‘அமரன்’ – திரைப்பட விமர்சனம்!

121

சென்னை:

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ்,  கீதா கைலாசம்,ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “அமரன்” இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி  இயக்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘அமரன்’. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வுகளையும் மற்றும் ராகுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்கிற தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

சிறுவயதிலிருந்தே சிவகார்த்திகேயனுக்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் அதிகமாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் கிறிஸ்துவ கல்லூரியில் படிப்பு முடித்ததும் ராணுவத்தில் சேர முயற்சிக்கும்போது, அவருடைய தாய் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார் ஆனால் அவருடைய தந்தை சிவகார்த்திகேயனுக்கு தைரியம் சொல்லி ராணுவத்தில் சேர உதவுகிறார். இந்த சூழலில் சிவகார்த்திகேயன் படித்த கிறிஸ்தவ கல்லூரியில் சாய் பல்லவியும் படிக்கிறார். கேரளாவை சேர்ந்த சாய் பல்லவி அந்த கல்லூரியில் படிக்கும் போது சிவகார்த்திகேயனை  சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

சிவகார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் இவர்களது காதலுக்கு சாய்பல்லவி வீட்டில் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் தன் விருப்பப்படியே ராணுவத்தில் சேர்கிறார். ராணுவத்தில் சேர்ந்த பிறகு எப்படியாவது சாய் பல்லவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார். முதலில் பெண் கொடுக்க மறுத்த சாய் பால்லவியின் பெற்றோர், அதன்பிறகு சமாதானமடைந்து இரு வீட்டாரும் இணைந்து சிவகார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்தவுடன் ராணுவத்தில் பணிபுரிய செல்லும் சிவகார்த்திகேயனுக்கு அங்கு படிப்படியாக முன்னேற்றம் அடைந்து மேஜர் என்ற பொறுப்பு கிடைக்கிறது.

அந்த பொறுப்பு கிடைத்தவுடன் காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44 வது ராஷ்ரீய ரைபில்ஸ் குழுவில் இணைகிறார் சிவகார்த்திகேயன். காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக தலைமை ஏற்று முதல் கட்டமாக அல்டாஃப் பாபா என்றபயங்கர தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தீவிரவாதியின் தம்பி சிவகார்த்திகேயனைக் கொல்லவும், பழிவாங்கவும் துடிக்கிறான். அந்த தீவிரவாதி சிவகார்த்திகேயனை பழிவாங்கினாரா? அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் ‘அமரன்’ படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்பல படங்களில் நடித்திருந்தாலும்  இதில் மேஜர் முகுந்த் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையில் அவர் வெளிப்படுத்தாத மிக அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில், காதல் காட்சிகளில், எமோஷ்னல் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்து அசர வைத்துள்ளார். முகுந்த் வரதராஜன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.உடல் எடை மற்றும் தோற்றப் பொலிவு மற்றும் வகிக்கும் பதவிக்கேற்ற மிடுக்கு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி,,, கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில்  மிக சிறப்பாக நடித்து அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார். பெற்றோருடன் தன் காதலுக்காக போராடும் போதும் , இயல்பான மனநிலையில் தன் கணவனிடம் அன்பை வெளிப்படுத்தும்போதும் , கணவனின் இறப்பு செய்தியை கேட்டவுடன் கதறி அழாமல் வீர மரணம் அடைந்த ராணுவ வீரனின் மனைவியாக இந்து ரெபெகா வர்கீஸ் என்ற கதாபாத்திரமாகவே கதையுடன் இணைந்து நடிப்பில் வாழ்ந்து காட்டியுள்ளார் சாய் பல்லவி. கண்டிப்பாக இவரது நடிப்புக்காக தேசிய விருது கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இராணுவக்காட்சிகளில் புவன் அரோரா,ராகுல் போஸ் ஆகியோரும் குடும்பக்காட்சிகளில்  கீதா கைலாசம்,ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் உள்ளிட்ட படத்தில்  நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தைஏற்று மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாசின் இசையில் காதல் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ‘அச்சமில்லை’ பாடல் மனதை இறுக வைக்கிறது.பின்னணி இசையிலும் படத்தின் காட்சிகளுக்கு பலம் சேர்த்து  இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் ஒளிப்பதிவில் பனிபடர்ந்த காஷ்மீரின் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளையும், தீவிரவாதிகளின் இடங்களையும் காட்சிபடுத்தி இருப்பதில் பிரம்மாண்டம் தெரிகிறது.

மேஜர் முகுந்தின் வாழ்க்கை கதையை மிக துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்றவாறு திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பினரும் ரசிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கலந்து ஆலோசித்து அதிக  கவனம் செலுத்தி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் எப்படியெல்லாம் அவதிபடுகிறார்கள்…. எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் தன் நாட்டைக் காப்பாற்ற எந்த அளவிற்கு பாடுபடுகிறார்கள் என்பதை மிக அற்புதமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.  தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தான் என்கிற கருத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் நிதானித்து ஒரு ராணுவ வீரனின் தெரிந்த கதையை கடைசிவரை உட்கார்ந்து பார்த்து, அனைவரையும் கண் கலங்க வைத்திருப்பதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ஒரு வீர வணக்கம்.

மொத்தத்தில் ‘அமரன்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 4/5.

RADHAPANDIAN.