு வசீகர உணர்வை கொடுத்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படம்  பலவித திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் செய்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் தியாகராஜன்.  இப்படத்தில் நடித்த அனைவரிடமும் சரியாக வேலை வாங்கியது ஆகிய எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செய்து ஒரு கைதேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் தியாகராஜன்.  சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்பதால் அதை பிரமாண்டமான ஒரு படைப்பாகவும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் ஒரு சிறந்த படமாகவும் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அந்தகன்’ படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.