சென்னை:
நடிகர் கார்த்தி, (27வது படம்) அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், சரன், சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜே.பி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “மெய்யழகன்”
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தஞ்சாவூரில் உள்ள நீடாமங்கலம் என்ற கிராமத்தில் தனது உறவினர்கள் செய்த சதியால் சொந்த வீட்டை பறிகொடுத்து விட்டு சென்னைக்கு தன் குடும்பத்துடன் வருகிறார் அரவிந்த்சாமியின் தந்தை ஜெயபிரகாஷ். சென்னைக்கு வந்து ஆசிரியராக பணிபுரியும் ஜெயபிரகாஷ் உறவினர்களை விட்டு பிரிந்து வந்தாலும் தனது வீட்டை பறிகொடுத்த வேதனை அவர் மனதில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரவிந்த்சாமியின், சித்தப்பாவின் மகள் திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக, தந்தை ஜெயபிரகாஷ், அரவிந்த்சாமியை தஞ்சாவூரில் உள்ள நீடாமங்கலம் கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார். சித்தப்பா மகள் திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்ற அரவிந்த்சாமிக்கு, தன் சித்தப்பா, சித்தி மற்றும் உறவினர் ராஜ்கிரணை கண்டதும் மகிழ்ச்சியடைகிறார்.
அந்த திருமணத்தில் கலந்துக் கொண்ட கார்த்திக், அரவிந்த்சாமியை கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து ‘அத்தான்…அத்தான்’ என்று அவரையே சுற்றி வருகிறார். திருமண வரவேற்பு முடிந்ததும் உடனே சென்னைக்கு கிளம்ப முயற்சிக்கும் அரவிந்த்சாமியை தனது பாசத்தால் திக்கு முக்காட வைக்கும் கார்த்திக், சென்னை பஸ்ஸை தவற விட்டு, அந்த ஊரிலேயே தங்க வைக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில்அரவிந்த்சாமிக்கு, கார்த்திக் எந்த விதத்தில் தனக்கு சொந்தம் என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் யார்? தனக்கும் அவருக்கும் என்ன உறவு…அவரது பெயர் என்ன? என்று கூட தெரியாமல் அவரை தெரிந்தது போலவே நடிக்கிறார் அரவிந்த்சாமி.
சென்னைக்கு போகும் பஸ்ஸை தவற விட்ட அரவிந்த்சாமி அன்று கார்த்திக் வீட்டில் தங்க நேரிடுகிறது. அப்போது கார்த்திக் பழைய நினைவுகளை எல்லாம் சொல்லி நினைவுபடுத்தும் போதும், சிறு வயதில் அரவிந்த்சாமி தனக்கு கொடுத்த சைக்கிள் போன்ற பல விஷயங்கள் குறித்து பேசும்போதும், எல்லாவற்றுக்கும் தெரிந்தது போலவே நடிக்கிறார். அன்று இரவு அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள், நினைவலைகள், கார்த்தியின் பாசமும், உபசரிப்பும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்துகிறது. தன் மீது பாசத்தை பொழியும் கார்த்திக்கின் பெயர் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் அரவிந்த்சாமி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அன்று இரவே சென்னைக்கு திரும்பி விடுகிறார். ஆனாலும் கார்த்திக்கிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு வந்ததை நினைத்து வேதனைப்படுகிறார் அரவிந்த்சாமி. இந்த சூழ்நிலையில் கார்த்திக், அரவிந்த்சாமிக்கு என்ன உறவு என்பது தெரிந்ததா? இல்லையா? என்பதுதான் “மெய்யழகன்” படத்தில் மீதி கதை.
இப்படத்தில் கதாநாயகனாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் கார்த்தி, முற்றிலும் தனது அப்பாவித்தனத்தனமான பாசத்தை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பது அருமை. சென்னைவாசியாக இருந்தாலும் சரி கிராமத்து இளைஞனாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொண்டு, தனது இயல்பான நடிப்பின் மூலம் படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். அணைக்கட்டில் அரவிநத்சாமியுடன் அமர்ந்து கொண்டு கார்த்தி பேசும் தமிழ் வரலாறு, சோழ தலைமுறை வரலாறு, ஈழத் தமிழர் படுகொலை என பேசும் வசனங்கள் நம் மனதை நெகிழ வைத்து விடுகிறது.
கார்த்திக்கிற்கு இணையாக அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார். இவரை பல கோணங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரை நாம் பார்த்தது இல்லை. தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து மனிதர் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா? என்கிற சந்தேகம் பலருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அந்த எண்ணங்களை அடித்து நொறுக்கி அருள்மொழி கதாபாத்திரமாகவே மாறி, நம் கண்களில் கன்ணீரை வரவழைத்து விட்டார் அரவிந்த்சாமி .
கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தாலும் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவில் பல காட்சிகளின் ஒளியமைப்பு, அதுவும் இரவுக்காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் சுமார்ரகம்தான். இருந்தாலும் கிராமத்துக் கதைக்கான பின்னணி இசை காட்சிகளோடு இணைந்து அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறது.
இந்தப் படத்தை இயக்குனர் பிரேம்குமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஆனால் இப்படத்தில் காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ, சண்டைக் காட்சிளோ கிடையாது. மிகக் குறைந்த கதாபாத்திரங்களை வைத்து, மசாலா காட்சிகள் எதுவும் இல்லாமல் இப்படி அற்புதமான ஒரு திரைக்கதையை தன்னால் அமைக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். உறவுகளால் நமக்கு ஏற்படும் உணர்வுகளை தத்ரூபமாக சொல்லி மக்களை கவரும் விதத்தில் கதை எழுதி இருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். கார்த்தியும், அரவிந்த்சாமியும் இணைந்து மது அருந்தும் காட்சிகளை சிறிது குறைத்து இருக்கலாம். இருந்தாலும் நம் வாழ்வில் நடக்கும் பல உண்மையான காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து இருப்பதில் இயக்குனர் பிரேம்குமாருக்கு மறுபடியும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘மெய்யழகன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பர் அழகன்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.