சென்னை:
அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர்.யோகன் சாக்கோ, சண்முகராஜா, தருண் மாஸ்டர், சேரன் ராஜ், தயா செந்தில், சாயாதேவி, கவிதா கோபி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சாம்.சி.எஸ் இசையில் பாலா இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் ‘வணங்கான்’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் வாய் பேச முடியாமல், காது கேட்க முடியாமல் ஊமையாக தனது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்ட போது தாய் தந்தையரை இழந்த அருண் விஜய், தன்னுடன் அனாதையாகி நின்ற ஒரு குழந்தை ரிதாவை தன் தங்கையாக பாவித்து வளர்த்து வருகிறார். வாய் பேச முடியாத அருண் விஜய் கன்னியாகுமரி பகுதியில் படகு ஓட்டுவது மற்றும் கிணற்றில் தூர் வாருவது போன்ற பல வேலைகளை செய்து தன் தங்கையைக் காப்பாற்றுகிறார். அப்போது அருண் விஜய் தனது தங்கையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அங்கு திருநங்கைகளை சில ரவுடிகள் அடித்து கேவலப்படுத்துகின்றனர். அந்த ரவுடிகளை அருண் விஜய் அடித்து வீழ்த்தி திருநங்கைகளுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறார். இதனால் காவல்துறையிடம் சிக்கிய அருண் விஜய் ‘அந்த ரவுடிகளை ஏன் அடித்தாய்’ என்று கேட்கும் போது, திருநங்கைகள் அங்கு வந்து தங்களை அசிங்கப்படுத்தும் போது இவர்தான் எங்களை காப்பாற்றினார் என்று கூறுகின்றனர். இந்த சூழலில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை பகுதியில் டூரிஸ்ட் கைடாக, பல மொழிகள் கற்றவராக அருண் விஜய்யைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவராக இருக்கிறார் ரோஷினி பிரகாஷ். அவரும், அவரது தங்கை மற்றும் சர்ச் ஃபாதர் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளிடம் அருண்விஜய்யை விடுவிக்குமாறு கெஞ்சுகின்றனர்.
அதனால் மாற்றுத்திறனாளி ஊமையாக இருப்பதால் காவல்துறை அருண் விஜய்யை விடுவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் எந்த வம்புக்கும் போகக்கூடாது என்ற நிலையில் அருண் விஜய்யை நல்வழிப்படுத்த சர்ச் பாதர், மாற்றுத்திறனாளிக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிட்டி வேலைக்கு அருண்விஜய்யை சேர்த்து விடுகிறார். அந்த ஆதரவற்ற இல்லத்தில் சாயாதேவி பொறுப்பாளராக இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அந்த ஆதரவற்ற இல்லத்தில் வார்டனாக பணிபுரிபவன் தனது நண்பர்கள் இருவருடன் குளியல் அறையில் மறைந்து கொண்டு மாற்றுத்திறனாளி பெண்கள் குளிப்பதை பார்க்கின்றனர். இதனை கண்டுபிடித்த மாற்றுத்திறனாளி பெண்கள் தாங்கள் குளிப்பதை யாரோ பார்த்து விடுகிறார்கள் என்று பயந்து வெளியில் ஓடி வரும் போது, அருண் விஜய் அவர்களை மடக்கி என்ன விஷயம் என்று ஊமை பாஷையில் கேட்கிறார். குளிக்கும்போது நடந்த விஷயத்தை சொல்கின்றனர்.
அப்போது அந்த மூன்று பேரையும் துரத்தி சென்று அடித்து நொறுக்கி இருவரை கொலை செய்து விடுகிறார் அருண்விஜய். ஆனால் அவர் கொலை செய்யும் போது அங்கு யாரும் இல்லை. அதனால் காவல் துறையினர் கொலையாளி யார் என்று தேடும் போது இவரையும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நான்தான் அந்த குற்றவாளி என்று காவல்துறையிடம் அருண் விஜய் சொல்கிறார். ஆனால் அவரது தங்கையோ ‘என் அண்ணன் அந்த மாதிரி ஆள் இல்லை. அவர் வாய் பேச முடியாது. அவர் யாரையும் கொலை செய்யவில்லை…என்று காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அழுகிறார். காவல்துறையினர் அருண் விஜய்யை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். அதில் முக்கிய காவல்துறை அதிகாரியான சமுத்திரகனி, அருண் விஜய்யை பலவிதத்தில் அடித்து உண்மையை கூறுமாறு கேட்கிறார். ஆனால் அருண் விஜய் பெண்கள் நிர்வாணமாக குளித்ததை பார்த்த உண்மையை சொல்லவில்லை. அதனால் அருண் விஜய்க்கு ஜாமீன் கொடுத்து விடுவிக்கின்றனர்.
ஜாமினில் வெளிய வந்த அருண் விஜய் இரண்டு கொலைகளுக்கு பிறகு மூன்றாவது நபரை தேடி கண்டுபிடித்து அவனையும் கொலை செய்து மரத்தில் மாட்டிவிட்டு நிர்வாணமாக்கி செல்கிறார். மூன்று கொலைகளை செய்த அருண் விஜய்யை கைது செய்த சமுத்திரகனி பல விதத்தில் விசாரணை செய்கிறார். ஆனால் அருண் விஜய் அந்த மூவரையும் எதற்காக கொலை செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார். பிறகு அருண் விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்து விசாரிக்கும் போது சில உண்மைகள் தெரிய வர, இந்த மூன்று கொலைகளை செய்த அருண் விஜய்க்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் ‘வணங்கான்’ படத்தின் மீது கதை.
இப்படத்தில் கதாநாயகனாக வாய் பேசாத காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்அருண் விஜய் ஒரு ஊமையாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது உடல்மொழி, முகபாவனைகள், சண்டைக்காட்சிகள் என அனைத்துமே முந்தைய பாலா படங்களில் நடித்த கதாநாயகர்களின் தாக்கம் இருந்தாலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து தனது பாணியில் மிக சிறந்த முறையில் நடித்து மிரட்டி இருக்கிறார்.
கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் சுறுசுறுப்பான பெண்ணாக கதைகேற்றபடி சிறப்பாக நடித்து இருக்கிறார் .
அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் நடிப்பில் படம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் அவர்களது நடிப்பு இந்த கதைக்கு பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், சாயாதேவி, தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. சாம்.சி.எஸ். பின்னணி இசையில் சில காட்சிகளில் வசனம் கேட்க முடியாத அளவிற்கு அதிக சத்தம்தான் கேட்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் தத்ரூபமாக படமாக்கி அசத்தி இருக்கிறார்.
இயக்குனர் பாலா படம் என்றாலே வித்தியாசமான முறையில் இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் சாதாரண மக்களையும், அவர்களின் வாழ்க்கையை, வலிகளையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து நிற்கும் கதாநாயகனை சாதாரண மக்களில் ஒருவனாக ஊமையாக சித்தரித்து படத்தை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் பாலா. இப்படத்தின் கதையை ‘பிதாமகன்’ விக்ரம் கதாபாத்திரத்தை மனதில் வைத்து வாய் பேச முடியாத, காது கேளாதவராக உருவாக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பாலாவின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றொரு அருமையான படைப்பு ‘வணங்கான்’. அவருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘வணங்கான்’ படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.