’ஜென்டில்வுமன்’- திரைப்பட விமர்சனம்!

94

சென்னை:

லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தாரணி, வைரபாலன், சுதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘ஜென்டில்வுமன்’ என்ற இப்படத்தை ஜோஸ்வா சேதுராமன் எழுதி இயக்கி இருக்கிறார்.

மர்மம், திரில் நிறைந்த இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரி கிருஷ்ணன் மீது மிகவும் அன்பாக இருக்கும் மனைவி நிஜோமோல் ஜோஸ். இருவரும் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் சூழ்நிலையில், தன் மனைவி நிஜோ மோல் ஜோஸ் மீது மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வருகிறார் ஹரிகிருஷ்ணன்.  எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிகிருஷ்ணன் காலையில் எழுந்தவுடன் கடவுளை கும்பிட்டு விட்டு பணிக்கு செல்லும் போது தன் மனைவியிடம் ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டு தான் செல்வார்.

இப்படி இவர்கள் இருவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருநாள் ஹரி கிருஷ்ணனின் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை சில புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்கிறார் மனைவி நிஜோ மோல் ஜோஸ். தன் வாழ்க்கையை அமைதியான முறையில் மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த நிஜோ மோல் ஜோஸுக்கு இது பேரிடியாக அமைந்து விட்டது. இதனால் கடும் கோபம் கொண்ட நிஜோ மோல் ஜோஸ் தன் கணவனை கொலை செய்து விடுகிறார். ஹரி கிருஷ்ணன் கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையில் அந்த பிணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து மறைத்து விடுகிறார்.

அதன் பிறகு சர்வ சாதாரணமாக தன்னுடைய பணியை செய்து கொண்டிருக்கும்போது, அவரது வீட்டிற்கு ஹரி கிருஷ்ணனை தேடி லாஸ்லியா வருகிறார் அவரது வீட்டிற்கு வந்த லாஸ்லியா ஹரி கிருஷ்ணன் எங்கே என்று வினவ,  அவர் வெளியூருக்கு சென்று இருக்கிறார் என்று அலட்சியமாக சொல்கிறார் நிஜோ மோல் ஜோஸ். இதனால் கோபம் அடைந்த லாஸ்லியா காவல்துறை அதிகாரியிடம் சென்று ஹரி கிருஷ்ணனை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். ஹரி கிருஷ்ணனை கொலை செய்து விட்டு அப்பாவிப் போல் உலா வந்து கொண்டிருக்கும் லிஜோ மோல் ஜோஸிடம் காவல்துறை அதிகாரி விசாரணை செய்கிறார். இந்த விசாரணையில் லிஜோமோல் ஜோஸ் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் ‘ஜென்டில்வுமேன்’ படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து மிகத் தெளிவாக நடித்து அசத்தி இருக்கிறார். தன் கணவனுக்கு மதிய உணவு கட்டிக் கொடுத்து அவரை வழி அனுப்பி டா டா காட்டிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு ஒரு அப்பாவி மனைவியாக நடிக்கும் லிஜோமோல் ஜோஸ், காவல்துறை விசாரணை செய்யும்போது அமைதியான முறையில் பதில் சொல்லும் காட்சிகளில் படம் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டார். அவரது சிறந்த நடிப்புக்காக கண்டிப்பாக கைத்தட்டல் கொடுக்க வேண்டும்.

ஒரு ஆண் நல்லவன் என்பதற்கு அடையாளம் கடவுள் பக்தியும், நெற்றியில் பட்டை போடுவதும் என்று ஹரிகிருஷ்ணனை பக்திமானாக  காட்டியிருக்கிறார்கள். இது போன்ற ஆண்களை ஊமை குசும்பன் என்று சொல்வதுண்டு. ஊமை குசும்பனாக பெண்களை கண்டால் ஜொள் விடும் ஒரு பெண் பித்தனாக ஹரிகிருஷ்ணன் மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து இருக்கிறார்.

இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக லாஸ்லியா நடித்திருக்கிறார். ஒரு ஆண் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான கதாபாத்திரம் என்பதற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

லிஜோமோல் ஜோஸின் தங்கையாக நடித்திருக்கும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, போலீஸ் இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் வைரபாலன் என இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக தெளிவாக அவரவர் கதாபாத்திங்களுக்கு ஏற்ப உணர்ந்து  மிக தத்ரூபமாக  நடித்திருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.பின்னணி இசையில் கதைக்களத்துக்குப் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன், அடுக்குமாடி குடியிருப்புக்குள் வைத்தே பல காட்சிகளை படமாக்கி இருந்தாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் பதட்டமான கதையை ஒரு சுவாரஸ்யமாக அடுத்து என்ன நடக்கும் என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் சேர்த்து கமர்ஷியலாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த கதை எப்படி செல்ல போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு மர்ம முடிச்சு போட்டு  இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ’ஜென்டில்வுமன்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.