சென்னை:
சரத்குமார்,சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், தர்னிகா,காளி வெங்கட்,ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர்,மதன் பாப் போன்ற பலர் நடித்துள்ள படம்தான் ‘கொம்பு சீவி’ இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி உள்ளார் பொன்ராம்.
இப்படத்தின் கதயைப் பொருத்தவரையில்,
1970 களில் வைகை அணை கட்டும்போது அங்கிருந்த பல கிராமங்கள் அழிந்து போகின்றன. அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனால் வைகை ஆற்றின் கரை ஓரம் வாழ்ந்த மக்கள் அணையில் நீர்மட்டம் உயர்ந்தால் விவசாயம் செய்ய முடியாது. அணை நீர்மட்டம் குறைந்து காணப்படும் போது விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெருக்குகிறார்கள். .மற்ற நேரங்களில் விவசாயம் இல்லாத போது சில சமூக குற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கஞ்சா போன்ற போதை கொடுக்கும் செடிகளை வளர்த்து, அதை காய வைத்து விற்று அதில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.அப்படி செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறார் சரத்குமார். அவரும் அவ்வபோது சில தவறான செயல்களில் ஈடுபட்டாலும், அவை அனைத்தும் ஊர் மக்களுக்காகவே என்பதால், அவரை தலைவராகவே ஊர் மக்கள் பார்க்கிறார்கள். அப்படி வைகை அணை நீரில் மூழ்கி இருக்கும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான் சரத்குமாரும், சண்முகப் பாண்டியனும்.
இந்த சூழ்நிலையில் ரொக்கப்புலி என்கிற சரத்குமார், பாண்டி என்கிற சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறார்,அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் இருவரும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பணம் இல்லாததால் தனது பெற்றோரை இழந்ததால், அதே பணத்தை அதிகமாக சம்பாதித்து, பண மெத்தையில் படுக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறார்சண்முகப் பாண்டியன். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி சுஜித் சங்கர் ருடன் மோதல் ஏற்படுகிறது. இதனால் சரத்குமாரையும், சண்முகப் பாண்டியனையும். எங்கவுண்டரில் சுட்டு பிடிக்க முயல்கிறார்.இந்த மோதலில் சரத்குமாரையும், சண்முகப் பாண்டியனையும் கைது செய்தார்களா? இல்லையா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் ‘கொம்பு சீவி’ படத்தின் மீதிக் கதை.
ரொக்க புலி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் வழக்கமான தனது வில்லத்தனமான நடிப்பை விட்டுவிட்டு நையாண்டி கலந்து வித்தியாசமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டுவதற்காக தலைமுடி மற்றும் தாடி முழுவதும் நரைத்த, தாத்தா போன்ற ஒரு கெட்டப்பில் வரும் அவரது நடிப்பு இப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
பாண்டியாக வரும் சண்முகப் பாண்டியன் கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஒட்டாவிட்டாலும் பிறகு அந்தப் பாத்திரம் பருத்திவீரன் கார்த்தி போல ஒரு ரவுடியாக பார்ப்பவர்கள் மனதில் ஒட்டிக் கொள்கின்ற அளவுக்கு மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் கதாநாயகனுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக எதிரிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகளில் வேறு எந்த நடிகர் சாயலும் இல்லாமல் தனது பாணியில் வெளிப்படுத்தி நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்ணிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார்.கஞ்சா எங்கெங்கு இருக்கிறது என்று நாயகனை வைத்து மடக்கும் காட்சியில் அவர் தனது துடிப்பான நடிப்பு மூலம் காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்குத் தகுந்தவாறு சிறந்த நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.
காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். லாரி டிரைவராக முனீஷ் காந்த், காவல்துறை அதிகாரியாக வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். அவரது பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘வஸ்தாரா’ பாடல் நன்றாக வந்திருக்கிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் படம் குழுவதும் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கிறது. பல காட்சிகளை மிகையில்லாமல் எதார்த்தமாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
இந்தப் படத்தை இயக்கியுள்ள பொன்ராம் ஏற்கெனவே வியாபார ரீதியிலாக வெற்றி பெற்ற ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’,’ ரஜினி முருகன்’ போன்ற படங்களை இயக்கியவர். இவரது படமென்றாலே காமெடியும் காதலும் இருக்கும் இதில் கூடுதலாக ஆக்சனையும் சேர்த்து மாறுபட்ட கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறார். வைகை அணை கட்டப்பட்ட பின்னணியை மையமாக வைத்து கதையை அமைத்திருக்கும் இயக்குனர் பொன் ராம் மீண்டும் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.