சென்னை:
புதுமுகம் சேது, சம்ரித்தி தாரா, பி.எல். தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம். பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “மையல்”. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஏபிஜி ஏழுமலை.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஒரு சிறிய கிராமத்தில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான தம்பதியை சில மர்ம மனிதர்கள் கொலை செய்து விடுகின்றனர். இந்த கொலையை செய்த மர்ம மனிதர்களை கண்டுபிடிக்க காவல்துறை ஆய்வாளர் சி எம் பாலா விசாரணை நடத்துகிறார். இந்த நிலையில் கதாநாயகன் சேது மந்தையில் ஒரு ஆட்டைத் திருடிடிக் கொண்டு செல்லும்போது அங்குள்ள கிராம மக்கள் அவரை துரத்துகின்றனர். அப்போது சேது வேகமாக ஓடும் போது ஒரு கிணற்றில் தவறி விழுந்து விடுகிறார். அடுத்த நாள் காலையில் அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் சம்ரிதி தாரா அங்கு சேது கிணற்றில் கால் முறிவு ஏற்பட்டு தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அவரைக் காப்பாற்றி அவர் முதல் உதவி செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் சேதுவை கண்ட சம்ரிதி தாராவுக்கு தன்னையே அறியாமல் அவர் மீது காதல் ஏற்படுகிறது. கிணற்றில் விழுந்து காயம் ஏற்பட்ட சேதுவுக்கு சம்ரிதி தாரா அந்த காயம் சரியாகும் வரையில் தனது வீட்டிலேயே இருக்குமாறு அடைக்கலம் கொடுக்கிறார். சம்ரிதி தாராவின் பாட்டி ரத்னகலா ஒரு மந்திரவாதி என்பதால் இவர்களை அந்த கிராம மக்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கின்றனர். இதனால் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு ஒற்றை குடிசையில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். சில நாட்கள் அந்த குடிசையில் தங்கி இருந்த சேது மனம் திருந்தி தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறார். ஒருநாள் இரவு அந்த மந்திர கிழவி சேதுவை யாருக்கும் தெரியாமல் வழி அனுப்பி வைக்கிறார்.
சேதுவை விட்டு பிரிந்த சூழ்நிலையில் வேதனையில் இருக்கும் சம்ரிதி தாராவுக்கு பாட்டி தைரியம் சொல்லி அவரையே திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறுகிறார். தனது சொந்த ஊருக்கு சென்ற சேது அங்குள்ள தன் சொத்துக்களை விற்று தன் ஆசை காதலியை திருமணம் செய்து கொள்வற்காக திருட்டு தொழில் செய்யாமல் திருந்தி வாழ நினைத்து, மீண்டும் அந்த கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்திற்கு வரும்போது காவல்துறை அதிகாரி சி.எம். பாலாவிடம் சிக்கிக் கொள்கிறார். கொலை செய்யப்பட்ட வயதான தம்பதிகள் தேனப்பனின் சித்தப்பா என்பது தெரிய வருகிறது.
அந்தக் கொலையை மறைக்க காவல்துறை ஆய்வாளர் சி.எம். பாலாவுக்கு 50 லட்ச ரூபாய் கொடுக்க பேரம் பேசுகிறார் தேனப்பன். வயதான தம்பதிகளை கொன்ற இருவரில் ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் சேதுவை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த காவல்துறை அதிகாரி சி.எம்.பாலா, வயதான தம்பதி கொலை சம்பந்தமாக சேதுவை குற்றவாளியாக்க முயற்சி செய்கிறார். இறுதியில் வயதான தம்பதியை கொலை செய்தவர்களை கைது செய்தார்களா? திருந்தி வாழ நினைத்த சேதுவின் காதல் நிறைவேறியதா? என்பதுதான் ‘மையல்’ படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சேது மிகவும் எதார்த்தமான நடிப்பை மிகவும் அருமையாக, சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எதார்த்த கிராம வாசியாகவே வாழ்ந்திருக்கிறார். காவல்துறையினரிடம் சிக்கி சித்ரவதை அனுபவிக்கும்போதும், பின்னர் வெகுண்டெழுந்து விரோதிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும், காதலி இறந்ததை நினைத்து பதறி துடிக்கும் காட்சிகளில் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சம்ரிதி தாரா அழகிலும், அவரது சிரிப்பிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கான இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக பி.எல்.தேனப்பன், காவல்துறை அதிகாரியாக சி.எம்.பாலா, சூனியக் கிழவியாக ரத்னகலா, போலீஸ் ஏட்டாக மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பன் கிராமத்து மண் மணம் மாறாமல் இயற்கை எழிலுடன் காட்சிக் கோணங்களை மிக சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் அமர்கீத். எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் கிராமத்தில் நடக்கும் திருட்டு, கொலை, அதை விசாரிக்க வரும் காவல்துறையினர்பற்றியும், அதனைத் தொடர்ந்து நடக்கும் திருடன் மீதான காதல் என நல்லதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர் ஏபிஜி ஏழுமலை, பல காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறார். இறுதிக்கட்ட காட்சிகளில் காவல்துறை அதிகாரி செய்யும் அட்டூழியம் நம்பும்படி இல்லை.
மொத்தத்தில் – இந்த ‘மையல்’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் :- 2.5./5.
RADHAPANDIAN.