‘சட்டம் என் கையில்’ திரைப்பட விமர்சனம்!

179

சென்னை:

தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக  நடித்து, அதன் பிறகு ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வலம் வந்துக் கொண்டிருக்கும் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்து இருக்கும் படம்தான் “சட்டம் என் கையில்”.  மற்றும் இப்படத்தில் அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்க்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சாச்சி.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கதாநாயகன் சதீஷ், ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் குடிபோதையில் மிகவும் பதற்றத்துடன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் சமயத்தில், எதிரே, ஹெல்மெட் அணிந்து கொண்டு  மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் இறந்துவிடுகிறார். அதனால் பயந்து போன சதீஷ் இறந்தவரின் உடலை, தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு பயணத்தை தொடரும் சந்தர்ப்பத்தில், வழியில் உள்ள காவல்துறை சோதனைச் செய்யும்போது, அங்குள்ள சூழ்நிலையை சமாளிக்க தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறுகிறார்.

உடனே உதவி ஆய்வாளர், சக காவலரிடம் காரை சோதனை செய்ய சொல்லும் போது சதீஷ் திடீரென உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், தன்னை தாக்கியதற்காகவும் சதீஷை காவல் நிலையத்திற்கு காவலர்கள் இணைந்து அழைத்துச் செல்கின்றனர்.  சதீஷ் ஓட்டி வந்த காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர். ஆனால் கார் டிக்கியில் இறந்து போன பிணம் இருப்பது காவல்துறையினருக்கு தெரியாது. இந்த சூழ்நிலையில், அன்று இரவே ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ஏற்காடு சாலையில் இறந்து கிடக்க, அந்தக் கொலையை செய்த கொலையாளியை கைது செய்யும் பணியில் மும்முரமாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு உதவி ஆய்வாளர்களான அஜய்ராஜிக்கும் , பாவல் நவகீதனுக்கும் ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கார் டிக்கியில் இருக்கும் பிணம் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? இறந்து போன பெண் யார் என்பதையும் கண்டுபிடித்தார்களா? என்பதுதான் “சட்டம் என் கையில்” படத்தின் மீதிக் கதை.

நகைச்சுவையில் அனைவரையும் சிரிக்க வைத்த சதீஷ், அதை தவிர்த்துவிட்டு இப்படத்தில் கதையின் நாயகனாக இந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தன் உடல்மொழியை மாற்றி நேர்த்தியாக  தனது அளவான  நடிப்பின் மூலம் மிக சிறப்பாக அசத்தி இருக்கிறார்.

அதே சமயத்தில் பாவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் ஆகிய இருவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான முறையில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வெண்பா, வித்யா பிரதீப், பவா செல்லதுரை, இ.ராமதாஸ், அஜய் தேசாய் உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்களது கதாபாத்திரத்திரங்களுக்கு ஏற்றவாறு எந்தவித குறைவின்றி நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் தரத்தை உயர்த்தி பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர்  எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியிருக்கிறார். கதாநாயகன் தனது காரில் பயணிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே படம் பார்க்கும் பார்வையாளர்களிடம் பதற்றம் தொற்றிக் கொள்ளும் வகையில், திரைக்கதையை மிக சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் சாச்சி, ஏற்காடு மலை ரோட்டில் இரவு நேரத்தில் நடக்கும் இரு கொலைகளை மையமாக வைத்து, ஏற்காடு காவல் நிலையத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் அமர வைத்து இறுதிக்கட்ட காட்சி வரை பார்வையாளர்களை கவரும் வகையில் இந்தப் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் சாச்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ‘சட்டம் என் கையில்’ கிரைம் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.