’சல்லியர்கள்’ திரைப்பட விமர்சனம்!

114

சென்னை:

இயக்குனர் கிட்டுவின் இயக்கத்தில் சேது கருணாஸ், சத்தியதேவி, திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா ஆனந்த், சௌந்தரராஜன் ,மோகன், சந்தோஷ் இவர்களின் நடிப்பில் உருவாகி இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ‘சல்லியர்கள்’.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இலங்கையில் உள்ள தமிழ் ஈழத்து மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் சொல்ல முடியாத அளவுக்கு நடந்தேறி இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நிகழ்ந்த போர்ச் சூழலில் போராளிகள் பதுங்கு குழி அமைத்து, தற்காத்துக் கொள்ளவும் உரிமையை நிலைநாட்டவும், மண்ணையும் மக்களையும் காக்க தமிழ் பிரதேச மக்கள் ஆயுத போர் செய்கின்றனர்.  போரை எதிர்கொள்ளும் ஒரு படை ஆயுதங்களோடு போரிடும் போது இழப்பை தவிர்க்கவும் அதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவ பிரிவு ஒன்று செயல்படுகிறது. ராணுவத்திற்கு எதிராகப் போராளிகள் போராடிய போது காயம்பட்டவர்களைக் காப்பாற்றவும் சிகிச்சை அளிக்கவும் பதுங்கு குழிக்குள் மருத்துவமனைகளை அமைத்துக் காப்பாற்றினர். அப்படி அங்கே மருத்துவச் சேவையாற்றிய செவிலியர்கள் தான் சல்லியர்கள் எனப்படுகிறார்கள். அங்குள்ள பதுங்கு குழிகளில் உயிரை துச்சமென நினைத்து சரியான உணவு, தூக்கம் இல்லாமல், போராளிகள் மட்டுமல்ல காயம்பட்ட எதிரிகளையும் காப்பாற்ற போராடும் உன்னதமான ஒரு பெண்  டாக்டராக செயல்படும் சத்யாதேவி  தன்னுடைய தியாகத்தால் காயம்பட்ட போராளிகளுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பும் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவுவதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார். இந்த சூழலில் சிங்கள இராணுவம் இந்த மனிதாபிமான பதுங்கு குழி தளத்தை குறிவைத்து அழிக்க திட்டம் போடுகிறது. ஆனால் மருத்துவ சேவையாற்றும் அவர்களுக்கு போராளியாக இருந்தாலும் ராணுவத்தினராக இருந்தாலும் ஒன்றுதான்.உயிருக்குப் போராடுபவர்களை மனிதநேயத்தோடு காப்பாற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்த்தும் படம்தான் ‘சல்லியர்கள்’

இந்தப் படத்தில் டாக்டர் நந்தினி கதாபாத்திரத்தில் சத்யாதேவி நடித்துள்ளார்.ஒரு எதார்த்தமான, அளவான நடிப்பு , அதற்கேற்ற உடல் மொழி, வசனம் என்று கச்சிதமாகப் பொருந்துகிறார். ஒரு உண்மையான டாக்டரா என்று எண்ணும் அளவுக்கு அடிபட்டு வரும் போராளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையின் போது காட்டும் வேகம், துணிவு ஒரு சக்திவாய்ந்த நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.

டாக்டர் செம்பியனாக வரும் மகேந்திரன், தோற்றம் நடிப்பு என்று சரியாகப் பொருந்துகிறார்.ஒரு நடிகர் நடித்தது போல் இல்லாமல் ஒரு உண்மையான டாக்டராகவே தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியின் தந்தையாக மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற அளவிற்கு மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு  தத்தம் கதாபாத்திரங்களுக்குரிய நடிப்பை வழங்கி உள்ளார்கள்.காதலர்களாக வந்து போராளிகளாக மாறும் நாகராஜ் – பிரியலயா ஜோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் தமிழீழ நிலப்பரப்பையும் போர்க் கொடுமைகளையும் சிங்களக் கொடூரங்களையும் காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.

கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.வைரமுத்து மற்றும் இயக்குநர் கிட்டு ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் கூடுதல் பலம் என்றே சொல்ல வேண்டும்.

கதை எழுதி இயக்கியிருக்கும் தி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத பலவற்றையும் ஒரு திரைப்படத்திற்கு ஏற்றவாறு மிகுந்த சுவாரசியம் கலந்த முறையில்  தமிழர்களின் வீரத்தையும், எதிரியானாலும் உயிர்காக்கும் உன்னதப் பெருமையையும் சொல்லி இருப்பதை பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ‘சல்லியர்கள்’  படம் ஈழ தமிழர்களின் வரலாற்றில் ஒன்று.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.