சென்னை:
நடிகர் வெற்றி, மதுரா, அனு சிதாரா, விவேக் பிரசன்னா,அருவி மதன், டிடோ வில்சன், ஸ்ரீ தேவா, மற்றும் பலர் நடித்து தற்போது வெளி வந்திருக்கும் படம்தான் “ஆலன்” இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சிவா.ஆர். 3S பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நடிகர் வெற்றி தனது சிறுவயதில் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி அவரது தந்தையும் தாயும் இறந்து விடுகின்றனர். அந்த விபத்தில் இருந்து தப்பித்த வெற்றி என்ன செய்வது என்று புரியாமல், தனது மன வேதனையிலிருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று விடுகிறார். அங்கு உள்ள ஒரு சாமியாரிடம் நடந்த விஷயத்தை கூறும் போது, அவரை தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அவரை ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கிறார். பல வருடங்களாக சிறுவயதில் ஏற்பட்ட விபத்து அவரின் மனதிற்கு இடையே வந்து செல்கிறது. இதனால் இளம் வயதிலேயே வெற்றிக்கு தமிழ் இலக்கியத்தின் மீது அதிக தாக்கம் இருந்த காரணத்தால், கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதி அடிக்கடி தன் மனதில் ஏற்படும் வேதனையை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால் அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருப்பதால் எழுத்தாளராக எந்த ஒரு கதையும் எழுத முடியாமல் தவிக்கிறார்.
வெற்றியின் ஆர்வத்தை அறிந்த அவரது குரு தலைமை சாமியார் ஹரிஷ் பொராடி, ‘ஆன்மீகவாதியாக வாழாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்து உன் எழுத்துத் திறமையை மக்களிடம் கொண்டு செல்… நீ எதை செய்ய நினைக்கிறாயோ அதையே செய்’ என்று கூறுகிறார். 10 வருட காலமாக ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்த வெற்றி எழுத்து துறையில் பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று முயற்சி செய்யும் போது ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. ஒரு சாமியாராக தனியே சுற்றித் திரிந்த வெற்றிக்கு அந்தப் பெண்ணின் நட்பு காரணத்தால் பெரிய அளவில் மன நிம்மதி ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அந்த பெண் புதுச்சேரிக்கு செல்லும் போது அங்கு சில கயவர்களால் கற்பழிக்க முயலும் போது தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார். இந்த தகவல் அறிந்து மனம் நொந்து போகும் வெற்றி மீண்டும் ரிஷிகேஷ் சென்று சாமியாராக சுற்றித் திரிகிறார். இறந்து போன காதலியை நினைத்து வேதனைப்படும் வெற்றி தான் நினைத்தபடி கதையை எழுதினாரா? எழுத்து துறையில் அவர் சாதனை செய்தாரா? என்பதுதான் ‘ஆலன்’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் கதாநாயகனாக அடர்த்தியான நீண்ட முடி, முகம் முழுக்க தாடியை வைத்துக் கொண்டு சாமியார் கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி நடித்திருந்தாலும், மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமையானவரான வெற்றி இந்த முறை சற்று தடுமாறி இருப்பது தெளிவாக தெரிகிறது.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, சிரித்த முகத்தோடு வசனம் பேசி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். வெளிநாட்டுப் பெண் கதாபாத்திரம் என்பதற்காக கவர்ச்சி காட்டாமல், நம் பக்கத்து வீட்டுப்பெண் போல் எளிய தோற்றத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.
இப்படத்தில் அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி விட்டார் அனு சித்தாரா.
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் குறை வைக்காமல் கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
மனோஜ் கிருஷ்ணா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்துக்கு ஏற்றவாறு பயணித்திருக்கின்றன. ‘ஓம் நமச்சிவாய’ பாடல் கேட்கும்படி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின், தனது ஒளிப்பதிவு மூலம் ரசிகர்களுக்கு ஆன்மீகத் தலமான காசியை அற்புதமாக காட்டி கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார்.
சிவா ஆர் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். ஒரு உன்னதமான கவித்துவமான ஒரு காதலை சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபாடுடன் கதை எழுதி, அவரது வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இயக்கி இருப்பது நன்றாகத் தெரிகிறது. சில காட்சிகளில் தெளிவு இல்லாமல் செயற்கையாக இருப்பது பலவீனம். இன்னும் சற்று யதார்த்தமாகவும் உயிரோட்டமாகவும் காட்சிகளை கொடுத்திருந்திருக்கலாம்.
மொத்தத்தில், ’ஆலன்’ படத்தை கண்டு ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.