சென்னை:
நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து நடித்திருக்கும் ‘குட் டே’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.அரவிந்தன். இப்படத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், கலை இயக்குநர் விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் கதாநாயகன் பிரித்திவிராஜ். அந்த பனியன் கம்பெனியில் உள்ள மேனேஜருக்கும் பிருத்திவிராஜுக்கும் இடையே அடிக்கடி சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த கம்பெனியில் பணிபுரியும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும் மேனேஜரை கண்டித்து பிரித்திவிராஜ் குரல் கொடுக்கிறார். இந்த விஷயத்தை தன்னுடைய முதலாளியிடம் புகார் கொடுக்க முற்படும் போது அந்த கம்பெனி மேனேஜர் பிரித்விராஜை கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதனால் கோபத்தில் இருந்த அந்த மேனேஜர் பிரித்திவிராஜுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் வெறுப்பேற்றுகிறார். இவரது சம்பளம் தான் அவர் குடும்பத்திற்கும் அவருடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. இதனால் வேதனையில் இருக்கும்போது அந்த மேனேஜர் காலம் தாழ்த்தி சம்பளத்தை போடுகிறார்.
த்ன் சம்பளத்தை வாங்கியவுடன் மனைவிக்கும், அம்மாவின் மருத்துவ செலவுக்கும் பணத்தை அனுப்புகிறார். அம்மாவுக்கு பணத்தை அனுப்பியதால் பிரிதிவிராஜுக்கும் மனைவிக்கும் இடையே தொலைபேசியில் சண்டை ஏற்படுகிறது. பிரித்திவிராஜ் பணிபுரிந்த பனியன் கம்பெனியில் அவமானம் ஏற்பட்ட நிலையில் தனது மனைவியால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்ட பிருத்திவிராஜ் மதுவை குடித்துவிட்டு வந்து தான் குடியிருக்கும் வீட்டு முதலாளியை அடித்து விடுகிறார். மேலும் அந்த வீட்டை காலி செய்ய சொன்ன முதலாளியை கல்லால் அடித்து தாக்குகிறார். கல்லடி தாங்க முடியாமல் அவர் காவல்துறைக்கு போன் செய்து பிருத்திவிராஜ் மீது வழக்கு தொடுக்குமாறு தெரிவிக்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியில் சென்ற பிருத்திவிராஜுக்கு போகும் வழியில் மீண்டும் மதுவை குடிக்க போதை தலைகேறிய நிலையில், தனக்கு அன்று பிறந்தநாள் என்பதும், கல்லூரியில் படிக்கும்போது உள்ளுக்குள் காதலித்துவந்த தனது தோழி மைனா நந்தினி முகமும் நினைவுக்கு வருகிறது.
உடனே ஒரு பேக்கரிக்கு சென்று கேக் வாங்கிக்கொண்டு மைனா நந்தினியின் வீட்டுக்கு சென்று அவளது கணவர் ஆடுகளம் முருகதாஸ் முன் பிரச்சினையில் ஈடுபடுகிறார். அங்கு கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டதால் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிருத்திவிராஜ், அதன் பிறகு ஒரு பாலத்தின் மீது நின்று கொண்டு தொலைபேசியில் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக மைனா நந்தினியிடம் சொல்கிறார். இதனால் வேதனையடைந்த நந்தினி, தன் கணவன் ஆடுகளம் முருகதாஸை அழைத்துக் கொண்டு புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்கிறார். அப்போது ரோந்து பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் முருகனிடம் சிக்கி கொண்டதால் காவல் நிலையம் அழைத்து வரப்படுகிறார் பிருத்திவிராஜ்,. காவல் நிலையத்தில் தன் தோழி நந்தினி நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த பிருத்திவிராஜ் போதையில் ஆடுகளம் முருகதாஸை திட்டுகிறார். காவல்துறை அதிகாரி விஜய் முருகன் லத்தியால் பிருத்திவிராஜை அடித்து உதைத்து சட்டையை கழற்ற சொல்லி, தொலைபேசியையும் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்.
அச்சமயத்தில் சுமார் 4 வயது பெண்குழந்தை காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் தீவிரமாக தேடும் பணியில் வெளியே செல்லும் போது, காவல்துறை அதிகாரி விஜய் முருகனின் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டு, அவரது வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியில் ஓடி விடுகிறார் பிருத்திவிராஜ். வாக்கி-டாக்கியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த பிருத்திவிராஜ் என்ன ஆனார்?மது போதையினால் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி பாழாகிப் போகிறது? என்பதை யதார்த்தமான முறையில் ‘குட் டே’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதைக்கரு வழங்கி, தயாரித்து, நாயகன் சாந்தகுமாராகவும் நடித்திருக்கிறார் பிரித்திவிராஜ் ராமலிங்கம். மதுவை குடித்து விட்டு குடிகாரராக நடித்திருக்கும் பிருத்விராஜ் ராமலிங்கம், உண்மையான குடிகாரர்களைப் போலவே மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். எதிர்பாராமல் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் அவர் தடுமாறி எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல், தனது கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப போதையில் தடம் மாறும் காட்சிகளில் சரியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். தனது நடிப்பு திறமையால் வெற்றி பெற்ற அவர் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடிப்பார் என்பதில் ஐயமில்லை.
கதாநாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்தி விட்டார். ஆடுகளம் முருகதாஸ் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்.
ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை சொல்பவராக நடித்திருக்கும் போஸ் வெங்கட், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் முருகன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் இப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. இப்படத்தில் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் இருக்கும் உண்மை தெளிவாக இருக்கிறது.
மதன் குணதேவ், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய இரண்டு முக்கிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.இரண்டிலும் மிக சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறார்.
இப்படத்தின் திரைக்கதை – வசனத்தை பூர்ணா ஜெஸ் மைக்கேல் எழுத, அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கியிருக்கிறார். உண்மையான வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து, நமது சமுதாயத்தில் மது அருந்துபவர்கள் செய்யும் சேட்டைகளை மிக தத்ரூபமாக எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் அனைத்தையும் அளவாக சொல்லி படத்தை ரசிக்க வைப்பதோடு, நெருக்கமாக திரைப்படக் காட்சிகளை சிறப்பாக அமைத்து படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைத்து விடுகிறார்.
‘குட் டே’ – அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.