‘அஸ்திரம்’ திரைப்படவிமர்சனம்!

59

சென்னை:

நடிகர் ஷாம், நிரா, ரஞ்சித் டி.எஸ்.எம், வென்பா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அரோல் டி சங்கர், விடேஷ் ஆனந்த், மாஸ்டர் மார்டின், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “அஸ்திரம்”. இப்படத்தை  எழுதி, இயக்கி இருப்பவர்  அரவிந்த் ராஜகோபால்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மதுரைக்கு அடுத்த கொடைக்கானல் பகுதியில் ஒரு இளைஞன் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இது போன்ற தற்கொலைகள் பல இடங்களில் நடக்கின்றன. எதனால் இவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவும்,  அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரியான ஷாம் நியமிக்கப்படுகிறார். காவல்துறை அதிகாரியான ஷாம் தன்னுடன் பணியாற்றும் ஒரு‌ காவலரின் துணையோடு விசாரணையை துவங்குகிறார்.

இந்த சூழலில்  தற்கொலை வழக்குகளை விசாரிக்கும் ஷாம் வீட்டிற்கு இரண்டு இளம் வாலிபர்கள் வருகின்றனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்யும் வாலிபர்களை பற்றி குறிப்பிட்டு சொல்லும் போது சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன.  இந்த சமயத்தில் அந்த இருவரும் ஷாம் வீட்டிலேயே தன் வயிற்றில் கத்தியை குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அதிச்சியில் உறைந்து போன ஷாமிடம் மூத்த காவல்துறை அதிகாரி விசாரித்து, அதன் பிறகு காவல்துறை மூத்த அதிகாரி ஷாமை கட்டாய விடுமுறையில் அனுப்பி விடுகிறார்.

இந்த தற்கொலைகள் பற்றி விசாரணை செய்து கொண்டிருந்த ஷாம்  என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது சில உண்மைகள் தெரிய வருகிறது. காவல்துறை அதிகாரி கட்டாய விடுமுறை அளித்து வெளியே அனுப்பினாலும், இந்த தற்கொலைகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை தீவிரமாக கண்டறிய முயலுகிறார் ஷாம். இந்த நிலையில் இளம் வாலிபர்கள் தன் வயிற்றில் கத்தியை குத்திக்கொண்டு இறப்பது ஏன் என்பதை ஷாம் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதுதான் “அஸ்திரம்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் ஷாம் கதாநாயகனாக காவல் துறை அதிகாரியாக எதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்கிறார். காவல் துறை அதிகாரி என்ற கம்பீரமான மிடுக்குடனும், தைரியத்துடன் நடித்து இருந்தாலும், தன் மனைவி மீது பாசம் வைத்து, ஒரு  சாந்தமான கணவனாகவும் அசத்தி இருக்கிறார்.

நிரா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் இந்தக் கதையில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், அவர் வருகிற காட்சிகளில் நிறைவாக  மனதில்  நிற்கிறார்.

சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருப்பவர் புதுமுகம் என்ற அடையாளமே தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மனநல மருத்துவராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, தங்களுக்கு கொடுத்த  பணியை  நிறைவாக செய்து இருக்கின்றனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப பயணித்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், தனது ஒளிப்பதிவு மூலம் இந்த கதை களத்திற்கு தகுந்தவாறு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால், ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை அனைவரும் ரசிக்கும் விதத்தில்  இயக்கி இருக்கிறார். இப்படத்தின் கதை படம் பார்ப்போர் மனதில் பதிந்து  இருந்தாலும்  ரசிகர்கள் ஆச்சரியப்பட வைக்கிற மாதிரி திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘அஸ்திரம்’  அனைத்து ரசிகர்களையும் கவரும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.