‘போகி’ திரைப்பட விமர்சனம்!

94

சென்னை:

நபி நந்தி, சரத், லப்பர் பந்து சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “போகி”. இப்படத்தை விஜய் சேகரன் எஸ். எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தேனி அருகில் இருக்கும் மலை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருப்பவர் நபி நந்தி. அவரும் அவருடைய நண்பர் சரத்தும் இணைந்து சில கொலைகளை செய்கிறார்கள். அந்தக் கொலைகளை செய்தவர்களை காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறை ஈடுபடுகிறது. ஒரு கட்டத்தில் நபி நந்தியை காதலிக்கும் காதலி எதற்காக இந்த கொலைகளை செய்கிறீர்கள் என்று கேட்கிறார்., அதற்கு பதில் சொல்லும் நாயகன் அபி நந்தி, ‘போக்குவரத்து, மருத்துவ வசதி கூட இல்லாத மலைகிராமத்தில் இருக்கும் தனது தங்கை சுவாசிகா பள்ளி படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். தனது கிராமத்திற்கு மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவராக ஆக வேண்டும் என்பது தான் தன்னுடைய லட்சியமாக கொண்டிருந்தார்.

மாநிலத்தில் முதல் மாணவியாக திகழ்ந்த தன் தங்கை சுவாசிகா, தாய் தந்தை இல்லாததால் அவளை தாயுமாகவும் தந்தையுமாக இருந்து நன்கு வளர்த்து படிக்க வைத்தேன். மருத்துவ படிப்பு படிப்பதற்காக  சென்னைக்கு அனுப்பி வைத்தேன், சில வருடங்கள் செல்ல, தான் படிக்கும் கல்லூரியின் மருத்துவமனையின் பிணவறையில்  மரணமடைந்த பெண்களை  பாலியல் ரீதியில் வீடியோ எடுத்து வெளியிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுவாசிகா கொதிப்படைந்து தனது மருத்துவ மேலதிகாரியிடம் சொல்லுவதற்கு முற்படும்போது கொலை செய்யப்பட்டார். அதனல்தான் எனது காதலை வெளிப்படுத்த முடியாமல், என் தங்கையை கொன்றவர்களை பழி  தீர்க்க கொலை வெறியில் எனது பயணத்தை தொடர்கிறேன்’ என்கிறார்.  இறுதியில் தனது தங்கை சுவாசிகாவை கொன்றவர்களை அபி நந்தி பழி தீர்த்தாரா? இல்லையா? என்பதுதான் ‘போகி’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி, அறிமுக நடிகர் என்றாலும் முதல் படம் போல் தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் சகோதரனாக அளவாக நடித்திருப்பவர் காதல் காட்சிகள் மட்டுமில்லாமல் கோபம், ஆத்திரம், சண்டைக் காட்சிகளிலும் தன் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் சரத்தும் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார். இப்படத்தில் தங்கையாக நடித்திருக்கும் லப்பர் பத்து சுவாசிகா தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம் என்றாலும் மிக அழகாக நடித்து அனைவரையும் கவர்கிறார்.

ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்கும் பூனம் கவுர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் தனது சில்மிஷ நடிப்பால் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு நடித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையிலும் குறைவில்லாமல் திறம்பட அமைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தி, .  சமூக விழிப்புணர்வை ஆணி அடித்தார்போல் சொல்ல முயன்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் பசுமை காட்சிகளை முதல் பாதியிலும் வைத்திருந்தால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். பெண்கள் இறந்த பின்பு உயிரற்ற உடலையும் காட்டி இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற ஒரு உண்மையை இந்தப் படத்தின் மூலமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். இது போல் பல படங்கள் வெளி வந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை மிக தெளிவாக காட்டி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘போகி’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.