‘கட்ஸ்’ திரைப்பட விமர்சனம்!

84

சென்னை:

ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கும் ‘கட்ஸ்’ படத்தை எழுதி இயக்கியவர் ரங்கராஜ்.

இதில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கதைக்களம் நடப்பதாக தொடங்குகிறது. விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் பெத்தனசாமி என்கிற ரங்கராஜ்.  பி​ரசவ வலியால் துடிக்கும் தனது கர்ப்பிணி மனைவி ஸ்ருதி நாராயணனை நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆட்டோவை வழிமறிக்கும் சில மர்மநபர்கள் பெத்தனசாமி என்கிற ரங்கராஜை கொலை செய்ய முயற்சி செய்து கத்தியால் சரமாரியாக குத்துகிறார்கள். ரத்தம் வழிந்தோட உயிருக்குப் போராடும் நிலையிலும் பெத்தனசாமி தனது மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடி, அருகிலுள்ள மருத்துவச்சியின் வீட்டில் சேர்க்கிறார். அங்கு, மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க, அதனையறிந்த பின் தாக்குதலால் உயிருக்கு போராடும் பெத்தனசாமி என்கிற ரங்கராஜ் இறந்து விடுகிறார்.

விதவையான மனைவி  ஸ்ருதி நாராயணன்  மீன் மார்க்கெட்டில் மீன் விற்று தனது குழந்தையை வளர்க்கும் போது,  மக்களிடமிருந்து மாமூல் பணம் பறிக்கும் காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளரை துணிச்சலாக  எதிர்க்கிறார். இதனால் கோபமடைந்த ஆய்வாளர் ஸ்ருதி நாராயணனை அடித்து உதைக்கிறார். இதனால் ஆவேசம் கொள்ளும் ஸ்ருதி நாராயணன், அன்று இரவு, காவல்துறை ஆய்வாளரை  கத்தியால் குத்தி கொலை செய்கிறார். அப்போது ஆய்வாளருடன் கூடவே இருந்த ஒருவரால் ஸ்ருதி நாராயணனும் கொல்லப்படுகிறார். இளம் வயதிலேயே தனது தாயையும் தந்தையையும் இழந்த மகன் ரங்கராஜ், தனது தாயின் விருப்பப்படி நேர்மையான காவல்துறை அதிகாரியாகி, மக்களுக்கு உண்டான சேவைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் ரங்கராஜ் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கும் ஆசிரமத்தில் நான்ஸியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார் திருமண தம்பதிகள் இருவரும் அதே ஆசிரமத்தில் வளர்ந்த ஆதரவற்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். குடும்பமாக மகிழ்ச்சியாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம அதிகாரியான ஒரு திருநங்கை கொல்லப்பட்ட வழக்கு அவரிடம் விசாரணைக்கு வருகிறது. காவல்துறை அதிகாரி ரங்கராஜ் தீர விசாரித்து, கொலையாளியான அர்ஜுன் தேவ் என்பவரை  கைது செய்து காவல் நிலையத்தில் உள்ள சிறையில் அடைக்கிறார். ஆனால், ஒரு மணி நேரத்துக்குள் அர்ஜுன் தேவ, அவரது மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார். இந்த சூழலில், காவல்துறை அதிகாரி ரங்கராஜின் மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.  காதல் மனைவியின் மரணம் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு தன்னுடைய  மனைவியை கொன்றது யார் என்பதை ரங்கராஜ் கண்டுபிடித்;தாரா? இல்லையா? என்பதுதான் “கட்ஸ்” படத்தின் மீதிக் கதை.

தந்தை பெத்தனசாமி, மகன் காவல்துறை அதிகாரி ரங்கராஜ் ஆகிய இரு வேடங்களிலும் ரங்கராஜ் நடித்திருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் தான் ஒரு புதுமுக நடிகர் என்று தெரியாமல் படம் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் கூட கண்டுபிடிக்காத அளவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.  மனைவியிடம் காட்டும் காதல், மகளிடம் காட்டும் பாசம், சக காவலர்களிடம் காட்டும் பரிவு, அநியாயத்தை தட்டிக் கேட்கும் பண்பு, பழிவாங்குதல் போன்ற அனைத்து காட்சிகளிலும் தன்னுடைய நடிப்பால் பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.

தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸி, கேரளத்து மொழியில் கொஞ்சி பேசுவதும், தனது கணவன் மீது வைத்திருக்கும் காதல் என பல காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

செயற்கை உர பெருவணிகராக மஞ்ச்ரேக்கர், அவரது மகனும் கார்ப்பரேட் புள்ளியுமாக அர்ஜுன் தேவ் ஆகிய இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

பெத்தனசாமியின் அம்மாவாக வரும் ஸ்ரீலேகா ராஜேந்திரன், ரங்கராஜின் தாய்மாமா பாண்டியனாக வரும் சாய் தீனா, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸாக வரும் பிர்லா போஸ், சீனியர் கான்ஸ்டபிள் கரீம் பாயாக வரும் டெல்லி கணேஷ், பெண் கான்ஸ்டபிள் மகாலட்சுமியாக வரும் அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்து, இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலத்தை கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் ஒளிப்பதிவு மூலம் சண்டைக் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய விதம் மிகச் சிறப்பு.

தனது முதல் படத்திலேயே இயக்குநர், கதாநாயகனாக  இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கராஜ், ஒரு நடிகராக தனது திறமையை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்து, பல கெட்டப்புகளில் தன்னை ஈடுபடுத்தி நடிப்பு திறமையை மிக சிறப்பாக வெளிபடுத்தி இருப்பதையும், பெண்ணின் வீரம், விவசாயத்தை காப்பாற்றுதல்,, தாயின் பாசம் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் என அனைத்தும் கலந்த கதை அமைப்பில் தந்தை- மகன் இருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘கட்ஸ்’  அனைத்து ரசிகர்களையும் கவரும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.