சென்னை:
கீர்த்தி சுரேஷ் ,ராதிகா சரத்குமார் ,சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்ராயன், அகஸ்டின் ,பிளேடு சங்கர், ராமச்சந்திரன் ,அக்ஷதா அஜித், குகாசினி, காயத்ரி ஷான் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘ரிவால்வர் ரீட்டா’.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
டிராகுலா பாண்டியன் என்கிற சூப்பர் சுப்பராயன் பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவருக்குப் பெண் மோகம் ஏற்பட்டு சபலத்தில் விலைமகள் வீட்டைத் தேடிச் செல்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டிற்க்குள் நுழைந்து விடுகிறார். இதனால் பதறிப்போன கீர்த்தி சுரேஷும் அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் அவரை வெளியே போகுமாறு விரட்டுகிறார்கள். ஆனால் சூப்பர் சுப்பராயன் துப்பாக்கியை கையில் எடுக்கிறார். அதைக் கண்டு அம்மாவும் மகளும் பயந்து பதற்றத்தில் அவரைத் தள்ளி விட சூப்பர் சுப்பராயன் கீழே விழுந்து விடுகிறார். கீழே விழுந்த அவரது தலையில் அடிபட்டு இறந்து போகிறார்.
கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, இறந்து போன அந்த பிணத்தை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்ற சிக்கலில் மாட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ், அவரது தாய் ராதிகா, சகோதரிகள் இணைந்து பல விதத்தில் திட்டம் தீட்டுகிறார்கள். இந்நிலையில் அவரது மகனான ஜூனியர் தாதா சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேடுகிறார். இன்னொரு பக்கம் இறந்து போன சூப்பர் சுப்பராயனின் தலையைக் கொண்டு வந்தால் ஐந்து கோடி தருகிறேன் என்று ஒரு ஆந்திர ரவுடி விலை வைக்க, உயிரிழந்த ரவுடியின் உடலை கைப்பற்றி அதன் மூலம் ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த சூழலில் கீர்த்தி சுரேஷால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், அவரைப் பழிவாங்க துடிக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜயின் விசாரணை, அழுத்தம், தொல்லைகள் என கீர்த்தி சுரேஷின் குடும்பத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை எப்படி சமாளித்தார். இறுதியில் கீர்த்தி சுரேஷ் அந்த பிணத்தை அப்புறப்படுத்தினாரா? இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கும் படம்தான் ‘ரிவால்வர் ரீட்டா’.
இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். திருமணமான பிறகும் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பயம் பதட்டம் கோபம் தைரியம் என்று பல்வேறு விதமான முகபாவனைகளைக் காட்டி, அதை தனது இயல்பான நடிப்பால் மிக எளிதாக அனைவரையும் கவர்கிறார்.
பக்திப் பரவசத்தோடு கழுத்தில் சாமிக்கு மாலை போட்டுக்கொண்டு முருகா முருகா என்றபடி வலம் வரும் ராதிகா, அம்மா கதாபாத்திரத்திற்க்கு மிகப் பொருத்தமாக இருப்பதோடு தன் அனுபவத்தால் அப்பாவிதனமாகவும், விவகாரமாகவும் பேசி திரையரங்கை சிரிக்க வைக்கிறார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் புதிய தோற்றத்தில் வந்து வில்லத்தனம் காட்டுகிறார்.
அவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி வழக்கம்போல அளவுக்கு அதிகமாகப் பேசி சலிப்பை ஏற்படுத்துகிறார்.
வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பிளாக் காமெடி படத்திற்க்கு எற்ப வித்தியாசமான வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு சிறப்பாக பயணித்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, இந்தப் படத்திற்காக எடுத்துக் கொண்ட கதையை மாறுபட்ட முறையில் எடுக்க நினைத்து இருந்தாலும், ஒரு பிணத்தை மறைக்க ஒரு சாமானியப் பெண் என்ன செய்யமுடியும் என்பதை காட்சிக்குக் காட்சி நகைச்சுவையாக பிளாக் காமெடி ஜானரில் புதுமையான விதமான சொல்லிச் சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’ ஜாலியாக ரசிக்கும் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.