‘கிங்ஸ்டன்’ – திரைப்பட விமர்சனம்!

107

சென்னை:

ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, சேத்தன் , அழகம்பெருமாள், குமாரவேல், சாபுமன், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், பிரவீன் பயர் கார்த்திக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “கிங்ஸ்டன்” இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதற்கு காரணம்  அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.  1982-ஆம் ஆண்டில் இறந்துபோன அழகம் பெருமாள் என்பவரின் ஆவி தான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். மக்களை பாதுகாக்கும் பொருட்டு, யாரும் அங்கு மீன் பிடிக்க போகக் கூடாது என்று அரசு தடை விதிக்கிறது. இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள். அதனால், அந்த கிராமத்திலுள்ள மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை இந்த கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், உள்ளூர் தாதா ஷபுமோன் என்பவரிடம்  வேலை பார்க்கும் மீனவ இளைஞர் ஜி.வி.பிரகாஷ், கடலுக்குள் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க, தன் நண்பர்களுடன் படகில் கடலுக்குள் செல்கிறார். நடுக்கடலுக்குள் சென்ற பிறகுதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. கடல் முழுவதுமாக மனித எலும்பு கூடுகளால் நிரம்பிக் கிடக்கிறது அதை பார்த்து ஜி.வி.பிரகாஷும்  அவருடன் வந்தவர்களும் நிலை குலைந்து போகிறார்கள். நேரம் செல்லச் செல்ல கடலுக்குள் பேயாட்டம் தொடங்கி விடுகிறது. நேரடியாக படகிற்கு வந்து ஜி.வி.பிரகாஷின்  கூட்டத்தை தாக்குகிறது. அந்த தாக்குதலிலிருந்து அவர்கள் தப்பினார்களா? இல்லையா?என்பதுதான் ‘கிங்ஸ்டன்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்திருக்கிறார். மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் வழக்கம் போல்  தன் நடிப்பு திறமையை  வெளிப்படுத்திருக்கிறார். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து காதல், கோபம், துணிச்சல், ஏக்கம் என மிக சிறப்பாக தன் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார். இதில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருந்தாலும், பெரிய அளவில் வேலை இல்லை.,

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த  வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் கடல் காட்சிகளை பிரமாண்டமாகக் காட்ட வேண்டும் என பெரிதும் உழைத்து இருப்பது நன்றாகத் தெரிகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதால் இந்தக் கதைக்கு ஏற்றவாறு  கூடுதல் ஈடுபாட்டோடு பாடல்கள் கொடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.பின்னணி இசையும் அவரை உயர்த்திப் பிடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

கமல் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.கடலுக்குள் நடக்கும் திகில் கதைக்குத் தேவையான அம்சங்களைச் சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார். கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகவும் பிரமிப்பூட்டும்படியும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. பார்வையாளர்களுக்குப் படபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் இயல்பாகத் தருகின்றன.

மொத்தத்தில், ‘கிங்ஸ்டன்’ படம் பேய் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.