சென்னை:
‘ தளபதி’விஜய், மீனாட்சி செளத்ரி , பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, திரிஷா, கன்னிகா மோஹன், ஜெயராம், யோகி பாபு, V.T. V. கணேஷ்,பிரேம் ஜி, அஜ்மல், வைபவ், அஜய் ராஜ், அர்விந்த் ஆகாஷ், யுகேந்திரன், பஞ்சு சுப்பு, சிவா, ஒய்.ஜி. மகேந்திரன், சிவகார்த்திகேயன், திலீபன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘கோட்’ . இப்படத்தை வெங்கட் பிரபு கதை எழுதி இயக்கி இருக்கிறார்.ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட். சார்பாக, கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S. கணேஷ்,
கல்பாத்தி S. சுரேஷ். ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.
தற்போது இப்படம் வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் கதையை பொருத்தவரையில்,
இப்படத்தை பார்க்கும் போது அந்த காலத்தில் எம்ஜிஆர்- நம்பியார் நடித்த பல படங்கள் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ‘குடியிருந்த கோயில்’ நீரும் நெருப்பும்’ போன்ற படங்களில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு அண்ணன் -தம்பி என்று கதாபாத்திரம் மற்றும் தந்தை மகன் கதாபாத்திரமும் அமைந்திருக்கும் . இது போன்ற படங்களைப் பார்த்து பார்த்து சலித்து போன கதையை மையமாக வைத்து ‘தளபதி’ விஜய் நடித்திருக்கும் படம் தான் ‘கோட்’ இதில் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் விஜய்யின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் தீவிரவாதிகளை கண்டுபிடித்துக் கொல்லும் SATS என்ற படையில் ரகசிய அதிகாரிகளாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான மோகனை தேடி கென்யா நாட்டிற்கு செல்கின்றனர்.
அங்கு ஓடும் ரயிலில் மோகன் கூட்டணிக்கும், விஜய், அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடக்கிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து சிதற தீவிரவாதி மோகன் இறந்து விட்டதாக அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் ரயில் வெடித்த இடத்தில் இருந்து மோகன் தப்பி விடுகிறார். அவரது மனைவியும் மகனும் உயிரிழந்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் மற்றொரு ரகசிய அதிரடி நடவடிக்கை எடுப்பதற்காக தன் மனைவி சினேகாவுடன், மகனுடனும் தாய்லாந்து செல்கிறார் விஜய். அங்கு விஜய் நண்பர்களும் வருகிறார்கள். தீவிரவாதிகளுடன் சண்டையிடும் போது சில மர்ம நபர்கள் விஜய்யின் மகனை கடத்தி விடுகிறார்கள். தன் மகனை தேடி விஜய் அலையும்போது ஒரு வாகனத்தில் விபத்தில் சிக்கிக்கொண்ட பல குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். அந்த விபத்தில் தன் மகனும் இறந்து விட்டான் என்று நினைத்து மனைவி சினேகாவிடம் சென்று கதறுகிறார் விஜய்.
இதனால் மனம் உடைந்து வெறுத்துப்போன விஜய் தான் செய்த பணியை விட்டுவிட்டு குடியேற்ற அதிகாரி வேலைக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய பணி நிமித்தம் காரணமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் அங்கு நடந்த மோதலில் தன்னை போலவே அசலான உருவம் கொண்ட ஒரு இளைஞர் இருப்பதை சந்திக்கிறார். அவரைப் பற்றி ய விவரங்கள் தெரிந்து கொள்ள ஈடுபடும் போது தாய்லாந்தில் விபத்தில் சிக்கி இறந்து போன தன் மகன்தான் என்பது விஜய்க்கு தெரிய வருகிறது. தன் மகனைக் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார் விஜய். இந்த சூழ்நிலையில் தன்னுடன் பணிபுரிந்து கொண்டிருக்கும் அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை செய்தவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? என்பதுதான் ‘கோட்’ படத்தின் மீதி கதை.
காந்தி மற்றும் ஜீவன் என தந்தை, மகன் ஆகிய இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். 67 படங்களில் நாயகனாக நடித்து பல வெற்றிகளைக் கண்ட ஒருவர், தனது 68-வது படத்திலும் நன்றாக, தனது திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். எல்லாப் படத்திலும் நடித்ததை போலவே வழக்கமாக சில காட்சிகளில் தனது குறும்புத்தனம், நையாண்டி மூலமும், நடிப்பையும், கிண்டலான வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். இந்தப்படம் முழுவதும் தனது ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் மகனாக நடித்திருக்கும் விஜய்யின் தோற்றமும், கதாபாத்திர வடிவமைப்பும் அதில் அவருடைய நடிப்பும் அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக சிறப்பாக அமைந்து இருக்கிறது.
விஜய்யின் நண்பர்களாக வரும் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் இவர்களது குழுத் தலைவராக வரும் ஜெயராம், விஜய்யின் மனைவியாக வரும் சினேகா, பிரஷாந்தின் மனைவியாக வரும் லைலா, வில்லனாக வரும் மோகன் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
யோகி பாபு சில காமெடி காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
மகன் விஜய்யின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி மிகவும் அளவாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் பஞ்சு சுப்பு, யுகேந்திரன், திலீபன், என இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பர்கள் அனைவரும் வந்து போகிறார்கள்.
நடிகை திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு விட்டு சென்று விடுகிறார்.
இப்படத்தின் இறுதி காட்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்நுனியின் உழைப்பில் வெளிநாட்டுக் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைப்படத்திற்கு எந்தவிதத்திலும் பொருத்தமாக அமையவில்லை. யுவன் சங்கர் ராஜாதான் இப்படத்திற்கு இசையமைத்தாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்து விட்டது.
தந்தை – மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தை வைத்து கொண்டு திரைக்கதை அமைத்து, அதை அவருடைய பட பாணியில் எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. மிகப் பழைய கதையை உல்டா செய்து படத்தை இயக்கி இருப்பதால், படம் ஆரம்பிக்கும்போதே முடிவு வரை ரசிகர்கள் நினைப்பது அனைத்தும் தெளிவாக தெரிந்து விடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘கோட்’ படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN>