சென்னை:
புதுமுகம் மகேந்திரn, கர்ணா, நீமா ராய், ரேஷ்மா, நிழல்கள் ரவி, ரகுபதி, சிக்கல் ராஜேஷ், கருப்பு, சிசர் மனோகர், மாரிமுத்து, சரண் ராஜ், ரங்கராஜ், ஆன்ஸி சிந்து, கயல், அமிதா போன்ற பலர் நடித்திருக்கும் படம்தான் ‘இரவின் விழிகள்’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக சிலர் எல்லை மீறும் செயல்களை செய்து அந்த நபர்களைப் பற்றி தவறாக உருவாக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால், அதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவள் தற்கொலை செய்துக் கொள்கிறாள். யூடியூப், மூலம் பணத்திற்காகவும் ,பார்வைகள் வரவேண்டும் என்பதற்காகவும் எல்லை மீறி ஒழுங்கீனமான செயல்களிலும் பலர் ஈடுபடுகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த ஒரு முகமூடி போட்ட மர்ம மனிதர் அப்படிப்பட்டவர்களைப் பட்டியல் போட்டு, அவர்களை கண்டுபிடித்து வரிசையாக கொலை செய்கிறார். பல கொலைகளை செய்யும் அந்த மர்ம மனிதனைத் தேடி போலீஸ் மோப்பம் பிடித்துத் துப்புத் துலக்குகிறது. இறுதியில் போலீஸ் அந்த கொலையாளியை கண்டுபிடித்து அவரை கைது செய்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘இரவின் விழிகள்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கர்ணா பாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன்,கதாநாயகனாக அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நீமா ரே வுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி கதாபாத்திரத்திற்குத் தேவையான அளவு தாரளமாகக் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்கிறார்.
இப்படத்தை இயக்கியிருக்கும் சிக்கல் ராஜேஷ் கருப்பு கதாபாத்திரத்தில் வருகிறார்.அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது. மற்றும் நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் அனுபவ நடிப்பின் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு…” பாடல் வீரியம் மிக்கதாகவும், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதத்திலும் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசையிலும் எந்தவித குறையும் வைக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளைத் தெளிவாகப் படமாக்கியுள்ளார்.ஒரு திரில்லர் படத்துக்கான உணர்வைச் சரியாகக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார்.
சமூக ஊடகங்கள் இந்த சமூகத்திற்கு எப்படி எல்லாம் நன்மை செய்கிறது? அதே சமயத்தில் என்ன தீமை விளைவிக்கிறது? என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் யூடியூபில் பிரபலமாவதற்காக சிலர் செய்யும் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘இரவின் விழிகள்’ படம் யூடியூபர்களுக்கு ஒரு படிப்பினை.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.