’ஏ.ஆர்.எம்’ (Ajayante Randam Moshanam – ARM) திரைப்பட விமர்சனம்!

131

சென்னை:

மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கும் படம் ’ஏ.ஆர்.எம்’.  இப்படத்தில் டொவினோ தாமஸ், கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சைட், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

அஜயண்டே ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதைதான் இது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய மந்திரியை ஒரு மோசமான கொடுமைக்காரன் கடத்தி வைத்து கொல்ல முயல்கிறான். அப்போது அங்கு வரும் மின்னல் வேகத் திருடன் டொவினோ தாமஸ் கொடுமைகாரனை கொன்று மந்திரியை  காப்பாற்றுகிறான். மந்திரியை காப்பாற்றியதற்காக அவனது வீரத்தை பாராட்டும் மன்னர், உனக்கு பரிசாக என்ன வேண்டும் என்று கேட்கிறார். அந்த நாட்டில் வானத்திலிருந்து பூமியில் விழுந்த ஒரு விண்கல்லால் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த பாவை விளக்கு தங்களிடம் உள்ளதால் அதை தனக்கு வேண்டுமென்று கேட்கிறான்.

ஏனென்றால் அந்த அதிசய விளக்கை, மக்கள் நலன் காக்கும் பொருட்டு டொவினோ தாமஸ் கேட்கிறான். அதை மன்னர் அவனுக்கு பரிசளிக்க அந்த  அதிசய விளக்கை தன் கிராமத்துக்கு கொண்டு வருகிறான். தனது கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த  அதிசய விளக்கை பூஜை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அங்குள்ள கோயிலில் வைத்து வழிபட செய்கிறான்.  இந்த சூழ்நிலையில் அடுத்த தலைமுறை பேரனான இன்னொரு டொவினோ தாமஸ் சில இடங்களில் திருடி மாட்டி கொண்டு காவல்துறை கைது செய்வதால், சாதி ரீதியாகவும், திருட்டு தொழில் செய்வதாலும் ஊர் மக்களால் அடிக்கடி அவமானப்படுத்தப்படுகிறார். அந்த ஊர் ஜமீன் குடும்பத்துப் பெண்ணான கதாநாயகி கிருத்தி ஷெட்டிக்கும் இவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களது  காதலுக்கிடையே, அதிசய விளக்கு பற்றிய ஆவணப்படம் எடுக்க அந்த கிராமத்திற்க்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே திருட வைக்க முயற்சிக்கிறார். அந்த கோயிலில் உள்ள அதிசய விளக்கை டோவினோ தாமஸ், ஹரிஷ் உத்தமன் இருவரும்  இணைந்து திருடினார்களா? இல்லையா? என்பதுதான் ‘ஏ.ஆர்.எம்’ படத்தின் மீதிக் கதை.

அப்பா, மகன், பேரன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து இருக்கிறார் டொவினோ தாமஸ். புதிதாகப் பார்ப்போருக்கு மூன்றும் ஒருவரே என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு தோற்றங்களில் மாற்றங்கள் செய்து, தன் நடிப்பிலும் சிறப்பு செய்து மொத்தப் படத்தையும் தன் நடிப்பினால் தோளில் சுமந்து அனைவரையும் ரசிக்க வைத்து அசத்தியிருக்கிறார்.  முரட்டுத்தனமான அந்தக் கால இளைஞன் கதாபாத்திரத்திலும், ஆதங்கத்துடன் அலையும் இந்தக்கால இளைஞன் கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஒரே நடிகர்தானா என்று யோசிக்க வைத்து மக்களை கவர்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்‌ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களும்  கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதைக்கேற்றவாறு சிறந்த முறையில்  படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.பின்னணி இசையும் காலகட்டங்களை வேறுபடுத்திக்காட்ட சிறப்பாக துணை நிற்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான்,சிறந்த காட்சியனுபவம் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ப படமாக்கி இருப்பது பலனளித்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியிருக்கிறார்.பாட்டியை கதை சொல்ல வைத்து படத்தைத் தொடங்கி காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது. ஒரு சாமி சிலையை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்து விடுகிறார் இயக்குனர். அவருக்கு பெரிதும் கைகொடுத்திருப்பது ஆக்சன் காட்சிகளும், அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளும்தான் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில், இந்த ‘ஏ.ஆர்.எம்’ படம் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.